/* up Facebook

May 25, 2013

சுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்


சில நாட்களுக்கு முன் தமிழ்மணத்தில் KRP Senthil பகிர்ந்த அந்த விடியோவை என்னால் ஒரே தடவையில் பார்க்க முடியவில்லை. நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. தொண்டை கிழியக் கத்திச் செத்துவிட மாட்டோமா என்றிருந்த‌து.

ஆனால் பின்னால் ஒலித்த உறுதியான குரல் காதுகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
"பல்லாயிரக்கணக்கானப் பெண் குழந்தைகளும் சிறுமிகளும் நாள் தோறும் பலாத்காரம் செய்யப்படுவதும், சிறு சலனம் கூட இல்லாமல் இது குறித்து நிலவும் பெருத்த மௌனமுமே என்னைப் பெருஞ்சினம் கொள்ள வைக்கின்றன" 

அந்தக் குரலுக்குச் சொந்தமானவர்:

சுனிதா கிருஷ்ணன்
இவர் மனிதப் பிறவி தானா? பெண் தானா?
நாலாயிர‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு மேல் பாலிய‌ல் தொழில், ம‌ற்றும் க‌ட‌த்த‌லிலிருந்து காப்பாற்றியிருக்கும் இவ‌ரை என்ன‌வென்று சொல்வ‌து?

பதின்ம‌பருவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான இவர் அதனால் துவண்டு விடாமல் பழகிய ரௌத்திரம் விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்திருக்கிறது!

ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? வணங்குகிறேன் சுனிதா உங்களை.

ஐந்து வயது கூட நிரம்பாத பிஞ்சுகளுக்குக் கூட நேரும் கொடுமைகளை இவர் விவரிப்பதைக் கேட்கக் கூட நம்மால் முடியவில்லை. அடி உதை, சித்ரவதை எல்லாம் தாங்கிக் கொண்டு களத்தில் நின்று போராடி இவர் மீட்ட குழந்தைகள் ஆயிரமாயிரம்.

1996 ல் இவர் தொடங்கிய‌ ப்ர‌ஜ்வாலா அமைப்பு ஐந்து முக்கிய‌ பணிக‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்துகிற‌து: த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கை, காப்பாற்றுத‌ல், ம‌றுவாழ்வு, ஒருங்கிணைப்பு, பிர‌சார‌ம்.

த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் முக்கிய‌மான‌து பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ளுக்குக் க‌ல்வி கொடுப்ப‌து. அத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளும் அதே பாதையில் சென்றுவிடாம‌ல் த‌டுப்ப‌து. ஐந்து குழ‌ந்தைக‌ளுட‌ன் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ இவ்வ‌மைப்பு இப்போது ஐயாயிர‌ம் சிறுமிகளுக்கு ம‌றுவாழ்வு அளித்துள்ள‌து.

பேருந்து மற்றும் நிலைய‌ங்க‌ளில் சோதனை நடத்தி குழ‌ந்தைக‌ள் க‌ட‌த்த‌ப் ப‌டுவதையும் பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ள் அதே சுழ‌ற்சில் சிக்குவதையும் த‌டுப்பது. இவ்விடங்களில் நடத்தப்பட்ட சோதனை முல‌ம் ம‌ட்டும் 1700 சிறுமிகளும் மொத்த‌மாக‌ 3200 சிறுமிகளும் ப்ர‌ஜ்வாலா மூல‌ம் காப்பாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

அத்தொழிலிலேயே சிறுவ‌ய‌து முத‌ல் ஈடுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ சிறுமிக‌ளைக் காப்பாற்றுவ‌தும் ம‌றுவாழ்வு அளிப்ப‌தும் சவாலான‌ செய‌ல் தான் என்றும் கூறுகிறார் சுனிதா. அவ‌ர்க‌ள் உண்மையில் ம‌றும‌ல‌ர்ச்சி அடைய‌ வெகுகால‌ம் ஆகிற‌தாம்.

த‌ன‌து புனித‌ப் போரில் சுனிதா ச‌ந்தித்த‌ கொடுமைக‌ளும் கொஞ்ச‌ந‌ஞ்ச‌ம‌ல்ல‌. க‌ட‌த்த‌ல் ர‌வுடிக‌ளிட‌மிருந்து சிறுமிக‌ளைக் காப்பாற்றப் போன‌ இட‌த்தில் வாங்கிய் ஆடி உதையால் இவ‌ர‌து வலது காது கேட்கும் திற‌னை இழ‌ந்திருக்கிற‌து. ஆனால் த‌ன‌து இழ‌ப்பு தான் காப்பாற்ற‌த் த‌வ‌றிய‌, அல்ல‌து காப்பாற்றியும் உயிர‌ழ‌ந்த‌ குழ‌ந்தைக‌ளின் இழ‌ப்புக்கு முன் ஒன்றுமில்லை என்று நெஞ்ச‌ம் உருகுகிறார் சுனிதா. (அதை என்னால் மொழிபெய‌ர்த்து எழுத‌ முடியாது. ம‌ன்னியுங்க‌ள்.)

தன் போராட்டத்தில் மிகப்பெரிய சவாலாக இவர் சொல்வது, ரவுடிகளிடம் அடிவாங்குவதோ, மிரட்டல்களோ இல்லை; பாதிக்கப்பட்டவர்களை நம்மில் ஒருவராகப் பார்க்கும் மனப்பான்மை சமூகத்தில் இல்லாதது தான், என்கிறார்.

அவர்கள் மீது பரிதாபப்படுபவர்கள் கூட, பண உதவி செய்பவர்கள்கூட தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பயப்படும் அறிவீனத்தை எண்ணி மனம் வெதும்புகிறார்.

சமூகத்தில் இந்த மனப்பான்மை இருக்கும் வரை இவர்களுக்கு மறுவாழ்வு என்பது மிகக்கடினமான ஒன்று தான் என்பது தான் இவரது ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்.

இறுதியாக‌, சுனிதா அழுத்தமாக வலியுறுத்துவது, "சக மனிதர்களாக இவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள். ஏனெனில் எந்த ஒரு மனிதப்பிறவிக்குமே நேரக்கூடாதது இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கிறது." 

ஏதாவ‌து செய்ய‌வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர‌து போராட்ட‌த்துக்கு இய‌ன்ற‌வ‌ரை உத‌வுவோம். நாம் செய்ய‌க் கூடிய‌ மிக‌ச்சிறிய‌ செய‌ல் அது ம‌ட்டும் தான்.

Must Read:



ம‌ன‌ம் இள‌கிய‌வ‌ர்க‌ள் இந்த விடியோவைப் பார்க்க‌வேண்டாம் என்று இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி - சிதறல்கள்
...மேலும்

May 24, 2013

வவுனியாவில் 7 வயது மாணவி பாலியல் பலாத்காரம்'



வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவியொருவர் அடையாளம் தெரியாதவர்களினால் பாலியல் குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சேனைப்பிலவு மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஸ்கரித்துள்ளனர்.

ஊர் மக்களும் கூடி, பாடசாலையைத் திறக்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குற்றச்சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, கூடியிருந்த பொதுமக்களைக் கலைந்து போகச் செய்துள்ளனர். இந்தப் போராட்டம் காலை 3 மணித்தியாலங்கள் நீடித்ததாகவும், போராட்டம் காரணமாகவும், மாணவர்களின் பகிஸ்கரிப்பு காரணமாகவும் பாடசாலை வியாழனன்று செயற்படவில்லை என்றும் தெரியவருகிறது.

செவ்வாயன்று பாடசாலை முடிந்து வீடு சென்றவேளை, 7 வயது சிறுமியொருவரை அடையாளம் தெரியாதவர்கள் கடத்திச் சென்று காட்டுப்பாங்கான காணியொன்றில் பாழடைந்த கிணற்றருகில் அவர் மீது பாலியல் குற்றம் புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாழடைந்த கிணற்றைச் சுத்தம் செய்வதற்காகச் சென்றவர்கள் பற்றைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது, மாலை நாலரை மணியளவில் சிறுமியின் முனகல் சத்தம் கேட்டு, அவரைக் கண்டுபிடித்திருக்கின்றனர். சட்டையில் இரத்தம் தோய்ந்த நிலையிலும் வாயிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்த நிலையிலும், கீறல் காயங்களுடனும் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

'பொலிஸ்காரர் மீது சந்தேகம்'

இந்த விடயம் தொடர்பாக மாங்குளம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இது விடயத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதாகவும், இதனால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும் எனவே, குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இதுதொடர்பில் விசேட குழு அமைத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தன்னிடம் மாங்குளம் எஸ்.எஸ்.பி சம்பிக்க சிறிவர்தன உறுதியளித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

நன்றி - பி.பி.சி
...மேலும்

May 23, 2013

அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி


வெயிலிலும், காற்றிலும், மழையிலும் உழைத்துக் காப்புக் காய்த்துக் கன்னிப்போன தோல்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் அவர்களின் உயிரை ஒட்ட வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது நெஞ்சுரம் மட்டும்தான்.

இலைதழை அடைத்த வாசல்சந்துகளின் வழி
அவள் கவைகூட்டித் தணல் தள்ள
புகைசூழ்ந்து வேகும் சுண்ணாம்புச் சூளையில்

குருவியும் பறக்க அஞ்சிக் கூடிருக்கும் வெயிலில்
அவள் மடிகூட்டிச் சேர்த்தெடுத்து
மலையென்று குவிந்திருக்கும் பருத்தியில்

இருபது நிமிடப் பேருந்துக் காத்திருப்பால்
களைத்த முகங்கள் இளநீரில் இளைப்பாறும் சாலையொன்றில்
தீமீது தவம்புரிந்து அவள் உருக்கி ஊற்றும் தாரில்

தலையெல்லாம் மயிரும் மயிரெல்லாம் நூலும் சுமந்திருக்க
அக்குள் ரவிக்கையின் வியர்த்த வெள்ளை வரிபடிய
அவள் சுற்றித் தேய்ந்திருக்கும் கதர்க்கடை ராட்டையில்

பேசாத சாமிக்கு ஆச்சாரம் துலங்கவந்து
யாரெல்லாமோ சாத்த
முக்குக்கடை வாசலில் பாலுரிஞ்சும் குழந்தையுடன்
பத்துவிரல் உழைத்து அவள் கட்டித் தந்திருக்கும் மாலையில்

குருடர்கள் உணராத நிறங்களென விரவி ஒளிர்கிறது

அவள் கருப்பை முட்டை வெடித்துச் சிதறும் உதிரம்

______________________________________________

சமூகத் தளங்களில் பங்கெடுக்க ஆரம்பித்திருந்த பதின்மக் காலகட்டங்களில் இந்த மகளிர் தினம் சார்ந்த கொண்டாட்டங்களில் பெரிய ஈடுபாடு இருந்தது. காரணம்… இருந்த ஆர்வங்களுக்கேற்ற வாய்ப்புகளை அத்தகைய கொண்டாட்டங்களும் கொண்டுவந்து கைகளில் சேர்த்தன. அந்த அங்கீகார, புகழ்ப் போதைகளை விலக்கிய போதி மரங்களும் விரைவில் கிடைத்தன. சில வருடங்கள் இருக்கும். அப்போதுதான் அறிமுகமாகியிருந்த தமிழ்வலைப்பதிவுகளில் எண்ணிவிடக்கூடிய மிகச்சில பெண்பதிவர்களே இருந்தார்கள்.

அப்போதும் இப்படியொரு மகளிர் தினம் வந்தது. பெண்பதிவர்களில் சிலருக்கு அது அதீத ஆர்வம் தந்து கொண்டாட வைத்தது. பரபரவென்று பெண்பதிவர்களின் பட்டியலைத் தயாரிப்பதிலும், அந்த வெற்றிகளை அறிவித்துக்கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்கள். இது குளிரூட்டிய அறைக்குள் விரைத்துவிடாதிருக்கக் கணினி வெப்பம் தேடி வந்திருக்கும் வசதியான சிறுகூட்டம்தானே? இந்தக்கூட்டத்தின் வெற்றிக்கும் மகளிர் தினத்துக்கும் எப்படி முடிச்சிட முடியும்? என நினைத்துக்கொண்ட மனம் விலகியே இருந்தது.

இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கையில் அசுரன் தன் பதிவில் அடித்தட்டுப் பெண்களின் படம் ஒன்றைப் போட்டு “மகளிர் தினம் யாருக்கு?” என்று ஒற்றைவரியை மட்டும் பொட்டிலடித்தாற் போல் போட்டிருந்தார். அது பிடித்திருந்தது. எனவே நன்றி சொல்லிப் பின்னூட்டம் இட்டேன். அவரின் அமைப்போ அரசியலோ அல்லது வேறு எதுவுமோ தெரியாது. ஆனால் அந்தக் கேள்வியின் நியாயம் அங்கே பிடித்து வைத்தது.

இப்போது தங்கள் அமைப்பை, அரசியலை முன்வைத்து இந்தத் தளத்தை வினவு நண்பர்கள் நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து வாசித்தாலும் கருத்தெழுதுவது எப்போதாவதுதான். அப்படி எழுதுகிற சமயத்திலும், சில தனிமடல் உரையாடல்களிலும் அவர்களோடு நான் அதிகம் காட்டியது சண்டைக்கோழி பாவனைதான். வேறுமாதிரி சொன்னால் விமரிசனங்கள்.

விமர்சனங்களை முன்வைப்பவர்களில் பலவகை இருக்கலாம். விரும்புபவர்கள்  சறுக்கல்களைச் சுட்டிக்காட்டவும் விமர்சிக்கலாம், அதையே எதிர்மறையாக, ஒழிக்க விரும்புவர்கள் சறுக்கல்களையே கொண்டாட்டமாகவும் விமர்சிக்கலாம். இதில் வினவுக்கு நான் விமரிசனங்களாக வைப்பவை எந்த வகையைச் சேரும் என வாசிப்பவர்களோ, வினவு நண்பர்களோ அறிந்துகொள்ள முடியும் என்றுதான் கருதுகிறேன். அப்படிப் புரிந்துகொண்டவர்கள் அதை எனக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் புரிதலின் புள்ளியில்தான் இப்போது வினவுக்காக இந்த இடுகையை எழுத ஆரம்பித்தேன். ஏற்கனவே வேறு ஒரு தொடர் எழுத மடல்வழி உடன்பாடு நிகழ்ந்து பிறகு அதற்கான தயாரிப்புகளும், வாசிப்பும் தடைபட்டதால் எழுத இயலவில்லை. அந்தச் சோம்பேறியிடம்தான் இப்போது மகளிர் தினம் சார்ந்து கட்டுரை கேட்டார்கள். இதையும் தாமதமாகவே இப்போதுதான் தர முடிந்தது. அதற்காக மன்னிக்கவும்.

சனநாயகமும், விடுதலையும் சட்டப்படி வந்து அறுபத்திச் சொச்சம் ஆண்டுகள் கழித்து மகளிர் மசோதா ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடும், அதை இன்னொரு சபையில் என் பிணத்து மீதுதான் நிறைவேற்ற முடியும் என சவாலிட்டு நிற்கும், உள் ஒதுக்கீடு ஏன் தேவை, ஏன் தேவையில்லை என விவாதித்து நிற்கும் நம் அரசியலை எழுதலாம். நாளொன்று பெண் ஒருத்தியின் மீதான பாலியல் வன்முறையின்றிக் கழிகிறதா என ஐ.நா வின் புள்ளி விவரம் வரை குறிப்பிட்டு எழுதலாம். அவளின் மீது ஏற்றிவைக்கப்பட்ட கற்பு இறக்க முடியாத சுமையாக  பேரழிவு புரிவதையும், எங்கே இறங்கிவிடுமோ எனப்பதறிப் பண்பாட்டுத் தட்டிகளோடு அலையும் பெண் கற்பின் காவலர்களையும் எழுதலாம்.

பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் எனப் பேசிக் கொண்டிருக்கும்போதே  மேலே வந்தவர்கள் சந்திரிகாக்களாய், செயலலிதாக்களாய், சோனியாக்களாய் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று எழுதலாம்.  போகிற போக்கில் “பெண் உடல் நுகர்வுப் பொருள் அல்ல” என்பதும் விளம்பரமாகி அதைப் பொதுசனத்திற்குச் சொல்வதற்காய் ஒரு முக்கால் நிர்வாணப்பெண் தன் உடல்மொழி கொண்டு நிற்பாளோ  என்றும் தோன்ற ஆரம்பித்திருக்கும் கணினி யுக அழகிப் போட்டிகளை எழுதலாம். கொஞ்சம் எழுத்தும், வாசிப்பும் இருந்துவிட்டால் “மகளிர் தின” த்துக்கு எழுத விடயங்கள் அதிகம்தான்.

எனக்கு இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றியது வேறுவிதமானது. அவை சில பெண்களைப் பற்றியது. அவர்கள் மகளிர் தினத்துக்கு எந்த மேடையிலும் வராதவர்கள், எந்த ஊடகத்திலும் எழுதாதவர்கள், புரட்சியை அறியாதவர்கள்; ஆனால் தன்னளவில் வாழ்வை வைராக்கியத்தோடு ஒரு போராட்டமாக நடத்தியவர்கள். வறட்டுக்கரை மணலில் நான் ஆடோட்டித் திரிந்த காலத்திலிருந்து என்னால்  கவனிக்கப்பட்டவர்கள்; என் தோல்விகளின் விரக்தியில், கனவுகளில் வந்து கைபிடித்துத் தூக்கிவிட்டவர்கள்; வாழ்வு என்பது துணிச்சலிலும், நேர்மையிலும் உள்ளதென்று உணரவைத்தவர்கள் அந்தப் பெண்கள்.
_____________________________________________________

தாயா…. தாயா பண்ணைகளின் ஏவலில் கூலி வேலைக்காரி. கணவன் இறக்க ஒரே மகன். மழையோ, வெயிலோ கூலிக்குப் போனால் சோறு அல்லாவிட்டால் பட்டினி.  குடிசைக்குக் கூரையும், கட்டிக்கொள்ளத் துணியும், கால்வயிற்றுக் கஞ்சியும் போதுமென்ற நிறைவை நெஞ்சில் நிறுத்தியிருந்தால் தாயாவின் பின் அவர் மகனும் அதே பண்ணைகளுக்கு ஒரு அடிமையாய் வந்திருப்பார். எதோ ஒரு தீயும்,  சமூகம் தந்த ஆறாத காயங்களும்  கனன்று கனன்று கனவை விதைத்திருந்தது. எப்பாடு பட்டேனும் மகனைப் படிக்க வைத்துப் பட்டணம் அனுப்பி விடுவது. கிராமங்கள் தேசத்தின் முதுகெலும்போ, கலாச்சாரத்தின் தொல்லியல்போ மட்டுமல்ல. கிராமங்களின் வேர்கள் சாதிப் புற்றுநோய்க் கிருமிகளின் வெகுநல்ல தங்குமிடங்களும் கூட. தயா இதை அறிந்திருந்ததே கூடத் தன் மகனை அதன் முடிச்சுகளிலிருந்து விடுவித்து அனுப்பிவிடும் கனவினை விதைத்திருக்கலாம். எத்தனையோ போராட்டங்களைத் தாண்டி ஒற்றை மனுசியாய் அந்த நினைப்பை நிறைவேற்றினார்.

மலையேறி விறகு வெட்டிப் பொழுது விடியச் சந்தையில் விற்று வீடு திரும்பும் வாழ்க்கை பழனிக்கு. நெடுநெடுவென்ற உயரமும் கன்னத்தில் சிறுபந்தாய் அடக்கிய வெற்றிலைக் குதப்பலும் வாயில் சீலையும் வேத்து வரி விழுந்த ரவிக்கையும் அவர் உருவம். கூடவே கையில் வெட்டிக் கொண்டு போய் விற்ற கட்டிலிருந்து உருவிய ஒரு நீள விறகுக் கட்டையும். பொழுது விடியும் முன்பு பொம்பளை ஒருத்திதானே தனியாகப் போகிறாள் என்று காதுத் தோட்டுக்கோ, வேறெந்தக் கருமத்துக்கோ பின்னால் வந்த ஆம்பளை ஒருவனைக் கையிலிருந்த விறகுக்கட்டையாலேயே ரத்தம் வர மொத்தி அனுப்பியபின் வீரப் பழனியாக வெளித்தெரிந்தவர். அதற்குப் பிறகு ஊரில் ஆம்பிளைகள் சிலர் பழனி எதிர்க்க வந்தால் வெளிக்குப் போவது போல் வேலியோரமாய் உட்கார்ந்து கொண்டது பெண்களுக்கு நகைச்சுவைக் கதைகளாயின.  பானை உடைந்ததுக்கும் பதறி அழுத பெண்களுக்குப் பழனி முன்னுதாரணமும் ஆனார்.

ஒரு சிறுநகரத்தின் கல்யாண மண்டபம். வந்த சனம் தின்றது செரிக்க வழி தேடிக்கொண்டிருக்கையில்தான் அங்கே மாப்பிள்ளையைத் தேடும்படி ஆனது. பொண்ணு பார்க்க வந்தபோது நல்லாப் பார்க்கவில்லையென்றும், இன்றுதான் பெண்ணுக்கு ஒருகண் மட்டுமே உண்டென்றென்று தெரிந்ததென்றும் சொல்லி தாலிகட்ட முடியாதென்று ஓடிப்போனார் மாப்பிள்ளை.  ஊரும், உறவுகளும் ஏளனப்படுத்தி நிற்க அதே மண்டபத்தின் ஒரு மூலையிலிருந்த தன் கணவனை அழைத்து வந்து “என் தங்கைக்கு நீயே தாலிகட்டு எவன் என்ன சொல்வான்னு பாக்கறேன்” என நடத்தித் தன் நான்கு குழந்தைகளோடு தங்கைக்குப் பிறந்த ஒரு குழந்தையையும் வளர்த்தெடுத்து அத்தனை பேரையும் நல்ல வேலைகளுக்கனுப்பிய லட்சுமி டீச்சர், வாழ்வின் அத்தியாயங்களில் இன்னொரு பெண்.

மூன்று குழந்தைகளும், பால் வியாபாரமும் விக்கித்து நிற்க விபத்தொன்றில் இறந்துபோன பால்காரரின் மனைவி மாரம்மாள். பொட்டையும், பூவையும் அழித்துத் தாலி பிடுங்க வந்த உறவுகளிடம் முடியாதெனத் திருப்பியனுப்பி மூன்றுமாதம் கழித்துத் திருமணமாகாதிருந்த உறவினர் ஒருவரிடம் தானே சென்று “என் வாழ்வுக்கு ஒரு ஆண் தேவை, நீ என்னைக் கல்யாணம் செய்துகொள்ள விருப்பமா?” எனக் கேட்டு மணமும் முடித்து, இருந்த குழந்தைகளோடு தலைநிமிர்ந்த வாழ்வும் சூடி வாழ்ந்தது அவர் கதை.

தாயாவும், பழனியும், லட்சுமியும், மாரம்மாளும் நம்மோடுதான் பயணிக்கிறார்கள் ஆனால் வேறு வேறு பெண்களாக. அவர்கள் சீதையும், கண்ணகியும், ஐஸ்வர்யாராயும், ரஞ்சிதாவும் அல்ல, அவர்கள் வேறு பெண்கள்.

______________________________________

இந்தப் பெண்களின் பிரச்சினைகள் பற்றிய அக்கறை பெண்ணியம் போற்றும் பெரும்பாலான அமைப்புகளுக்கும் கூட இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் நமது சமூகங்களில் கடந்த காலங்களில் பங்குபெற்ற, கவனித்து வந்த மகளிர் தினக் கொண்டாட்டங்கள் பலவற்றிலும் இவர்களுக்கான குரல்களும், இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேவையான முகங்களும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்றே உணர்கின்றேன். வெள்ளைக்காலர் வேலைகளை எட்டிப்பிடித்திருக்கிற பெண்களுக்கு அவரவர் பணிபுரிகின்ற வேலைசார்ந்த சங்கங்களேனும் அவர்கள் பணியிடங்களில் பெண் என்ற ரீதியில்  பாதிக்கப்படுகிறபோது கொஞ்சமேனும் குரல்கொடுக்க முன்வருகின்றன. இயன்றால் நீதிமன்றங்களுக்கும், ஊடகங்களுக்கும் கூட எடுத்துச்செல்ல முடிகின்றன.

ஆனால் உடல் உழைப்பை மட்டுமே நம்பி, பொருளாதாரத்தின் ஆகக் குறைந்த அடுக்குகளில் வாழும் பெண்களுக்கு அவர்களின் பணி சார்ந்து நடக்கிற எத்தகைய வன்முறைகளாயினும் அவை வெளியுலகுக்குத் தெரியவராமலே முடிந்து விடுகின்றன. புகார் கொடுக்கக் காவல் நிலையம் போனால் அங்கே இன்னொரு முறை அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. பாதிப்பை ஏற்படுத்தியவர்கள், சட்டப்படி மரணதண்டனை வரை பெற வேண்டிய குற்றவாளிகள் என்றாலும் கூட ஒரு வட்டச் செயலாளர் பெயரையோ, எம். எல். ஏவின், எம். பி யின், மந்திரியின் பெயரைச் சொல்லி சமூகத்தில் சகல செல்வாக்கோடும் உலவ முடிகிற கொடுமை நமக்கே உரித்தான “சட்டத்தின் ஆட்சியின்” லட்சணம்.

இத்தனை கண்ணிகளும் தங்களைச் சுற்றி வேடன் விரித்திருக்கும் வலைகளாகப் பரவிக்கிடக்கிற ஒரு சூழலில்தான் தாயாவும், பழனியும், மாரம்மாக்களும் வாழ்ந்து வருகிறார்கள். வெயிலிலும், காற்றிலும், மழையிலும் உழைத்துக் காப்புக் காய்த்துக் கன்னிப்போன தோல்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் அவர்களின் உயிரை ஒட்ட வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது அவர்களிடம் இருக்கும் நெஞ்சுரம் மட்டும்தான். வாழ்வு தொண்டை வரளும் அவர்களின் தாகத்துக்கான நீரை ஒரு உச்சி மலையில் வைத்திருக்கிறது. ஒரு நைந்துபோன தொங்கும் கயிறு கொண்டே அவர்கள் மலையேற வேண்டும், அதுவும் எந்த நேரத்திலும் அறுந்து சாகடிக்கலாம்.

அப்படியொரு நிலையிலும் தளராது சுமந்திருக்கும் அவர்களின் உறுதி எனக்கு நிறையக் கற்றுத் தந்திருக்கிறது. அந்த அவர்களின் வலிகளையோ வாழ்வையோ நாம் இலக்கியத்தில் எழுத வேண்டும். கலைகளில் காட்சிப்படுத்த வேண்டும், ஆவணங்களாகப் பதிவு செய்யவேண்டும். அது நமது வாழ்வின் சாட்சியாய், வரலாற்றின் படித் தடங்களாய் தலைமுறை தாண்டியும் சிந்திக்க வைக்க வேண்டும். எழுதவும், பேசவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிற பெண்களுக்கு இந்தக் கடமை நிச்சயம் இருக்கிறது என்பதை உணர்கிறேன்.

அரை நூற்றாண்டுக்கும் மேலான பெண்ணுரிமைப் போராட்டங்களின் பயன் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பெண்கள் தங்களின் உரிமைகளை உணர்ந்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் பெண் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையான சட்டங்கள் கொண்டு ஒடுக்கி வருகின்றன. ஆனால் நமக்கு இன்னும் அவை சாத்தியமாகவில்லை. இங்கே தன்னந்தனியாக ஒரு பெண்ணாகச் செய்ய முடிகிற பயணங்களை, வேலைகளை நாம் நம் அமைப்பில் ஒரு ஆண் துணையில்லாமல் செய்வது பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறது.

ஒரு வெளியூருக்குப் போய் விட்டுத் தனியாக ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்குவதற்கான சுதந்திரத்தையோ, பாதுகாப்பையோ கூட நாம் இன்னும் எட்டிப் பிடிக்காமல் இருக்கிறோம் என்பதையெல்லாம்தான் மகளிர் தினத்தில் நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் செய்தித் தாள்களில் பார்த்த மகளிர் தினக் கொண்டாட்டப் புகைப்படங்களில் கனிமொழியும், சுதா ரகுநாதனும் சிரிப்பதைத் தாண்டி நமது நிதர்சனங்கள் குறித்த கவலைகள் பேசப்படுவதில்லை. பல பத்திரிக்கைகள் செய்யாத, கவனிக்காத பக்கத்தைக் கையிலெடுத்து வித்தியாசமான மகளிர் தினத்தைத் தன் வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக “வினவு” க்கு நன்றி.

நமது பெண் விடுதலையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நமது சமூக அமைப்பை உள்வாங்கவேண்டும். பெண்களே என்றாலும் எல்லோரின் பிரச்சினைகளும் ஒன்றல்ல. அது பொருளாதாரம் சார்ந்த மேல்தட்டு, நடுத்தரவர்க்கம், கீழ்த்தட்டு என்றுகூடப் பிரித்துவிட எளிதானது அல்ல. படித்த, படிக்காத பெண்கள் என்று வகைப்படுத்திவிட முடியக்கூடியதும் அல்ல.

சாதி………ஆமாம், சாதி சார்ந்தும் பெண்களின் பிரச்சினைகள் வேறுபட்டுக் கிடக்கின்றன நம் சமூகத்தில். உயர்சாதிப் பெண்களின் விடுதலை ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவதாக இருக்கிறது. ஒரு தலித் பெண்ணின் விடுதலை என்பது ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல, இன்னொரு பெண்ணிடமிருந்தே சாதி அடக்குமுறைக்கெதிராக விடுதலை அடைவதாகவும் அது இருக்கிறது. தலைநோவு, கைகால் குடைச்சல் வியாதியும், மூச்சுவிடவே ஆக்சிஜன் வேண்டியிருப்பதும் ஒரே பிரச்சினை அல்ல. எனவே பெண்கள் சமத்துவம் பற்றிப் பேசினால் அதில் தாயாவும், பழனியும், மாரம்மாளும் கூடப் பேசப்படவேண்டும். ஏனென்றால் அவர்கள் வேறு பெண்கள்.

அவரது வலைப்பூ முகவரி: http://selvanayaki.blogspot.com/

நன்றி - வினவு
...மேலும்

May 22, 2013

பெண் மீதான பாலியல் ஆதிக்கம் மற்றும் அத்துமீறல் : ஒரு காட்சி - கொற்றவை



துர்வாசருக்கு 1 வருடம் சேவை செய்ய வேண்டும் என்ற ஆணையின் படி க்ருதை (குந்தி) அவரது ‘மனம் கோணாமல்’ சேவை செய்ய வேண்டும். அது ஏன் பூப்பெய்திய பின் அவர் அதற்கு தேர்வு செய்யப்படுகிறார். ஒரு வருடம் தன்னோடு குந்தியை அனுப்பிவைக்கவில்லை என்றால் கடும் சாபத்திற்கு உள்ளாகும் அந்தக் குலம். இதை இருவகையில் புரிந்து கொள்ளலாம், ஒன்று குழந்தை ஊழியம், பெற்றோர் ஏதோ கடன் பட்டதற்காக உனது குழந்தையை எனக்கு சேவகம் (அடிமையாக) செய்ய அனுப்பு என்று சொல்லும் ஜமீந்தாருக்கும் இவருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. மற்றொரு கோணத்தில் பூப்படைந்து திருமணத்திற்குத் தயாராகும் ஒரு பெண்ணை, திருமணத்திற்கு முன் ஒரு வருடம் தன்னோடு அனுப்பி வைக்கச் சொல்லும் அந்தச் செயல், ’ரிஷி மகான்கள்’ அரசர்களின் மீது எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார்கள், அவர்களை எப்படி மிரட்டினார்கள், அவர்களது பெண் குழந்தைகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதை விளக்குகிறது. 

‘மனம் கோணாமல்’ சேவை செய்ததற்கு துர்வாசர் ஒரு வரம் தருகிறார், ஒரு மந்திரம் கற்றுக் கொடுக்கிறார். அதாவது, குந்தி எந்தக் கடவுளை நினைத்து அம்மந்திரம் சொல்கிறாரோ, அக்கடவுள் நேரிலேயே வந்து விடுவார். வந்ததற்கு கூலியாக தன் அம்சத்தில் ஒரு குழந்தையையும் கொடுத்துச் செல்வார். என்னவகையான கதை இது. நமக்கு ஒருவரைப் பிடித்துப் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அவர் வருவதும், வராமல் போவதும் அவரது விருப்பம், வந்ததற்கு கூலியாக நான் ‘ஏதாவது செய்து விட்டுத்தான் போவேன்’என்பது வல்லுறவாகாதா. 

குந்தி அந்த மந்திரத்தைச் சொல்லி சூரிய ‘பகவான்’ இறங்கி வருகிறார். ’நீ அழைத்ததன் பெயரில் வந்துவிட்டேன், இப்போது என் அம்சத்தில் உனக்கொரு குழந்தை பிறக்கப் போகிறது என்கிறார். அச்சிறுமி, ஐயோ நான் விளையாட்டாக அம்மந்திரத்தைச் சொன்னேன், நீங்கள் வந்ததற்கு நன்றி, எனக்கு குழந்தையெல்லாம் வேண்டாம் சென்று விடுங்கள் என்று கெஞ்சுகிறாள். அதெல்லாம் முடியாது, நான் நிறைய பணம் செலவழித்து ஃபிளைட்டெல்லாம் பிடித்து வந்திருக்கிறேன், சும்மா செல்ல முடியாது, உனக்கு குழந்தையைக் கொடுத்துவிட்டுத்தான் செல்வேன் என்கிறார். குழந்தை எப்படி பிறக்கும் என்ற உயிரியல் உண்மை அறிந்த அனைவருக்கும் இதன் பொருள் என்னவென்று நிச்சயமாகப் புரியும். குந்தி அதை விரும்பாத போது, அங்கு நடந்தது ஒரு பாலியல் அத்துமீறல் அதாவது சிறுமியிடம் வல்லுறவு. 

கொடுப்பதற்கு எத்தனையோ வரங்கள் இருக்க, உனக்கு குழந்தையைக் கொடுத்தே தீர்வேன் என்று சொல்வதன் அவசியம் என்ன? என்னைப் போல், என் அம்சத்தில் உனக்கொரு கணவன் கிடைப்பான் என்று சொன்னாலோ, அல்லது என்னிடம் உள்ள செல்வம் போல் உனக்கும் செல்வங்கள் அனைத்தும் கிடைக்க வாழ்த்துகிறேன், அல்லது நீயும், உன் பெற்றோரும் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று வாழ வாழ்த்துகிறேன், அல்லது - வந்தவர் சூரியன் தானே - இந்த நிலம் செழித்து பயிரெல்லாம் நன்கு செழித்து வளர வரம் தருகிறேன் என்று ஏதாவது சொல்லியிருந்தால் பரவாயில்லை எனலாம். குழந்தையை மட்டுமே கொடுப்பேன் என்று ஒரு ‘ஆண் கடவுள் சொல்வதன் பொருள், நான் வந்துவிட்டேன் உன்னை ‘சும்மா விட்டுச் செல்ல மாட்டேன்’, புணர்ந்தே தீருவேன் என்பதேப் பொருள்...சிறுமி வல்லுறவுக்கு ஒரு சப்பைக் கட்டு.....

நிர்மலா கொற்றவை / முகநூல் வழியாக
...மேலும்

May 21, 2013

சிவரமணி 22 ஆண்டு நினைவு - கவின்மலர்

சிவரமணி
நேற்றுடன் ஈழத்துக் கவிஞர் சிவரமணி இறந்து 22 ஆண்டுகளாகிவிட்டன. 2011 மேமாதம் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை இது..சிவரமணியின் நினைவாக...

'யுத்த கால இரவொன்றில்...'
--------------------------------

'உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள்கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப்போன்று,
நான் என்னைக் கண்டெடுத்துள்ளேன்!’

இந்தப் பளீர் கவிதை வரிகள் ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணிக்குச் சொந்தம்! 20 வயதுக்குள்ளாகவே ஈழத் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் பிடித்த தீர்க்கமான கவிஞர்.

இலங்கையில் இருந்த பெண்ணிய இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த சிவரமணியின் எழுத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளின் மனதில் போர் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அவரது அக்கறை 'யுத்த கால இரவொன்றில் நெருக்குதல்’ கவிதையில் வெளிப்படுகிறது.

'ஒரு சிறிய குருவியினுடையதைப்போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதி தோய்ந்த
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும் காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்!’

1983-ம் ஆண்டே சிவரமணி எழுதிய இந்தக் கவிதை, இன்றைக்கு குழந்தைமையைப் பறிகொடுத்து, முள் வேலி முகாம்களுக்குள் சிறைபட்டுக்கிடக்கும் குழந்தைகள் இழந்த சிரிப்பையும் விளையாட்டுத்தனத்தையும் எத்தனை எளிய வார்த்தைகளில் உரைக்கிறது!

வாழ்வின் நிதர்சனத்தையும் போரின் விளைவுகளையும் அற்புதமாகப் பிரதிபலித்தன சிவரமணியின் கவிதைகள்.

'நேற்றுபோல் மீண்டும் ஒரு நண்பன்
தொலைந்து போகக்கூடிய இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது’

என சிவரமணி அன்றே எழுதிவைத்தது, இன்றைய வெள்ளை வேன் கடத்தல்களைப் பிரதிபலிப்பது!

போராட்டத்தோடு தன்னை உணர்வு பூர்வமாக இணைத்துக்கொண்ட அவருக்கு நீண்ட நெடிய போரும், தனிப்பட்ட வாழ்வின் நெருக்குதல்களும் சோர்வடையச் செய்திருக்கக்கூடும்.

சட்டென்று, ''எல்லாவற்றையும் சகஜமாக்கிக்கொள்ளும் அசாதாரண முயற்சியில் தூங்கிக்கொண்டும், இறந்து கொண்டும் இருப்பவர்களிடையே,நான் எனது நம்பிக்கைகளில் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!'' என்றார். கவித் திறனாலும், அன்பாலும் அனைவரையும் கட்டிப்போட்ட சிவரமணி குறித்தான பதிவுகள் மிகவும் குறைவு. மே மாதம் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் மறக்கவியலாத கொடும் நினைவு களைத் தந்த மாதம். அதே போன்றதொரு 1991-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதியன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் 23 வயது மட்டுமே நிரம்பிய சிவரமணி தற்கொலை செய்துகொண்டார்.மரணிப் பதற்கு முன், தான் எழுதிய அத்தனை கவிதைகளையும் தீயின் நாக்குகளுக்குத் தின்னக் கொடுத்து சாம்பலாக்கிவிட்டு, 'எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்!’ என்று ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். தன் கவிதைகள் சில வற்றை வைத்திருக்கும் நண்பர்களையும் அவற்றை யாரும் பார்க்க முடியாத படிக்குத் தீயில் இட்டு அழிக்கும்படியும் அதுவே தனக்குச் செய்யும் பேருதவியாய் இருக்கும் என்று கோரிக்கையும் வைத்துஇருந்தார்.

ஆனால், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு, எஞ்சிய 22 கவிதைகளையும் பதிப்பித்து 'சிவரமணி கவிதைகள்’ என்ற தலைப்பில் நூலாக்கினார். அதன் முன்னுரையில், 'ஆண்கள் தங்கள் கவிதைகளைத் தங்களின் வெற்றியாகப் பார்க்கிறார்கள். பெண்களோ, தங்களின் வடிகாலாகப் பார்க்கிறார்கள்!’ என்கிறார் சித்ரலேகா. எரிந்த கற்றைக் கற்றையான காகிதங்களில் இருந்த கவிதைகள் அனைத் தும், ரத்தமும் சதையுமாக, உணர்வும் உயிருமாக சிவரமணி படைத்த அக்னிப் பிழம்புகள். நெருப்பே நெருப்பைத் தின்ற விநோதம் அது!

தற்கொலை செய்துகொள்ளாமல் இருந்துஇருந்தால் சிவரமணி இந்நேரம் தமிழ்க்கவிதை களில் மிகப் பெரிய ஆளுமையாகவிசுவரூபம் எடுத்து நின்றிருப்பாள். அவளுடைய பெரும்பாலான கவிதைகள் நம்மிடம் இல்லை. ஆனாலும், எஞ்சிய 22 கவிதைகளின் வழியே சிவரமணி நம்முடன் வாழ்ந்துகொண்டு இருக் கிறாள், அவளே சொன்னதுபோல...

'பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என் தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர்.
ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்!’


...மேலும்

May 20, 2013

மனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு...


சேனைப்புலவில் மனித மிருகத்தால் பாலியல் வன்புணர்வு செய்து சிதைக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டம்.

நெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 07 வயது பாடசாலை மாணவி மனித மிருகம் ஒன்றினால் பாலியல் உயிருக்காகப் போராட்டிக் கொண்டிருக்கிறாள்.

சம்வம் நடந்து இதுவரை காலமும் அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கயவன் கைது செய்யப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் வேதனையையும் விரக்தியையும் தருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்புக்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும்.

அதிகாரிகளின் மெத்தனப்போக்கும், அசண்டையீனமான பேச்சுக்களும், அதிகாரத் தோரணையான எச்சரிக்கைகளும் இந்த மாணவிக்கு நடந்த அநீதியை மூடி மறைப்பதற்கான செயலாகவே காணப்படுகிறது. தடையங்களை அழித்தல், மிரட்டல்கள் மூலம் நீதி கேட்பவர்களை பயமுறுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் மோசமான ஜனநாய மறுப்புக்கள் நடந்தேறி வருகின்றது.  
நாடாளவிய ரீதியில் தொடர்ச்சியாக இவ்வகையான சம்பவங்கள் அதிகரித்த வண்ணமுள்ள நிலையில் இப்படியான கோர நிகழ்வுகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. எனவே குற்றவாளிகளை சட்டத்தின் முன் அடையாளப்படுத்துகின்ற விடயத்தில் துரிதமான செயற்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் செய்யாதவிடத்து சிறுவர்களுக்கு எதிரான வன்முறையையும் துஷ்பிரயோகத்தையும் தடுக்க முடியாது என்பதை அனைவரும் உணருதல் வேண்டும்.

எனவே இம் மாணவியை வன்புணர்வு செய்து சிதைத்த கயவனை கண்டறிவதில் ஏற்படும் காலதாமதத்தைக் கண்டித்தும் அந்த பாடசாலை மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்பதை வற்புறுத்தியும் நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (20.05.2013) காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்து மக்களையும் அணித்திரளுமாறும், கட்சி பேதமின்றி அரசியல் கட்சிகள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், சமுக ஆர்வலர்கள் என அனைவரையும் அணிதிரண்டு இந்த மக்கள் போராட்டத்திற்கு வலுவூட்டுமாறு வேண்டுகிறோம்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு நீதி வழங்கு!

குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து!

உண்மையை மூடி மறைக்காதே!

காவல்துறையே குற்றங்களுக்கு துணை போகாதே!

மாணவியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கு!

நேற்று நெடுங்கேணி சேனைப்புலவு! நாளை உங்கள் விட்டு வாசலில் கூட நடக்கலாம்....

வாருங்கள், ஒன்று சேருங்கள்! குரல் கொடுப்போம் நீதிக்காக...

சேனைப்புலவு மக்களும், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு

ந.தேவகிருஸ்ணனால் இந்துயா வெளியீட்டகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
...மேலும்

May 19, 2013

செங்கடல் - கவின்மலர்



மீளாத்துயர்க்கடலில்
திக்கறியாமல் தத்தளிக்கிறேன்
துயரத்தின் நீலம் சுற்றிச்சூழ
கரங்களை துயர்நீரில் தடைபடாமல்
காற்றின் குறுக்கே வீச முயன்று தோற்கிறேன்.
கரை தென்படாமல்
தொடுவானம் வரை
துயரத்தின் உவர்ப்பு நீலநிறத்தில்
பேரலையாய் நினைவுகள் எழும்பி மோத
நினைவிழக்கிறேன்.

கண்விழிக்கையில்
சமதளத்தில் என் உடல்
கரங்களை வீசுகிறேன்.
துயர்நீர் தட்டுப்படவில்லை.
காற்றில் அலைகின்றன கரங்கள்
கோப்பையில்
துயரக்கலப்படமில்லா
நீலநிறமற்ற நீர்
பாய்ந்து பருகுகிறேன்.
அடைத்த செவிகளில்
இதுவரை ஒலித்த ரீங்காரம்
காணாமல் போன நொடியில்
பேரிரைச்சலொன்று செவிப்பறையைத் தாக்க
சுற்றிலும் துயரத்தின் பேரலைகள்
நினைவுகளாய் மோதும் பெருஞ்சத்தம்
நீலநிற கண்ணீரின் ஆழத்தில்
கண்ணாடி அறையில் நான்
சுவர்களை துளைத்து துயரைக் கடந்து ஊடுருவும்
என் விழிகளுக்கு
கரை தென்படவில்லை
இம்முறை தொடுவானமும்கூட.
பேரலை பொங்கி மோத
மீண்டும் நினைவிழக்கிறேன்.

இப்போது கண்விழிக்கையில்
மண் தரையில் என் உடல்
துயரத்தின் உவர்ப்பில்லை
நினைவுகளாய் பேரலைகள் இல்லை
கரங்களை அசைக்கிறேன்
காற்றில் சப்தமெழுப்பி அலைகின்றன அவை
மகிழ்ச்சி பொங்க
எழுந்து கால்களை ஊன்ற எத்தனிக்கிறேன்
நிலைதடுமாறி வீழ்கிறேன்
ஒரு உயிரற்ற உடல்மீது

நாசிக்குள் மயிர் கருகிய மணம்
குருதியின் வாடை
தொடுவானம் வரை மனிதஉடல்க்ளும் சதைக்கூழமும்
தொலைவிலே துப்பாக்கிகளின் ஓசை
மனிதர்களின் பேரவலக் குரல்கள்
காலடியில் குண்டுகளின் அதிர்வு
துப்பாக்கிகள் மௌனிக்கும் ஓசையும்
துல்லியமாய் கேட்கிறது
கூடுகளிலிருந்து உயிர்பறவை சிறகடிக்கும் சப்தமும்
செவிவழி பாய்ந்து இதயத்தை தைக்கிறது
கண்ணெதிரே துயர்நீரின் கடல்
இப்போது செந்நிறத்தில்
நீலநிறத்தினதைவிடப் பெரியதாய்

கண்ணீர் நதியாயய் பெருக்கெடுத்து
நிறபேதமின்றி செங்கடலோடு கலக்கிறது.
உள்ளிருந்தும் புறத்தேயிருந்தும்
துரோகத்தின் நாற்றம்
காற்றில் பரவி மூச்சையடைக்க
இம்முறையும் நினைவிழக்கிறேன்

மீண்டும் கண்விழிக்கையில்
அதே பழைய நீலநிற துயர்நீர்
இப்போதும் பேரலையாய் துன்ப நினைவுகள்
இம்முறையும் திக்கறியாமலிருக்கிறேன்.
இனி
விழிகளால் ஊடுருவி
தேடப்போவதில்லை
தொடுவானத்தையோ கரையையோ.

செங்கடலைப் போலல்ல
நீலக்கடலில் ஒரு துரும்பாயினும்
கிட்டிவிடும் தப்பிக்க!

(மே மாதம், 2010 ’தலித் முரசு’ இதழில் வெளியாகிய கவிதை)
...மேலும்

May 18, 2013

இயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா


தமிழ்ச் சூழலில் பெண், ஆண் உடல்களை அடிப்படையாகக் கொண்ட கருத்துருவாக்க வரலாற்றை வெளிப்படுத்தி விளக்குவதாக அமைகிறது இந்தக் கட்டுரைத் தொடர். பெண், ஆண் உடல்கள் தொடர்பான நாட்டுப்புற வழக்காறுகள் நிறையவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. உடலின் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையிலான உறுப்புகளைப்பற்றி பல்வேறு நம்பிக்கைகளும் அவை பற்றிய கதையாடல்களும் சடங்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

உடலை மாதிரி வடிவமாகக் கொண்டு மொழி அமைப்பு (உயிர், மெய்), சமூக அமைப்பு (முகத்தில், மார்பில், தொடையில், கணுக்காலில், உள்ளங்காலில் பிறந்த மக்கள் பிரிவினர்), அரசியல் வகைப்பாடு (வலங்கை-இடங்கை, வலதுசாரி-இடதுசாரி) போன்றவையும் உருவாக்கப்பட்டுள்ளன. ஓர் உடலுக்கும் இன்னொரு உடலுக்கும் இடையில் அதிகார உறவுகள் கட்டமைக்கப்பட்டு பெண், ஆண் உடல்கள் மேல்-கீழாக அமைக்கப்பட்டுள்ளன. இதைப்போன்று பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலில் ஏராளமான சிந்தனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்வைதம், துவைதம், சைவ சித்தாந்தம், சாங்கியம், தாந்திரிகம் போன்ற சிந்தனை வடிவங்களும் மருத்துவம் தொடர்பான அறிவாக்கமும் பெண், ஆண் உடல்களைப் பற்றிய புரிதலிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் ஆதிமனிதர்களிலிருந்து இன்றைய சிந்தனையாளர்கள் வரை இயற்கையைப் பற்றிய புரிதலை பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலுக்கு அடிப்படை ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அல்லது பெண்-ஆண் உடல்களைப் பற்றிய புரிதலை இயற்கையைப் புரிந்து கொள்வதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இயற்கைக்கு எதிர்வான செயற்கையைப் புரிந்து கொள்வதற்கும் பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலே பயன்பட்டிருக்கின்றன. (தொல்காப்பியம் பண்பாட்டைக் குறிப்பதற்குச் செயற்கை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது: ‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல், செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்’) இயற்கை-பண்பாடு, அகம்-புறம், நிலம்-திணை, காடு-நாடு, காதல்-வீரம் ஆகிய கருத்துருவ எதிh;வுகள் பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலின் அடிப்படையிலேயே தமிழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டுள்ளன.

அரசு என்ற அமைப்பும் (முடியாட்சி, மக்களாட்சி இரண்டும்) அதன் வரலாறும் பெண்மையை விளிம்புநிலைப்படுத்தி ஆண்மைப் பண்புகளை அடித்தளமாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. குடும்பம், சாதி, கிளை (கூட்டம், வகையறா, கரை போன்றவையும்) சமயம், நாடு (கள்ளர் நாடு, நாட்டார் நாடு, கவுண்டர் நாடு, வேளாளர் நாடு போன்றவை) ஆகியவை ஆண்களின் அதிகார உடல்களாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. வர்க்க முரண்பாடுகளும் போராட்டங்களும் ஆண் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளாகவும் போராட்டங்களாகவுமே பார்க்கப்பட்டுள்ளன. சமூகம், பண்பாடு பற்றிய சிந்தனைகளும், ஆய்வுகளும் ஆணின் அனுபவம், உணர்வு சார்ந்தே கட்டமைக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட புரிதலில் 19,20-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன.  குறிப்பாக ஆறுமுக நாவலர், அயோத்திதாசர், சிங்காரவேலர், எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை, மறைமலை அடிகள், ஈ.வெ.ரா.பெரியார், வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தேவநேயப் பாவாணர், மு.அருணாச்சலம், நா.வானமாமலை, கோ.கேசவன் ஆகியோருடைய ஆய்வுகள் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.  இந்தக் காலகட்டத்துப் பெண் ஆய்வாளர்கள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்படாமையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட ஆண் ஆய்வாளர்களின் ஆய்வுகள் பற்றிய திறனாய்வுகள் நிறைய வெளிவந்துள்ளன. ஆனால் இந்தக் கட்டுரைத் தொடரில் தமிழ்ச் சூழலில் பெண், ஆண் உடல்கள் பற்றிய கருத்துருவாக்க வரலாற்றின் பின்புலத்தில் (நாட்டுப்புற வழக்காறுகளிலிருந்து தொடங்கி) இவர்களுடைய ஆய்வுகளில் பெண்ணைப் பற்றியும், ஆணைப் பற்றியுமான புரிதல்கள் வெளிப்பட்டுள்ள முறை சுட்டிக்காட்டப்பட்டு விளக்கப்படுகின்றது. மக்கள், சமூகம், சமயம், தத்துவம், சமூக மாற்றம், வளர்ச்சி போன்ற பொதுவான சொற்களிலும் அவை தொடர்பான விளக்கங்களிலும் பெண், ஆண் பற்றிய மேற்குறிப்பிட்ட ஆய்வாளர்களின் புரிதல்களும் கருத்துருவங்களும் பதிவாகியுள்ளதையும் வெளிப்படுவதையும் விளக்குவனவாக அமைகின்றன இக்கட்டுரைகள்.

நன்றி - பன்மெய்
...மேலும்

May 17, 2013

பெண் விடுதலை கானல் நீரல்ல !


நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலனியாக்கம் – எனுமிரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும் முடியாது.
பிரெஞ்சு புரட்சியில் பெண்கள்
தலைநகர் டெல்லியில் துணை மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வல்லுறவுத் தாக்குதலுக்கு ஆளானதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போதைக்கு ஓய்ந்துவிட்டன. ஆனால் பெண்கள் மீதான பாலியல் வன்முறைத் தாக்குதல்கள் இன்னமும் தொடர்கின்றன. தூக்கில் போடுவது, ஆணுறுப்பை வெட்டுவது – எனத் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியபோதிலும், இத்தகைய கொடூரங்களில் ஈடுபடும் கிரிமினல்கள் எவரும் அதற்காக அச்சப்படுவதாகத் தெரியவில்லை.

இதற்கான காரணம், இன்றைய சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியலமைப்பில் உள்ளது. இந்தியச் சமூகமானது ஜனநாயகத்துக்கான அரசியல் போராட்டங்களின் ஊடாக உருவாகி வளர்ந்த சமூகமல்ல. நீண்ட நெடுங்காலமாக நீடித்துவரும் சாதி, மத, ஆணாதிக்கம் நிறைந்த நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பும், அதற்கு அக்கம்பக்கமாக தரகு முதலாளித்துவ உற்பத்திமுறையும், அதற்கேற்ற அரசியல், பண்பாட்டு நிறுவனங்களும் காலனிய காலத்திலிருந்து திணிக்கப்பட்டு நிலைநாட்டப்பட்டன.

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கப் பிற்போக்குத்தனம் பெண்களின் மீதான ஒடுக்குமுறைக்கு-பாலியல் தாக்குதலுக்கு ஆணிவேராக இருக்கும் அதேநேரத்தில், அதன் மீது திணிக்கப்பட்டுள்ள உலகமயமாக்கம் இத்தாக்குதல்களை முன்னெப்போதும் கண்டிராத வகையில் தீவிரப்படுத்தியிருக்கிறது. ஒருபுறம், பெண்களை நுகர்வுப் பண்டமாக்கி எவ்வித விழுமியங்களுமின்றி பாலியல் வன்முறைகளைத் தீவிரமாக்கியிருக்கும் உலகமயமாக்கம்; மறுபுறம், ஆதிக்க சாதி மற்றும மத அமைப்புகள் பெண்கள் மீது கேள்விக்கிடமற்ற முறையில் தொடுக்கும் தாக்குதல்கள், கட்டுப்பாடுகள், கௌரவக் கொலைகள்- என இத்தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.

சாதியானாலும், பாலியல் வன்கொடுமையானாலும் இரண்டுக்குமே அடிப்படையாக உள்ள அரசியல்- பொருளாதார கட்டமைவை இன்றைய அரசு பாதுகாக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே பெண்களுக்கு எதிராக உள்ளது. அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை முதலான அரசின் உறுப்புகளே பெண்களுக்கு எதிரான முதன்மைக் குற்றவாளிகளாக உள்ளன. அதை யாரும் தட்டிக் கேட்கவோ, நீதியைப் பெறவோ முடியாதபடி சட்டத்துக்கு மேலானதாக, தனிவகைச் சாதியாக இருந்துகொண்டு சமூகத்தையே அச்சுறுகின்றன. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கொண்டு பெண்கள் மீது கேள்விமுறையற்ற வன்முறைகளில் ஈடுபடும்இராணுவத்தினரை சிவில் கோர்ட்டுகளில் கிரிமினல் சட்டங்களின்கீழ் தண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைத்த முக்கியமான சில சீர்திருத்தங்களைக்கூட ஏற்க மறுக்கிறது அரசு. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் குவிந்துள்ள போதிலும், மாநில போலீசு இயக்குனர் முதல் மகளிர் நல அமைச்சகம், வாரியங்கள் உள்ளிட்ட எந்த அரசாங்க உறுப்புகளும் தமது பரிந்துரைகளை வர்மா கமிஷனுக்குக் கொடுக்கவுமில்லை.

வரதட்சிணை தடுப்புச் சட்டமும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைத் தாக்குதல்களை தடுக்காத நிலையில், சட்டங்களை அமலாக்கும் இன்றைய அரசியலமைப்பு முறையே பெண்களுக்கு எதிராக உள்ள நிலையில், கடுமையான சட்டங்களாலும் தண்டனைகளாலும் பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களுக்கு முடிவு கட்டிவிட முடியாது. நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலனியாக்கம் – எனுமிரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும் முடியாது.

இவ்விரு நுகத்தடிகளையும் கட்டிக்காத்து வருகின்ற இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார அமைப்பை அடியோடு மாற்றியமைக்கும் திசையில், குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைப்பதும், இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்திவிட்டு புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதுமே ஒடுக்கப்பட்டுள்ள பெண்ணினத்துக்கு விடுதலையையும் உரிமைகளையும் பெற்றுத்தரும்.

________________________________________________________________________________
- புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
...மேலும்

May 16, 2013

சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!


லஷ்மி ராமகிருஷ்ணன், “இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார்.

‘சொல்வதெல்லாம் உண்மை’ -  இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் இரவு நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே விஜய் டி.வி.யில் ‘கதையல்ல நிஜம்’ என்ற பெயரில் நடிகை லஷ்மி தொகுத்து வழங்கிய அதே அக்கப்போர்தான். அன்றாட குடும்பப் பிரச்சினைகளில், உறவுச் சிக்கல்களில் சிக்கி, மீள வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் மக்களை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து ஒளி வெள்ளத்தில் கேமராவின் முன்பு நியாயம் கேட்டு குமுற வைக்கும் அதே பழைய மசாலா. கண்ணீர், கோபம், ஆவேசம், அடிதடி எல்லாம் இதிலும் உண்டு. விஜய் தொலைக்காட்சியில் லஷ்மி செய்த வேலையை ஜீ (Zee) தமிழில் இப்போது நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் செய்து வருகிறார். (முன்பு நிர்மலா பெரியசாமி செய்தார்). தாங்க முடியாத அருவருப்பும், ஏழை மக்களின் அந்தரங்க வாழ்கையை அம்பலமேற்றி காசு பண்ணும் வக்கிரமும் நிறைந்த இந்த நிகழ்ச்சி சமூக உளவியலில் பாரதூரமான விளைவுகளை உண்டு பண்ணக்கூடியது.

அடுத்தவர்களின் அந்தரங்கத்தை தெரிந்துகொள்ளத் துடிக்கும் மனித மனதின் வக்கிரத்தை வளர்த்தெடுப்பதுதான் இதன் முதல் அபாயம். அரசல் புரசலாகவும், தாங்கள் ஒரு தவறிழைக்கிறோம் என்ற குற்றவுணர்வுடனும் புரணி பேசும் மக்களை, அந்த மனத் தயக்கத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி விடுவிக்கிறது. கள்ள உறவுகள், விடலைகளின் காதல் பஞ்சாயத்துகள், குடும்ப சிக்கல்கள்… இவற்றை தொடர்ந்து பார்க்கும் மக்களின் மனம் ‘தான் மட்டும் தவறிழைக்கவில்லை; ஊரே இப்படித்தான் இருக்கிறது’ என எண்ணுகிறது.

‘வீட்டுக்கு வீடு வாசல்படி’ என இதை எடுத்துக்கொள்வது ஒரு வகை. மாறாக, தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களின் மனம் தன் கணவனை, தன் மனைவியை, உறவுகளை, சுற்றங்களை சந்தேகிக்கிறது. புதிய குடும்பச் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த இரண்டு வகைகளையும் தாண்டி, ‘எல்லாரும் செய்யுறான்.நாமளும் செய்வோம்’ என எண்ண வைத்து ஒழுக்கக்கேட்டுக்கு ஓபன் பாஸ் கொடுக்கிறது.

முதலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வரும் பங்கேற்பாளர்கள் யார்? பார்வையாளர்கள் யார்? தங்கள் சொந்தக் குடும்பப் பிரச்னையை பொதுவில் வைத்துப் பேசத் தயங்காத உழைக்கும் வர்க்கத்து ஆண்களும், பெண்களும்தான் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். போலி கவுரவத்தை காப்பாற்றுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் இதன் பார்வையாளர்கள். தங்கள் வீட்டின் ரகசியங்கள் வாசல் வரையிலும் கூட சென்றுவிடக்கூடாது என அப்பார்ட்மென்டின் கதவுகளை இறுக மூடிக்கொண்டு முடைநாற்றத்தை அடைத்துக்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை இரவு நேர பொழுதுபோக்காக ரசித்துப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தீர்ப்பு வழங்கிய; வழங்கும் லஷ்மி, நிர்மலா பெரியசாமி, லஷ்மி ராமகிருஷ்ணன் போன்றோர்… இந்த இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்களும் அல்ல. அவர்கள் அசல் மேட்டுக்குடிகள். ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை அனுபவத்தில் அல்ல… கேள்வி ஞானத்தில் கூட அறிந்துகொள்ள விரும்பாத இவர்கள்தான் ஏழைக் குடும்பங்களின் பிரச்னைகளுக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள். அதுவும் அலசி ஆராய்ந்து அளிக்கப்படும் அறிவார்ந்த தீர்ப்பு அல்ல. ஏற்கெனவே நிலவும் ஆணாதிக்க மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலேயே பேசுகின்றனர். ஏழைகளின் பிரச்னைகளை நடுத்தர வர்க்கம் பார்த்து ரசிக்க, மேட்டுக்குடிகள் தொகுத்து வழங்க, முதலாளிகள் கல்லா கட்டும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஒரே ஒரு பணக்காரக் குடும்பம் கூட கலந்துகொண்டது இல்லை.

ஆனால் தங்கள் சொந்தப் பிரச்னைகளை கேமராவின் முன்பு மக்கள் எப்படி கூச்சமின்றிப் பேசுகின்றனர்? நீங்களும், நானும் பேசுவோமா?ஆனால் இவர்கள் பேசுகிறார்களே, எப்படி? “அவங்க காசு வாங்கியிருப்பாங்க”  என்றோ, “எல்லாம் செட்-அப்” என்றோ பார்ப்பவர்கள் நினைக்கிறார்கள். இதற்கு விடை காண ’சொல்வதெல்லாம் உண்மை’ எப்படி உருவாகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சமாதானம், சண்டை, பேச்சுவார்த்தை, போலீஸ் புகார்… என பல வழிகளிலும் தங்கள் குடும்பச் சிக்கல்களுக்கு தீர்வு தேடி முயற்சித்து, எதிலும் தீர்வு கிடைக்காமல் உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கும் மக்கள்தான் இவர்களின் இலக்கு. ‘ஏதேனும் ஒரு வழியில் பிரச்னை தீராதா?’ என ஏங்கிக் கிடப்பவர்களை அணுகி, ‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்’ என ஆசைகாட்டி அழைத்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை திறந்து, தங்களுக்கு டி.ஆர்.பி. தரக்கூடிய செய்திகளை கண்டறிவதுதான் இவர்களின் அதிகப்பட்ச ஆய்வுப்பணி. அடுத்த கட்டமாக அந்தந்த ஊரில் இருக்கும் அவர்களின் நிருபர், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து தேன் ஒழுகப் பேசுவார். மனைவியை மடக்கிவிட்டால் போதும், கணவனை அழைத்து வருவது எளிது.

‘உங்க மனைவி எங்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர் உங்களை பற்றி இப்படி எல்லாம் பேசுகிறார். நீங்கள் வந்து உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவில்லை எனில் அவர் சொல்வது மட்டும்தான் வெளியே வரும். டி.வி. பார்ப்பவர்களுக்கு அதுதான் நியாயம் என்று தோன்றும்’ என்று தர்க்கப்பூர்வமாக மடக்குவார்கள். ‘எங்கள் நிகழ்ச்சியில் வந்து பேசிவிட்டால் உங்களுக்கு நீதி கிடைத்துவிடும். அதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று ஆசை காட்டுவார்கள். ‘படித்தவர்கள் ஏமாற்றமாட்டார்கள்’ என்று நம்பி வரும் ஏழைகளை திட்டமிட்டு உணர்ச்சிவசப்படச் செய்து, அறிவின் தந்திரத்தால் அழ வைத்து… அனைத்தையும் படம் பிடிப்பார்கள். நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இடைவேளையில், பங்கேற்பாளர்களின் நடவடிக்கை பகுப்பாய்வு செய்யப்பட்டு, நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினரால் உளவியல் உத்திகள் வகுக்கப்படும். குறைந்த பட்சம் கண்ணீர், அதிக பட்சம் அடிதடி… எதுவும் சிக்கவில்லையா? ஒரு சென்டிமெண்ட் டிராமாவுக்கு உத்திரவாதம் கிடைத்துவிட்டால் தயாரிப்புக் குழுவுக்கு நிம்மதி. அதன்பிறகு அந்த குடும்பம் சேர்ந்ததா, பிரிந்ததா, நடுத்தெருவில் நிற்கிறதா என்பதை பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

பொதுவாக உங்கள் வீட்டில் யாராவது அடித்துக்கொண்டால் என்ன செய்வீர்கள்? உடனே ஓடிச்சென்று விலக்குவீர்கள். அதையும் மீறி சண்டை நடந்தாலும் ‘நாலு பேருக்குத் தெரிந்தால் அவமானம்’ என்று கண்டிப்பீர்கள். இது மனிதர்களின் பொதுப் பண்பு. ஆனால் இவர்களை பொருத்தவரை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அடித்துக்கொண்டால் உற்சாகம் அடைகிறார்கள். முடிந்தவரை அதை உசுப்பேற்றி அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். ஏதேனும் ஒரு வகையில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என நம்பி வருபவர்கள் நிகழ்ச்சி முடியும்போது பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். இங்கு வருவதால் பிரச்னை தீர்வதில்லை; அதிகமாகிறது என்பதை அவர்கள் உணரும்போது நிலைமை கைமீறிச் சென்றுவிடுகிறது. கொட்டிய வார்த்தைகளும், அழுத கண்ணீரும் நாளை தொலைகாட்சியில் வரப்போகிறது என்ற எண்ணமே அவர்களை அச்சுறுத்துகிறது. தாங்கள் ஒரு சூழ்ச்சி வலையில் சிக்கியதைப் போல உணர்கிறார்கள். “சார், டி.வி.ல போட்றாதீங்க சார். பேசுன வரைக்கும் பேசுனதா இருக்கட்டும். இப்படியே விட்ருங்க சார்” என்று கெஞ்சிக் கதறினால் அதையும் படம் பிடிப்பார்களேத் தவிர நீதி கிடைக்காது. மாறாக நிகழ்ச்சிக்கு அழைத்து வரும்வரை கருணை முகம் காட்டியவர்களின் உண்மை முகம் அப்போதுதான் வெளியே வரும். இதுதான் “தி மேக்கிங் ஆஃப் சொல்வதெல்லாம் உண்மை”.

ஆனால் இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையா?

பஞ்சாயத்துக்கு வருகின்ற பிரச்சினைகள் ஒரே விதமாக இருந்தபோதும், பார்வையாளர்களைப் பார்க்க வைப்பது எப்படி என்பதே இவர்களது பிரச்சினை. எனவே, தனியே அழைத்துப் போய் உசுப்பேற்றிவிடுவதும், மோதலை உருவாக்குவதும் இத்தகைய நிகழ்ச்சிகளில் சர்வ சாதாரணமானது. இதை கேமராவுக்குப் பின்னே சென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நிகழ்ச்சியிலேயேப் பார்க்க முடியும். சமீபத்தில் ஒரு விடலைப் பையனும், பெண்ணும் காதல் பஞ்சாயத்துக்கு வந்திருந்தனர். பெண்ணின் அம்மா எதிரே அமர்ந்திருக்கிறார். தன் அம்மா ஒரு விபச்சாரி என்று பட்டவர்த்தனமாக அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார். உடனே நிகழ்ச்சியை நடத்தும் லஷ்மி ராமகிருஷ்ணன், “இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார். அனைத்தும் ஒளிபரப்பப்படுகிறது. இனி சாகும் வரையிலும் அந்த அம்மாவும், மகளும் சேரப் போவது இல்லை.

இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், டி.வி-யில் ஒளிபரப்பான பிறகு என்னவாகிறது என்பதை யாரும் பேசுவதில்லை. என்.டி.டி.வி-யில். ’ராக்கி கா இன்சாப்’ என்ற பெயரில் இந்தி நடிகை ராக்கி சாவந்த் நடத்திய நிகழ்ச்சியில் ஒரு பெண், தன் கணவனை ஆண்மையற்றவன் என்று கூறியதால் பிறகு அவன் தற்கொலை செய்து கொண்டான். இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம்.

மேட்டுக்குடி நிர்மலா பெரியசாமி ஏழைகளின் கதைகளை விற்கிறார் !
இன்னொரு பக்கம் இந்த மேட்டுக்குடி பாப்பாத்திகள் நடத்தும் பஞ்சாயத்தின் மூலமாக, சாதாரண மக்கள் நெறிகெட்டவர்கள் போலவும், நாட்டாமை செய்யும் வர்க்கத்தினர் பெரிய ஒழுக்க சீலர்கள் போலவும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இதில் பார்வையாளர்கள் நீதிபதிகளாக செயல்படுகின்றனர். அதனால்தான் பல வீடுகளில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது, அதில் கலந்துகொள்ளும் மனிதர்களுடன் மக்கள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்கின்றனர். ‘அவன் மேலதான் தப்பு’ என்றோ, ‘ஐயோ பாவம் இந்தப் பொண்ணு’ என்றோ திரையில் விரியும் காட்சிகளுக்காக உண்மையாகவே மனம் இறங்குகின்றனர்.  கற்பனைக் கதைகளே பார்வையாளர்களின் கருத்தையும், கண்ணோட்டத்தையும் பாதிக்கும் என்னும்போது ரியாலிட்டி ஷோக்கள் பற்றி சொல்லத்தேவையில்லை.

சித்தரிக்கப்பட்ட டி.வி. சீரியல் பாத்திரங்களுக்காக பாவப்படும் மக்களின் மனம், அதை விட கூடுதலாக இந்த நிகழ்ச்சிகளோடு தன்னை இணைத்துக்கொள்கிறது. காரணம், சீரியல்களில் குடும்பத்தில் சண்டை நடக்கும். இதில் குடும்பமே நேரடியாக வந்து சண்டை போடுகிறது. தன் கண்ணீரையும், இரக்கத்தையும், ரசனையையும் கோரும் ஒரு கதை, கற்பனையாய் இருப்பதை விட, உண்மையாய் இருப்பது பார்வையாளனின் ஈகோவை கூடுதலாக திருப்திப்படுத்துகிறது. சொல்வதெல்லாம் உண்மை மட்டுமல்ல, மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றி பெறுவதற்கான அடிப்படை மக்களின் இந்த மனநிலைதான்.

ஆனால், உண்மையான மனிதர்கள், உண்மையான பிரச்னைகள் என்பது வரைதான் இது உண்மை. அந்த உணர்ச்சிகள் உண்மையானவை அல்ல. அது நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு தூண்டப்பட்டு மிகையாக சித்தரிக்கப்படுகிறது. அந்த வகையில் இது ஒரு போர்னோகிராபி. இதைப் பார்க்கும் ரசனையும் சாவித்துவாரம் வழியே பார்க்கும் அதே ரசனைதான்.

பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில் அப்பாவி ஏழைகளின் அந்தரங்கம் மட்டுமே அலசப்படுவதாக தெரியலாம். ஆனால் ஊடக வியாபாரத்தில் பணக்காரர்களின் அந்தரங்கமும் தப்புவதில்லை. பத்திரிகைகளின் சினிமா கிசுகிசு, மேற்குலகின் டயானா விவகாரம் போன்றவை இத்தகையவைதான்.
விஜய் டி.வி. ஷோக்கள் !
’ராக்கியின் சுயம்வரம்’ போன்ற நிகழ்ச்சிகள் அப்பட்டமாக ஒத்திகை பார்க்கப்பட்டு, திரைக்கதை எழுதப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. பணத்துக்காக சினிமாவில் ஆடைகளை அவிழ்த்து ஆபாச நடனம் ஆடும் ராக்கி சாவந்த், தனது திருமணத் தெரிவையும் டி.வி.யில் லைவ் ஆக நடத்தினார். ‘யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்’ என்ற அறிவிப்பு பரபரப்பான செய்தியாக மாற்றப்பட்டதே தவிர அது ஒரு அப்பட்டமான விபச்சாரம் என்பதை யாரும் பேசவில்லை. சபலத்துடன் பலர் விண்ணப்பித்தார்கள். முடிவில் ராக்கி ஒரு கனடா தொழிலதிபரை தெரிவு செய்தார். திருமணம் தள்ளிப்போடப்பட்டு, கடைசியில் ‘நடிக்கக்கூடாது என்று சொன்னதால் திருமணம் ரத்து’ என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின்னர் இது நாடகம் என்றும், இதில் பணத்துக்காக தானும், பிரபலத்துக்காக தொழிலதிபரும் நடித்ததாகவும் ராக்கி கூறினார். கோடிக் கணக்கான ரசிகர்களை ஏமாற்றிய குற்றத்துக்கு எந்த தண்டனையும் இல்லை. இதை வைத்து இவர்கள் கொள்ளையடித்த பணத்துக்கும் கணக்கில்லை.

2009-ம் ஆண்டு இந்தியத் தொலைகாட்சிகளின் மொத்த வருமானம் சுமார் 5.5 பில்லியன் டாலர். இதில் ரியாலிட்டி ஷோக்களின் வருமானம் கணிசமானது. இவர்களுக்கு 70 கோடி இந்திய செல்போன் வாடிக்கையாளர்கள்தான் முக்கிய இலக்கு.  ‘உங்கள் மனம் விரும்பிய போட்டியாளர் இவர் என்றால் … என்று டைப் செய்து இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்’ என்ற வேண்டுகோளுக்கு செவிசாய்த்து மக்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.ஸில் இருந்துதான் ரியாலிட்டி ஷோக்களின் 30 முதல் 40 சதவிகித வருமானம் வருகிறது. இந்த வருமானத்தின் அளவு குறைந்தால் ரியாலிட்டி ஷோக்களுக்காக இவர்கள் செய்யும் பித்தலாட்டங்களும் அதிகரிக்கும்.

மேற்கத்திய ரியாலிட்டி ஷோக்கள் ! உண்மையின் பெயரில் மலிவான ரசனை !!
இன்றைய நிலையில் தொழில்முறை ஆபாசப் படங்களைக் காட்டிலும் செல்போன்களில் எடுக்கப்பட்ட ‘கேண்டிட் வீடியோக்களுக்குதான்’ மவுசு அதிகம். யூ-டியூப் உள்ளிட்ட இணையதளங்களில் இத்தகைய ஒரிஜினல் 24 கேரட் வீடியோக்களுக்கான பார்வையாளர்கள் சர்வ சாதாரணமாக லட்சங்களைத் தொடுகிறார்கள். பள்ளி மாணவர்களின் செல்போன்களில் கூட இத்தகைய கேண்டிக் கேமரா காட்சிகள் இருக்கின்றன. இதற்கும் ’ரியாலிட்டி ஷோ’க்களுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

எப்போதுமே, நிலவும் டிரெண்டை பயன்படுத்தி கல்லா கட்டும் நிறுவனங்கள் ‘உண்மையை’ விரும்பும் மக்களின் மனநிலையை மட்டும் விட்டுவைக்குமா? பல தொலைக்காட்சி விளம்பரங்கள் கேண்டிட் கேமராவால் எடுக்கப்பட்டதைப் போல திட்டமிட்டு எடுக்கப்படுகின்றன. பஞ்சாராஸ் அழகு சாதனப் பொருள், இந்துலேகா எண்ணெய், ஆரோக்கியா பால் உள்பட பல விளம்பரங்கள் இப்படி ஒளிபரப்பாவதை காணலாம். இதை ‘ஒரு விளம்பர யுத்தி’ என்றோ, சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை ‘ஒரு கிரியேட்டிவ் கான்செப்ட்’ என்றோ சிலர் சொல்லக்கூடும். ஆனால் உண்மை வேறு. டி.வி.யை நிறுத்தியதும், அதுவரை பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி தோற்றுவித்த உணர்வு மறைந்துவிடுவது இல்லை. மாறாக, அது உங்களை பயிற்றுவிக்கிறது. குரூரத்தை ரசிப்பதற்கு, வக்கிரத்தை விரும்புவதற்கு கற்றுத்தருகிறது. அது உருவாக்கும் உணர்வுதான் ஒரு போரை பொழுதுபோக்காக; போலீஸ் அராஜகத்தை ஹீரோயிசமாக புரிந்துகொள்ள இட்டுச் செல்கிறது.

இவர்கள் இத்தனை தூரம் மெனக்கெட்டு செட் போட்டு, கான்செப்ட் பிடித்து ரியாலிட்டி ஷோ நடத்தத் தேவையில்லாமல் சொல்ல வேண்டிய நடைமுறை உண்மைகள் ஏராளமாக நாட்டுக்குள் இருக்கின்றன. சாதித் தீண்டாமை முதல் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரை ‘உண்மைகளுக்கா’ பஞ்சம்? இவற்றை சொல்வதற்கு எந்த ரியாலிட்டி ஷோவிலும் இடம் இல்லை. எனில் இவற்றை ‘ரியாலிட்டி ஷோ’ என்ற சொல்லால் அழைப்பதே தவறானது. உண்மையில் இவற்றின் ஒவ்வொரு நொடியும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு திரைக்கதை எழுதப்படுகின்றன. வட இந்திய சேனல்களில் இது இன்னும் பச்சையாக நடக்கிறது.

பொதுவாக இந்த ரியாலிட்டி ஷோக்களில் சுற்றி உட்கார்ந்து கைதட்டிக்கொண்டே இருக்கிறார்களே… அவர்களை ரசிகர்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. அவர்கள் தினக்கூலி அடிப்படையில் ரசிகர்களாக நடிக்கிறார்கள். வியப்பதும், சிரிப்பதும், கை தட்டுவதும், பயப்படுவதும்தான் அவர்களின் வேலை. தமிழ் சேனல்களை பொருத்தவரை இந்த ரசிகர்களை பிடித்து வருவது அந்தந்த ரியாலிட்டி ஷோவின் புரடியூசரின் வேலை. வட இந்தியச் சேனல்களில் இத்தகைய பணி அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது. அங்கு டி.வி. நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர்களை சப்ளை செய்வதற்கு என்றே தனிப்பட்ட ஏஜென்ஸிகள் செயல்படுகின்றன.

இத்தகைய ஆடியன்ஸ் சப்ளை சர்வீஸில் ஆறு ஆண்டு கால அனுபவம் பெற்ற ராஜீ கபூர், “ரசிகர்களாக வருபவர்களுக்கு ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும்?” என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஓர் அறிவிப்பு வெளியிட்டால் கூட்டம் வரும்தான். ஆனால் ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்பு நேரம் மிக, மிக அதிகம். சாதாரண பார்வையாளர்கள் அவ்வளவு நேரம் பொறுமையாக இருக்க மாட்டார்கள். எந்த நேரமும் எழுந்து சென்றுவிடுவார்கள். அதனால்தான் இப்படி பணம் கொடுத்து அழைத்து வருகிறோம். அது மிகக் குறைந்த தொகைதான் என்றபோதிலும், சிலிர்ப்புமிக்க ரசிகராக நடிப்பதற்கு அவர்களுக்கு அந்தத் பணம் கொடுக்கப்படுவதில் என்ன தவறு?” என்று கேட்கிறார்.

அதாவது நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் எந்த இடத்தில் அழ வேண்டும், எங்கு சிரிக்க வேண்டும், எப்போது கை தட்ட வேண்டும் என்ற அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது. ஹிட்லர் காலத்தில் அவர் உரையாற்றும்போது, கூட்டத்தில் அமர்ந்திருக்கும் அவரது ஆட்கள் குறிப்பிட்ட இடத்தில் கை தட்டுவார்களாம். அதைப் பார்த்து மற்றவர்களும்  தட்டவேண்டும்; தட்டுவார்கள். அதற்குப் பெயர் பாசிசம். இதற்குப் பெயர் கருத்து சுதந்திரமாம்!

- வளவன்
_______________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
...மேலும்

May 15, 2013

நாங்கள் ஜனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை - சுனிலா அபேசேகர

சுனிலா அபேசேகர
கே- சுனிலா, இன்றைய இலங்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இலங்கை குறித்து இப்போது அரசியலமைப்புச் சர்வதிகாரம் தொடங்கி குடும்ப ஆட்சி வரைக்கும் பல்வேறுபட்ட வியாக்கியானங்கள் காணப்படுகின்றன. நீங்கள் பல ஆண்டுகளாக மனித உரிமைச் செயற்பாட்டாளராக இருந்து வருகிறீர்கள். அண்மைய ஆண்டுகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையிலும் இருந்து கொண்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக இலங்கையில் மனித உரிமைகளுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் நீங்கள். அதேநேரம், இன்று இலங்கையில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு அரசியல் கருத்தாடலாக ஜெனிவா மாறியுள்ளது. இது ஏன்?

ப- உண்மையில் ராஜபக்ஷவும் அவருடைய சகோதரர்கள், மகன் மற்றும் உறவினர்கள் என்போர் நமது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் எதிர்காலத்தை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த அரசியலமைப்புத் தடைகள் மற்றும் குடும்பத் தடைகளை உருவாக்குகின்றனர் என்று சொல்வதே யதார்த்தமாகும். அங்கு சட்டத்தின் ஆட்சியோ, ஜனநாயகத்தின் வேறு கூறுகளான நீதித்துறைச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் போன்ற எந்தவொரு அம்சமும்  நடைமுறையில் இல்லை என்பதைத்தான் கடந்த மாதங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஆக, இலங்கையில் இன்று ஜனநாயகம் இல்லை என்று ஒருவரால் மிக இலகுவாகப் புரிந்து கொள்ள முடியுமான அதேவேளை நாங்கள் ஜனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை என்றும் ஒருவரால் கூறிவிட முடியும். கடந்த காலங்களில் நாங்கள் சந்தித்த சவால்களிலிருந்து இது எப்படி வேறுபடுகிறது என்பதே அனைத்து சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடமும் கேட்கப்பட வேண்டிய மிகப் பெரிய கேள்வியாகும். நிச்சயமாக நாங்கள் கடந்த காலங்களில் எராளம் சவால்களுக்கு முகங்கொடுத்தோம். அரசு சார்ந்து மட்டுமன்றி சிவில் சமூக இயக்கங்கள் சார்ந்தும் அவை முன்னரை விட வித்தியாசமான சவால்களாக உள்ளன.

இந்த நேர்காணலில் என்னை நானே  சிவில் சமூக செயற்பாட்டுவாதம் குறித்து ஒரு சுயவிமர்சனத்தை முன்வைப்பது முக்கியமானது என்று நினைக்கிறேன். நாம் இந்த வித்தியாசங்களை விளங்கிக்கொள்வதற்கு மட்டுமன்றி இப்படிப்பட்ட நிலையில் ஏன் நாம் எதிர்ப்பை வெளிக்காட்டாது அல்லது மிகக் குறைந்தளவான எதிர்ப்பை வெளிக்காட்டுகிறோம் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இலங்கையில் 1970 களிலிருந்து சிவில் சமூக செயற்பாட்டாளராக செயற்பட்டு வருபவள் நான். இப்போது பிரேமதாஸாவின் காலத்தை ஞாபகப்படுத்திப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அந்த வரலாற்றில் எங்களில் பலருக்கும் மிக மோசமான காலகட்டமாக இருந்தது 1988-1989 காலப்பகுதிதான். இக்காலப் பகுதியில் தென்னிலங்கையில் அநேகமானவர்கள் காணாமல் போயினர். 1990ல் கிழக்கிலும் காணாமல் போயினர். இத்தகைய மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டனர். இருந்தபோதும் இப்படிப்பட்ட காணாமல் போதல்களை ஆவணப்படுத்தும் சில சிவில் சமூக இயக்கங்கள் அப்போதும் செயற்பட்டன. சர்வதேச சமூகம், மனித உரிமைகள் அமைப்பு போன்றவற்றிடம் நாங்கள் இந்த ஆவணங்களுடன் சென்றோம்.

அதன்விளைவாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளை இலங்கைக்கு எங்களால் கொண்டு வர முடியுமாகவிருந்தது. அது மட்டுமன்றி அரசாங்கம் அது தொடர்பாக ஓர் ஆணைக்குழுவை நியமிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் எஞ்சியிருப்பவர்களுக்கும் ஓர் உறுதிமொழியை வழங்குவதற்குமான சந்தர்ப்பத்தை எற்படுத்திக் கொடுக்கவும் முடிந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்குவது பற்றிய சாதகமான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. இந்தக் கலந்துரையாடல்கள் சர்வதேச சமூகம் ஒரு பாத்திரத்தை வகிப்பதற்கான இடைவெளியையும் ஏற்படுத்தவதாக இருந்தது.

1971 ஆண்டைநோக்கும்போது இந்த நிலமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரச்சாரங்கள் காணப்பட்டன. உதாரணமாக மீள்கட்டுமான முகாம்கள் என அழைக்கபட்ட தற்காலிக முகாம்களில் 10000 க்கு மேற்பட்ட இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதற்கெதிரான சர்வதேச பிரச்சாரங்கள் அப்போது முன்னெடுக்கபட்டன. இப்பொது நான் நினைக்கிறென் நாம் மையப்புள்ளிக்கு வந்திட்டோம்.

இன்று எந்தவொரு வகையான சர்வதேச தலையீடும் எதிராகவே பார்க்கப்படுகிறது. ஏந்தவொரு விடயத்தைப் பற்றியும் சரியான புரிதலின்றி சும்மா விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கெதிரான எதிர்ப்புகள், மறுப்புக்கள் அனைத்தும் எதிர்-அரசாங்க நடவடிக்கையாகவும், ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கெதிரான நடவடிக்கையாகவம் விளஙகிக் கொள்ளப்படுகிறது. ஜனநயக் கொள்கைகள், மனித உரிமைக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு விமர்சனத்தையும் நீங்கள் கொண்டிருக்க முடியாது ஒரு சூழல் இன்று அங்கு தோன்றியுள்ளது.

ராஜபக்ஸ அரசாங்கமானது வெளிநாட்டுத் தலையீடுகள் ஒர் தவறான அம்சம் என்ற கருத்தையே மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. ஆகவே இது ஒரு சவால்மிக்க விடயமாகவுள்ளது என்று நான் நினைக்கிறேன். கடந்த 2, 3 வருடங்களில் நடந்த சம்பவங்களை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். உதாரணமாக விமல் வீரவன்ச ஐ.நா. சபைக்கு முன்பாக நடத்திய சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தைக் குறிப்பிடலாம். ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கபட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை பற்றி பேசுகிறீர்கள் அனால் அதற்கு அரசாங்கத்தின் பிரதிபலிப்பு எப்படிப்பட்டது! இவர்கள் மஹிந்தவை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள் அவர்கள் அவரைத் தூக்குக் கயிற்றுக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள் என்றுதான் எதிர்வினையாற்றப்பட்டது.

அங்கு ஒரு அச்சம் நிலவுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பற்றி அரசாங்கம் ஒரு தவறான அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் உண்மையில் ஜனாதிபதியையோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையோ அல்லது வேறுயாரையுமோ சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு முன்னால் இந்த வழியில் கொண்டு நிறுத்தவதற்கான முயற்சி அல்ல அது. ஆனால் அவர்கள் அவ்வாறு அதனைக் கட்டமைத்துவிட்டார்கள். அதனை ஒரு தேவையற்ற தலையீடாக காண்பிக்கின்றனர். ஜனாதிபதியை ICCக்கு கொண்டு செல்ல அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்ற கருத்தே பரப்பப்பட்டுள்ளது. ஆக அங்கே சர்வதேச குற்றவியல் நீதி மன்றம், ஐ.நா.சபை மற்றும் ஜெனீவா பற்றியெல்லாம் ஓர் உளவியல் அச்சம் பொதுமக்கள் மத்தியில் தோற்றுவிக்கபட்டுள்ளது.

உலக வரைபடத்தில் ஜெனீவா எங்கேயுள்ளது என்றே மக்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவாவைப்பற்றி அறிந்து கொள்கிறார்கள். ஓவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் மனித உரிமைகள் ஆணைக்கழுவின் கூட்டம் ஜெனிவாவில் நடைபெறுகிறது. இதனால் இலங்கையிலுள்ள அனைத்து சிங்களப் பத்திரிகைகளும். தொலைக்காட்சி நிலையங்கள் அனைத்தும் ஜெனிவாவைப் பற்றி பேசுகின்றன. ஜெனிவா என்பது தேசத்துக்கெதிரான இலங்கை மக்களுக்கெதிரான ஒர் இடம் என்றே மக்களுக்கு சொல்லப்படுகிறது.

மஹிந்தவின் அரசாங்கமே இலங்கை என்றொரு மாயையும் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ராஜபக்ஸவின் ஆட்சியை விமர்சித்தால் நாங்கள் தேசத்துக்கெதிரானவர்கள், நாங்கள் தேசப்பற்று அற்றவர்கள், எமது நாட்டை விமர்சிப்பவர்கள் எமது நாட்டைப் பற்றி அக்கறையில்லாத மக்கள் நாங்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு அர்த்தமற்ற நிலைப்பாடாகும்.

சிலர் ராஜபக்ஸ அரசாங்கம் ஊடகங்களை மிகத் திறமையாகக் கையாள்வதாக கருதுகின்றனர். அச்சு மற்றும் இலத்திரனியல் ஆகிய இருவகையான பொதுசன ஊடகங்கள் மீதும் அரசாங்கம் மிகத் திறமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். மக்கள் மத்தியில் அவர்கள் இத்தகைய கருத்துப் போக்கினையே உருவாக்கியுள்ளனர்.

பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப் பிரேரணை முறையான வகையில் முன்னெடுக்கப்படவில்லை என்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்ட முயன்ற போது அதுவும் விமர்சிக்கப்பட்டது. உண்மையில் ஷிராணி பண்டார நாயக்கா ஒரு சிறந்த பிரதம நீதியரசர் என்று சொல்லவரவில்லை. மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஷிராணி அரசாங்கத்துக்கு பக்கச்சார்பாக இருந்தபோது சிறந்தவராக இருந்தார். பின்னர் பல காரணங்களுக்காக (அவரது தனிப்பட்ட காரணங்களுக்காகவும்) அவர் மாறியபோது அவருக்கெதிரான பிரச்சாரத்தை அரசாங்கம் முன்னெடுத்தது. இதுதான் நாங்கள் கொண்டிருக்கும் விமர்சனமாகும். இதனால்தான் இந்தக் குற்றப் பிரேரணை தவறானது என்று நாங்கள் கூறினோம். இதனால் நாங்கள் தேசத்துக்கெதிரானவர்கள், அரசாங்கத்துக்கு எதிரானவர்கள், இலங்கைக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டோம்.

நாட்டில் மக்கள் துருவமயப்பட்டிருக்கின்றனர். இன்று நாட்டிலுள்ள சாதாரன மக்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் மூலம் அரசாங்கம் பொருளாதார ரீதியாக மிகவும் ஸ்த்திரமாக இருக்கிறது என்ற எண்ணம் ஊட்டப்பட்டிருக்கின்ற அதேவேளை நாட்டின் இந்த வளர்ச்சியை சீர்குலைப்பதற்கான ஏகாதிபத்தியத்தின் சதிதான் இந்த சர்வதேசத் தலையீடுகள் என்ற எண்ணமும் சாமான்ய மக்களுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது. இதனால் சிவில் சமூக இயக்கங்களுக்குள்ளிருந்து எழும் எதிர்ப்புக் குரல்களை அடக்குவது இலகுவானதாகவுள்ளது.

இரண்டாவது காரணம் கடந்த வருடங்களில் சிவில் சமூக இயக்கங்களின் விருத்தியையும் அசைவியக்கத்தையும் பார்க்கும் போது நல்ல முன்னேற்றம் தென்படுகிறது. எடுத்துக் காட்டாக, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், Aids ற்கு எதிரான  விழிப்புணர்வு, சூழலியல் பிரச்சினைகள் சார்ந்து அவை சிறந்த பணிகளை ஆற்றியுள்ளன. ஆனால் இவை அனைத்தும் சிறியளவில் நடைபெறும் விடயங்களாகும். அவை நாட்டின் பொது நிகழ்வுகளோடு பெரிதளவு தொடர்பைக் கொண்டிருப்பதில்லை. ஆக அங்கே நிறையச் செயல்வாதங்களுள்ளன. ஆனால் அவை துண்டு துண்டாகக் காணப்படுகின்றன. அவை குறிப்பிட்ட சில விடயங்கள் மீது மட்டுமே கவனஞ் செலுத்துகின்றன. இன்று இலங்கையில் பாரியளவில் மனித உரிமை, ஜனநாயகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் சார்ந்து இயங்குகின்ற சிவில் சமூக இயக்கங்களின் வலையமைப்பொன்று அங்கு இல்லை. இதனால் இந்த செயற்பாட்டுவாதங்கள் தனிமைப்பட்டதாகவும் நாட்டின் பொதுப்போக்கில் எந்த தாக்கத்தையுமே எற்படுத்த முடியாததாகவுமுள்ளன.

கே- ஆம் சர்வதேச மனித உரிமைகள் செயலியக்கத்துக்கும் உள்நாட்டு செயலியக்கத்துக்குமிடையிலான தொடர்பின்மை நாம் எதிர்நோக்கும் மற்றொரு பிரச்சினையாகும். அதாவது நாங்கள் அண்மையில் அறிந்துகொண்டோம் மாத்தளையில் புதைக்கப்பட்டிருந்த 150க்கு மேற்பட்ட எலும்பக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம். அவை புதைக்கப்படுவதற்கு முன் சித்ரவதை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒரு சிறு வார்த்தைதானும் சிவில் அமைப்புகளிடமிருந்து வெளிவரவில்லை. இதற்கென ஒரு சிவில் சமூக ஆணைக்கவொன்றை சிவில் சமூகத்தால் உருவாக்கி இருக்க முடியும். இவை போன்ற சம்பவங்களுக்கு நாங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் காத்துக்கொண்டிருக்காது சுதந்திர மக்கள் ஆணைக்குழுவை உருவாக்கிச் செயற்பட்டிருக்க முடியும்.

உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள், நுகேகொடை கற்பழிப்புக் குழு, மாத்தளையின் பாரிய சவக்குழிகள், வன்னியில் மக்கள் நடத்தப்பட்ட விதம் இவைகளுக்கெதிராக பொதுமக்களிடமிருந்து எந்தவொரு எதிர்வினையும் இல்லை. ஏன் இந்த உணர்வின்மை? இது போருக்குப் பின்னரான ஒரு தோற்றப்பாடா? இந்த அசமந்தத்தனத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறிர்கள்?

ப- நான் நினைக்கிறேன் அதற்கு ஒரு காரணம் அங்கு ஒர் அச்சமான சூழல் உருவாக்கப்பட்டிருப்பதுதான். இதற்கு 1989லிருந்து நாங்கள் பழக்கப்பட்டிருக்கிறோம். மக்கள் நேரடியாக இந்தக் கொடுமைகளை கண்டுவிட்டார்கள். உதாரணத்துக்கு மேர்வின் சில்வா ஒரு நபரை மரத்தோடு கட்டிவைத்தார். கடைசியில் அந்த நபர் தன்னைத்தானே கட்டிக் கொண்டதாக சொன்னார். எனவே, மக்கள் இங்கு நீதி நியாயமில்லை என்பதை ஊடகங்களுக்கூடாகத் தெளிவாகவே பார்த்து விட்டார்கள்.

மாத்தளை சம்பவத்திலுங்கூட அரசாங்கம் அதன் மீது கூடுதலானளவில் அக்கறை எடுத்துக் கொண்டது. நான் நினைக்கிறேன் மாத்தளை சம்பவம் நடந்தபோது மாத்தளைக்குப் பொறுப்பாகவிருந்த இராணுவ அதிகாரிக்கும் கோத்தபாயவுக்குமிடையில் நிறையப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதனாலேயே இந்த விடயத்தைக் கையாள்வதில் அரசாங்கம் அதிக கவனத்தை எடுத்துக்கொண்டது என்று நினைக்கிறேன்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களின் அமைப்புகள்கூட இந்த விடயத்தில் தீவிரமாக இயங்கவில்லை. ஏனைய நாடுகளிலிருந்து வந்த கதைகளை நீங்கள் வாசித்திருந்தால்  தெரிந்திருப்பீர்கள் குவாத்தமாலா, உருகுவே போன்ற நாடுகளில் பாரிய சவக்கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு உடனடியாகவே வந்திருந்த மக்கள் இங்கே எனது மகன் இருக்கிறானா? இங்கே எனது மகள் இருக்கிறாளா? இங்கே எனது கணவர் இருக்கிறாரா? என்று கேட்டனர். ஆனால் மாத்தளையில் அவ்வாறு நிகழ்ந்ததாக நாம் கேள்விப்படவில்லை. அதற்கு போதியளவு முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. காணாமல் போனவர்களின் உரிமைகளுக்காக இயங்கும் அமைப்புகளும் இந்த விடயத்தை விரிவுபடுத்தவில்லை. அதற்காக இயங்கக்கூடிய அமைப்புகளும் இப்போது அங்கு இல்லாத நிலைதான் காணப்படுகிறது. உதாரணமாக சூரியகந்த புலனாய்வுக்கு தலைமைவகித்த அமைப்புகள் அவை நீண்டகாலம் நீடித்திருக்கவில்லை. அன்னையர் முன்னணி இல்லை. காணாமல் போனவர்களின் குடும்பங்களின் அமைப்புகள் இல்லை. நீர்கொழும்பிலுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமைக்கான அமைப்பு போன்ற மிகச் சிறிய மக்கள் அமைப்புகள் மட்டுமே இன்றுள்ளன. ஆனால் இந்த விடயத்தை அவர்களும் பெரிதளவு முன்னணிக்கு கொண்டுவரவில்லை. அங்கு காணப்படுகிற மோசமான சூழலே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

நான் இப்போது இலங்கையிலில்லை. கடந்த வருடமும் நான் அங்கு இருக்கவில்லை. அங்கே நிலவுகிற பயங்கரமான சூழல் குறித்து மக்கள் தயக்கத்துடன் உள்ளனர். அவர்கள் அதைச் செய்யவில்லை இதைச் செய்யவில்லை என்று சொல்வதற்கு முன்னால் பொது மக்கள் மத்தியில் அச்சமும் அதேநேரம் அக்கறையின்மையுமுள்ளதை உணர்கிறேன். உண்மையில் நாங்கள் எதையாவது செய்யாவிட்டால் எந்த மாற்றமும் நிகழாது. அரசாங்கத்திடம் போதிய அதிகாரமிருக்கிறது. போதிய பணம் இருக்கிறது, ஊடகங்கள்மீது போதிய கட்டுப்பாடிருக்கிறது.  பாராளுமன்றத்தின் மீது போதிய கட்டுப்பாடிருக்கிறது. இந்நிலையில் நாங்கள் எதைச் செய்தாலும் எந்தப் பயனுமில்லை. அமைதியாக இருப்பதே சிறந்தது. ஆனால் இங்கு காணப்படும் அக்கறையின்மை மிகவும் பயங்கரமானது என்றுதான் நான் நினைக்கிறேன். மக்கள் அமைதியாக இருந்தால் அவர்களுக்கு ஆபத்தில்லை. இதைத்தான் அவர்கள் வரலாற்று நெடுகிலும் கண்டு வந்துள்ளனர். இதுவும் இன்று இலங்கையில் காணப்படும் ஒரு சவால்மிக்க விடயமாகும். அமைதியாக இருப்பவர்களே சிறந்த மக்கள் என்ற கருத்து அங்கு உருவாகிவிட்டது.

கே- ஆக ஒரு சிறந்த அரசியல் தலைமைத்துவத்திற்கான வெற்றிடம் அங்கு உள்ளதா? இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் சிவில் சமூக இயக்கங்களில்கூட தலைமைத்துவத்தை வகிக்கக்கூடிய அமைப்புகளோ தலைமைத்துவங்களோ காணப்படவில்லை.

1971க் குப் பின்னரான காலப் பகுதியில் அரசியல் கட்சிகள் எதுவுமின்றி சிறைக்கைதிகளின் விடுதலைக்கான பிரச்சாரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அது அரசில் கட்சிகளுடன் எந்தவிதத் தொடர்புகளையும் கொண்டிராத வர்த்தக அமைப்பினாலேயே தலைமை தாங்கி நடத்தப்பட்டது. 1990களின் ஆரம்ப காலப் பகுதியில் ஊடக அடக்குமுறைக்கெதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டோம். உண்மையில் அவர்கள் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் உண்மையான அரசியல் தலைவர்கள் அவர்களுக்குள்ளிருந்துதான் வந்தார்கள். சந்திரிக்காவும் அவரது தலைமையின் கீழ் நிறுவப்பட்ட ஒரு விவசாய அமைப்பொன்றிலிருந்துதான் வந்தார். இன்று நாங்கள் இந்த நிலமையைப் பார்க்க முடியாது. நாங்கள் மக்களை வழிநடாத்துவதற்காக மேய்ப்பர் ஒருவரை காத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறதா? இங்கு எதிர்ப்பு எங்கிருந்து வரும்? ஒரு தேசியரீதியிலான எதிர்ப்பாக மாறக்கூடிய எதிர்ப்பின் உள்ளார்ந்த களங்கள்தான் என்ன?

ப- இது ஒரு சிக்கலான கேள்வி சுதந்த. நாங்கள் மேய்ப்பர் ஒருவரின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் நம்பவில்லை. அதுதான் உண்மையானதும் கூட. நான் நினைக்கிறேன் 4 அல்லது 5 வருடங்களுக்கு மேலாக ராஜபக்ஸ ஆட்சி செய்வதென்பது மிகத் திறமையான விடயங்களுள் ஒன்று. உண்மையிலேயே அவர் தனக்கு உள்ளார்ந்த சவால்களாக காணப்பட்ட  LTTE, UNP, JVP, SLMC போன்ற அமைப்புகளை முறியடித்துவிட்டார். ஆகவே அடுத்துள்ள சில ஆண்டுகளுக்கும் அவருக்குகந்த ஒரு சூழலை அவர் ஏற்படுத்திவிட்டார். அதன் பயனைத்தான் இன்று அரசாங்கம் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

சிங்களம்-தமிழ் ஆகிய இரு சமூகங்களிலுமே ஒரு தலைமுறை கொல்லப்பட்டுவிட்டது. 1971லிருந்து 1990கள் வரை ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. இக்காலப் பகுதியைச் சேர்ந்த இலங்கையின் அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு இளம் தலைமுறையொன்று அழிக்கப்பட்டுவிட்டது. இந்த யதார்த்தத்துக்குத்தான் நாம் இப்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். உள்நாட்டு அரசியல் தலைவர்கள் மீதான படுகொலைகள் காரணமாகவும் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.

சிவில் சமூகங்களைப் பொறுத்தவரை நான் மீண்டும் சொல்லிக் கொள்ளவிரும்புவது, செயற்பாட்டு வாதம் சிறு சிறு குழுக்களாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. இது ஒரு பெரிய சவாலாகும். தனி நபர்களின் உரிமைகளுக்காகவும் சமூக உரிமைகளுக்காகவும் பல்வேறு வழிகளிலும் போராடுகின்ற முன்னேற்றகரமான குழுக்களை ஒன்றாக இணைக்கின்ற சாத்தியங்கள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இது ஓர் அரசியல் பகுப்பாய்வு ரீதியான சவால் என்று நான் நினைக்கிறேன். நமது புதிய தலைமுறையைச் சேர்ந்த பலர் ‘நாங்கள் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராடுகிறோம், எயிட்ஸின் பரவலைத் தடுப்பதற்காகப் போராடுகிறோம் என்று சொல்கிறார்கள். அந்த இளம் தலைமுறையினர் பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களிடம் நாட்டில் ஜனநாயகம் எப்படியுள்ளது எனக் கேட்டால், குற்றப் பிரேரணை பற்றி அது சரியானமுறையில் நிறைவேற்றப்பட்டதா எனக் கேட்டால் அது தொடர்பாக அவர்களிடம் எந்த அபிப்ராயமும் இல்லை. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் பற்றிக் கேட்டால் அவர்களிடம் எந்த அபிப்ராயமும் இல்லை. எனவே அவர்களுக்கு நான் சொல்லும் விடயம் இதுதான். ஒரு சமூகப் பிரிவின் உரிமைகளுக்காக, ஒரு குழுவின் உரிமைகளுக்காக அல்லது மக்களின் ஒரு பிரிவினரின் உரிமைகளுக்காக மட்டுமே போராடுவது  இலங்கையில் ஒவ்வொரு மனிதனதும் உரிமைகளுக்கும், ஜனநாயகத்துக்குமான பரந்த போராட்டத்துடன் இணைந்ததாக ஒரு போதும் இருக்காது.

கே- இப்போது நீங்களும் நானும் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். நாங்கள் இளம் தலைமுறையினராக இருந்த போது பல இயக்கங்களை உருவாக்கினோம். இயக்கங்களை வழிநடத்தினோம். நீங்கள் பெண்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் தலைமைப் பாத்திரத்தை வகித்தீர்கள். நானும் சமாதானம் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கான அமைப்பின் சில தலைமைப் பாத்திரங்களை வகித்திருக்கிறேன். அவை எல்லாம் நாம் இளம் தலைமுறையாக இருந்தபோது நடந்தது. நமது தலைமுறை தலைமைத்துவப் பண்புகளையுடையதாக விளங்கியது. உதாரணமாக அப்போது பிரபல்யமாக விளங்கிய பெர்ணான்டோ சகோதரர்களைக் குறிப்பிடலாம். அத்துடன் மாகாண மட்டங்களிலும் அது காணப்பட்டது. அவர்கள் சிவில் சமூக இயக்கங்களுக்கு உற்சாகமான தலைமைத்துவத்தை வழங்கினார்கள். அவர்கள் தங்களுக்கிடையில் இணைவையும் கொண்டிருந்தனர் எனலாம். ஏனெனில், நாங்கள் 1971 லும் அதற்குப் பின்னரும் ஒரு பொதுவான பண்புகளைக் கொண்ட அரசியல் வரலாற்றையே கொண்டிருந்தோம். ஆனால் இன்றைய இளம் தலைமுறையை எடுத்துக்கொண்டால் தலைமைத்துவப் பண்புகளுடன் கூடிய ஒரு இளம் தலைமுறை காணப்படுகிறதா? இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு இளம் தலைமுறை இன்று உள்ளதா? அத்தகைய தலைமைத்துவம் தோன்றக்கூடிய சாத்தியங்களாவது இங்குள்ளதா?

ப- நான் நினைக்கிறேன் எங்களுக்கும் பதிய தலைமுறையினருக்குமிடையில் பெரிய வேறுபாடிருக்கிறது. அவர்கள் யுத்தமொன்றுக்குள் வாழ நேர்ந்தவர்கள். யுத்தம் இன முரண்பாடு போன்றவற்றுள் வாழ நேர்ந்த அனுபவம் அவர்களுக்கிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை அது அவ்வளவாக இல்லை. உண்மையில் அவர்களின் அன்றாட வாழ்வு LTTE யினரின் பயங்கரவாதச் செயற்பாடுகளால் பிளவுற்று தளர்ந்த நிலையிலும், குண்டுச் சத்தங்களால் அலைக்கழிக்கபட்டதாகவுமிருந்தது. இன்று அவர்களின் அனைத்துவிதமான அரசியல் புரிதல்களும் முடிவுகளும் யுத்தத்தை வெற்றிகொண்ட அரசாங்கம் என்ற கருத்தினடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை இந்த அரசாங்கம் தான் புலிகளை அழித்து பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. நான் நினைக்கிறேன் இது உண்மையிலேயே பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. நான் தென்னிலங்கை சிங்கள மக்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். வட-கிழக்கு தமிழ் மக்களின் கருத்தியல்களும் யுத்தத்தினாலேயே முற்றுமுழுதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் LTTE யினரின் அழிவைப் பார்த்து விட்டனர். அவர்களது அன்றாட வாழ்வும் இன்று பல அழிவுகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான உள்ளார்ந்த சாத்தியப்பாடுகள் எதுவும் இல்லாமலுள்ளது. இந்த நிலையில் அதை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆகவே நமது வரலாற்றில் இது ஒரு பின்தங்கிய தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த 2,3 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழலாம் என்ற எந்தவொரு நம்பிக்கையும் என்னிடமில்லை.

நாங்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களாக எங்களால் முடிந்ததை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். நாம் எமது குரல்களை எழுப்பிக்கொண்டே இருப்போம். நாங்கள் சிறு அளவினதாக இருந்தாலுங்கூட நாங்கள் தாக்கப்படுகின்ற போதிலுங்கூட நாங்கள் நிறுத்தாமல் குரல்களை எழுப்பிக் கொண்டே இருப்போம்.

கே- உங்களுடைய கருத்தைப் பொறுத்தவரை யுத்தம் ஒரு முக்கிய விடயமாகவுள்ளது. நாங்கள் யுத்தத்தை எப்படி விளங்கிக் கொள்கிறோம்? தமிழ் மக்களின் மனக்குறைகளை எப்படி விளங்கிக்கொள்வது? இதற்கான ஒரு முழுதளவான அணுகுமுறையை கொண்டிருக்கிறோமா? உளவியல் சார்ந்த அச்சத்தைக் காட்டிலும் இது ஒரு பிரதான பிரச்சினைதானா?

ப- நிச்சயமாக நான் அது குறித்த சந்தேகத்துடன் இருக்கிறேன். உண்மையில் நாங்கள் வடக்கு தெற்குக்கிடையில் இறுகிப்போயுள்ள துருவமயப்படுத்தல் குறித்து தெளிவாக இருக்க வேண்டும். சிங்கள-தமிழ் மக்களுக்கிடையில் உள்ள துருவமயப்படலை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நான் நினைக்கிறேன் வட-கிழக்கு மற்றும் தெற்கிலும் பொரளாதாராப் பிரச்சினைகளும் பூதாகரமாகவுள்ளன. ஆனால் அவர்களுக்கு வேறுபல பிரச்சினைகளுமுள்ளன. இரண்டு வருடங்களுக்கு முதல் மனித உரிமைகள் தின சந்திப்பொன்றை நடத்தினோம். அதில் வடமத்திய மாகாணத்தின் புத்தளம், மொனராகல, பதுளை போன்ற மாவட்டங்களிலிருந்தும் அம்பாரை போன்ற இடங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் காணிப் பிரச்சினை சம்பந்தமாகவே பேசினர். தெற்கில் சாமான்ய மக்களுக்கும் கிராமிய சமூகங்களுக்கும் காணிப் பிரச்சினை இருக்கிறது. உண்மையில் கிராமிய மக்களின் காணி உரிமைகளுக்கான பலமான அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. அது தெற்குக்கு ஒரு விதமாகவும் வட-கிழக்குக்கு வேறுவிதமாகவும் அமைந்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை காணிப் பிரச்சினை என்பது ஒரு அடிப்படையான பிரச்சினை நாம் நமது கவனத்தைப் போதியளவு செலுத்தாத ஒர் அடிப்படையான பிரச்சனை அது.

கே- ஆக, இறுதியாக, எங்களதும் சிவில் சமூகத்தினதும் பணி அரசியல்ரீதியான ஆட்சி மாற்றத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காது உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறையைக் கொண்டிருப்பதோடு தங்களது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்துக் குழுக்களுடனும் இணைவை ஏற்படுத்திக்கொண்டு ஒரு முழுதளவிலான பிரச்சாரத்தை அல்லது ஒர் அணுகுமுறையை கட்டியெழுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இந்த சூழலில் நாம் எதனைச் செய்தாக வேண்டும்?

ப- ஆம், நிச்சயமாக நான் அப்படித்தான் நினைக்கிறேன். நீங்கள் சொல்வதைப் போல உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை நாம் பயன்படுத்த வேண்டும். மனித உரிமைகளுக்காக இயங்கிக் கொண்டிருக்கின்ற வெவ்வேறுபட்ட அமைப்புகளையும் ஒன்றிணைத்து இதனை உருவாக்கலாம். அத்துடன் ஜனநாயக ஆட்சியின் பகுதியாகவுள்ள எதிர்ப்பு, ஆட்சேபம் போன்ற கருத்தியல்களையும் நாம் வளர்த்தெடுக்கவேண்டும். எதிர்ப்பதற்கு நாங்கள் ஒரு போதும் அச்சப்படக்கூடாது. நாங்கள் எல்லோரும் கடந்த காலங்களில் அதைச் செய்தோம். துரதிஸ்டவசமாக கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் அதைச் செய்யவில்லை. ஆனால் கட்டாயம் நாங்கள் அதைச் செய்திருக்க வேண்டும். மீண்டும் நாங்கள் அதைச் செய்யும்போது அதிகம் புத்திபூர்வமாகவும் ஆக்கத்திறனுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். நானும் நீங்களும் நீங்கள் சொன்னதைப் போல அடிக்கட்டுமானங்களை கட்டியெழுப்ப நமது வரலாற்றுக்கு மீளத் திரும்புதல் வேண்டும். அது உண்மையில் சவால் மிக்கதும் கூட.

நன்றி - எதுவரை இதழ்
...மேலும்

May 14, 2013

கூடங்குளம் - ஊழல் குற்றச்சாட்டால் கேள்விக்குள்ளாகும் பாதுகாப்பு - கவின் மலர்


மே 14 அன்று கன்னியாகுமரி - தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் ஒரு வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. கூடங்குளம், செட்டிக்குளம் போன்ற பகுதிகளில் கடையடைப்பும் நடத்தப்படுகின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி அணு உலை செயல்படத் தொடங்கிவிடுமோ என்கிற பதட்டம் அப்பகுதி மக்களிடையே உள்ளது. கூடங்குளம் அணு உலை இயங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு பல மட்டங்களிலும் பேசுபொருளாகி இருக்கிறது. போராட்டக்குழு தலைவரான சுப. உதயகுமார் ’’இன்னும் தீவிரமாக சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் செய்யவிருக்கிறோம். அப்போது நாங்கள் கைதுசெய்யப்படலாம். அதற்கும் தயாராகத்தான் இருக்கிறோம். எல்லாவற்றையும் மீறி அணு உலை இயங்கத் தொடங்குமென்றால், தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவோம்’’ என்கிறார்.

கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்துக்கு 1989ல் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டிருக்கிறது.  அந்த அனுமதிக் கடிதம், முதலில் 500 மெகாவாட்ஸ் திறனுள்ள 4 அணு உலைகளை அமைகக்விருப்பதாகவே தொடங்குகிறது. அதே கடிதத்தில் பிற்பகுதியில் 1,000 மெகாவாட்ஸ் திறன் கொண்ட 2 அணு உலைகளை அமைக்கவிருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் எத்தனை அணு உலைகள் அமைக்கப்படவிருக்கின்றன என்பதில் அரசுக்கே தெளிவில்லை என்பது விளங்குகிறது. அணு உலையை குளிர்விக்க பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுத்துவருவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தது அரசு. ஆனால் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள மக்களுக்கான தண்ணீர்த் தேவை, அணையின் கொள்ளளவு, நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள மழையின் அளவு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போதுதான் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமில்லை என்கிற உண்மை 2004ல் உறைக்கிறது அரசுக்கு.  அதன்பிறகுதான் கடல் நீரில் இருந்து உப்பை பிரித்தெடுத்து அந்தத் தண்ணீரை பயன்படுத்தப்போவதாக திட்டத்தை மாற்றுகிறது அரசு. அரசு விதிகளின்படி, அறிவித்த திட்டத்தில் ஏதாவது மாறுதல் இருந்தால் மீண்டும் ஒரு முறை சுற்றுச்சூழல் அனுமதியும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் நடத்தப்பட வேண்டும். ஆனால் இவற்றை அரசு செய்யவில்லை. ஆகவே இப்போதிருக்கும் சூற்றுச்சூழல் அனுமதி செல்லாது என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார்.
புகுஷிமாவுக்குப் பிறகு பிரதமர் நியமித்த குழு, பாதுகாப்பு தொடர்பான 17 பரிந்துரைகளை நிறைவேற்றாமல் அணு உலையில் எந்த செயல்பாடும் கூடாது என்று கூறியிருக்கிறது. இந்த 17 பரிந்துரைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு அளித்த இந்திய அணுசக்திக் கழகம் 17 பரிந்துரைகளை நிறைவேற்றாமல் செயல்பாட்டில் இறங்கமாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. ஆனால் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இடைப்பட்ட காலத்தில் எரிபொருள் நிரப்ப உத்தரவிட்டுவிட்டது. எரிபொருள் நிரப்பியபின் தண்ணீரை ஊற்றி செயல்பாட்டைத் தொடங்குவதற்குப் கிரிடிக்காலிட்டி (Criticality) என்று பெயர்.  இதனையடுத்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மீண்டும் ஒரு வழக்கு போட்டது. ''17 பரிந்துரைகளில் 6 பரிந்துரைகளை நிறைவேற்றி விட்டோம். மீதமுள்ளவை அதீத பாதுகாப்பு சார்ந்தது (Abundant Safety) என்றது அரசு. ’’உலகமெங்கும் அணு உலை குறித்த விழிப்புணர்வு வந்துவிட்ட சூழலில், அங்கு வசிப்பவர்கள் தலித்துகளாகவும் மீனவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கு அதீத பாதுகாப்பு தேவையில்லையென அரசே நினைத்துவிட்டது போலிருக்கிறது’’ என்கிறார் மனுதாரர் ஜி.சுந்தர்ராஜன். ‘’அமைச்சர்களுக்கு மட்டும் இசட், இசட்+ என்று பாதுகாப்பை வலுப்படுத்திக்கொண்டே போகிறீர்களே...! சாதாரண மகக்ள் என்றால் அத்தனை இளக்காரமா?’’ என்று உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘நாங்கள் தொழில்நுட்பக்குழு அல்ல’ என்று கூறிவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். ’’17 பரிந்துரைகளையும் நிறைவேற்றியபின் செயல்பாடு தொடங்கும் என்று உறுதி அளித்துவிட்டு 6 முடிந்தவுடன் எரிபொருளை நிரப்புவது சரியா என்று விசாரிக்க தொழில்நுட்பக் குழுவாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை” என்பது பூவுலகின் நண்பர்கள் தரப்பின் வாதமாக இருந்தாலும், அதை மறுத்துவிட்டது உயர் நீதிமன்றம். அதன்பின்னரே உச்ச நீதிமன்றத்தை நாடியது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. ‘எத்தனை ஆயிரம் கோடி செலவழித்திருந்தாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்’ என்று உச்ச நீதிமன்றம் விசாரணையின்போது கருத்து தெரிவித்தது. டிசம்பர் 3 வரை விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இப்போது வெளிவந்திருக்கிறது. 5 அமைப்புகள் இணைந்து அணு உலையின் ஒவ்வொரு பாகத்தையும் ஆராய்ந்து அதன் தரம் குறித்து அறிக்கை அளித்தபின்னரே அணு உலை இயக்கபப்டவேண்டும் என்று கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனாலும் சுற்றுப்புற மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியை அரசு அளிக்காமல் இருப்பது தொடர்பான எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை இந்தத் தீர்ப்பு

‘’இந்தத் தீர்ப்பு துரதிஷ்டவசமான தீர்ப்பு என்றாலும் 15 நிபந்தனைகளுடன் தான் அணு உலை திறக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ரஷ்ய நிறுவனமான ஜியோபோடால்ஸ்க்கிடமிருந்து பெறப்பட்ட எந்திர பாகங்கள்தான் கூடங்குளம் அணு உலைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன. தரம்குறைந்த பாகங்களை அயல்நாடுகளுக்கு அனுப்பிய குற்றத்தின் கீழ் அந்நிறுவனத்தின் இயக்குநர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே புதிதாக் ஒரு வழக்குபோடுவதா அல்லது மறுசீராய்வு மனு போடுவதா என்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் ஜி.சுந்தர்ராஜன். 

ஜியோபோடால்ஸ்க் என்கிற ரஷ்ய நிறுவனம், ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்டு, மற்ற நாடுகளில் நிர்மாணிக்கப்படுகிற அணுஉலைகளுக்கு நீராவி இயந்திரங்களையும் முக்கிய அணு உலை பாகங்களையும் தயாரித்து விற்பனை செய்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் இந்த நிறுவனம்தான் எந்திரபாகங்களை அனுப்பியது. இந்நிலையில் திருட்டுத்தனம், ஏமாற்றுதல், ஊழல்,  போன்ற குற்றங்களுக்காக ரஷ்ய உளவு நிறுவனம் ஜியோ போடால்ஸ்க் நிறுவனத்தின் இயக்குநர் .செர்கை ஷுடோவ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  பல்கேரியா, ஈரான், உக்ரேனியாவில் கிடைக்கும் தரமற்ற, விலை குறைந்த இரும்புத் தகடுகளினால் தயாரிக்கப்பட்ட எந்திரங்களை சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கட்டப்பட்டுள்ள அணு உலைகளுக்கு விற்றதாக ஜியோ போடால்ஸ்க்  மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலையில் 4 வால்வுகள் பழுதடைந்ததாக அரசுத் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. அதை சீர் செய்தவுடன் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.  

ஜியோ போடால்ஸ்க் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட  உதிரி பாகங்களால் இந்தியா, பல்கேரியா, ஈரான், சீனா போன்ற நாடுகளில் கட்டப்பட்டுவருகிற அனைத்து உலைகளும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்குப் பின் ரஷ்யாவிடம் அனைத்து பாகங்களின் தரச்சான்றிதழ்களைக் கேட்டிருக்கிறது பல்கேரியா.  சீனா 3000 கேள்விகள் கொண்ட பட்டியலை தயாரித்து அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறது. இதுபோன்ற எந்த முயற்சியையும் இந்தியா செய்யவில்லை. ஷியோ போடால்ஸ்க் கம்பெனி விற்பனை செய்த தரங்குறைந்த இயந்திரப்பாகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யவில்லை எனில், மிகப் பெரிய பேரிடரை இந்தியா சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் ஆர்மீனியன் தலைநகரில் செயல்படும் பெல்லோனா ஃபவுண்டேஷன் அமைப்பும்,  இந்திய மக்கள்தான் இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரஷ்ய சுற்றுச்சூழல் நிறுவனமான இகோ டிபென்ஸ் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  ‘’ஊழல் செய்து தரம் குறைந்த பாகஙக்ளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அணு உலை எங்களை அச்சுறுத்துகிறது. அதை மூடும் வரை நாங்கள் ஒய மாட்டோம்’’ என்கிறார் இடிந்தகரை சுந்தரி.

ஷியோ போடால்ஸ்க் போன்றே இசர்ஷோர்கி சவோடி என்கிற ரஷ்ய நிறுவனம், 2002ல் கூடங்குளம் அணுஉலைக்கு தேவையான கொதிகலன்ளை வடிவமைக்க முறைப்படியான ஒப்பந்தம் போடும் முன்பே, கூடங்குளம் அணுஉலைகளுக்கு தேவையான இரண்டு அணுஉலை கொதிகலன்களையும் தயாரிக்க தொடங்கிவிட்டதாக அதன் பொது இயக்குனர் யோவ்ஜெனி செர்கிவ், அந்த கொதிகலன்களை ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி  துறைமுகத்திற்கு கடல் வழியாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் தெரிவித்தார். கூடங்குளம் அணுஉலை கட்டப்படுவதற்கு தேவையான கொதிகலன்களை உறுதியாக இந்தியா தங்களிடம் தான் வாங்கும் என்ற நம்பிக்கை கிடைத்துவிட்ட காரணத்தால் அவற்றை முன்னதாகவே தயாரிக்கத் தொடங்கிவிட்டதாக அந்த வழியனுப்பும் நிகழ்விலே 2004 நவம்பர் மாதத்தில் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவில் வெளிவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. இன்ஃபார்ம்டெக் நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் முராக் ரஷ்ய அணு உலைகளுக்கு தரம் குறைந்த அளவீட்டுக் கருவிகள் வழங்கியதில் முறைகேடுகள் செய்ததற்காக 3 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பட்டிருக்கிறார்

ஏப்ரல் 19,2013 தேதியிட்ட கடிதம் எண் NPCIL/VSB/CPIO/2574/KKNPP/2013/737 ல் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் ஷியோ போடால்ஸ்க், இன்ஃபார்ம்டெக், இசர்ஷோர்கி சவோடி ஆகிய நிறுவனங்களிடமிருந்துதான் கூடங்குளம் அணு உலையின் முக்கியமான பாகங்கள் அனைத்தும் பெறப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தரோ தனது rediff.com நேர்காணலில் ‘’நாங்கள் ரஷ்யாவிடமிருந்து மட்டுமில்லை, தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, செக் குடியரசு, ஸ்ளோவாகியா மற்றும் பல நாடுகளிலிருந்தும் பாகங்களை இறக்குமதி செய்திருக்கிறோம். ஆகவே இது முழுக்க முழுக்க ரஷ்ய அணு உலை என்று கூற முடியாது’’ என்று கூறியிருக்கிறார். ‘’இதுவரை ரஷ்ய அணு உலை என்று கூறிவந்தவர்கள் இப்போது அப்படி கூற முடியாது என்று சொலவதன் மூலம் ஊழல்வாதிகளை மறைக்கப் பார்ப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது’’ என்கிறது அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம்.

‘’கூடங்குளம் அணு உலை தொடர்பான  ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. அந்த இசர்ஷோர்கி சவோடி நிறுவனம் தயாரித்த அணுஉலைக் கொதிகலனில்தான் வெடிப்புகள், வெல்டுகள் இருப்பதாக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் வல்லுனர் குழு சுட்டிக்காட்டிய பிறகு இந்திய அணுசக்திக் கழகம் இறுதியாக ஒப்புக்கொண்டுள்ளது. வெல்டிங் செய்யப்படாமல் இருந்தால்தான் அது பாதுகாப்பான அணுஉலை. இல்லையெனில் இது வேதி வினை புரியும் போது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் தற்போது, கூடங்குளம் அணுஉலைகளுக்கு அதிகப்படியாக கூடுதலாக மேலும் 4000 கோடி செலவிடப் பட்டுள்ளதாக அணுசக்திக் கழகம் சொல்லுகிறது. அணு உலைகள் இயக்கப்படும் நிலையில் இருக்கும் போது, ஏன் கூடுதலான செலவு என்று மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். தரமற்ற பாகங்களை மீண்டும் மீண்டும் கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவாகிறதா அல்லது நடந்த ஊழல் பேரங்களை மறைக்க மேலும் கையூட்டு கொடுக்கப்படுகிறதா? என்று காங்கிரசு அரசு விளக்க வேண்டும்.’’ என்கிறார் புஷ்பராயன்.

இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமியை தொடர்புகொண்டபோது ‘’தரமில்லாத பொருள் எதையும் இந்தியா வாங்கவில்லை. முதலில் இந்திய விஞஞானிகள் ரஷ்யாவுக்குச் சென்று உற்பத்தி செய்யுமிடத்திலேயே பொருட்களை பார்வையிட்டு தரம் சரியாய் இருக்கிறதா என்று பார்த்தார்கள். அதன் பின் ஏற்றுமதி செய்யும் தருவாயில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள விஞ்ஞானியின் தரச் சான்றிதழ் பெற்று, இந்தியாவுக்கு வந்திறங்கியதும் அணுசக்தி கழகத்தின் விஞ்ஞானிகள் குழு ஒரு தரச்சான்றிதழ் வழய்ங்கும். பின் ஹைட்ரோ சோதனை நடத்தப்பட்டு அதிலும் தரம் சோதிக்கபப்டும். ஆகவே தரம் குறித்து எந்த சந்தேகமும் தேவையில்லை. அங்கே ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதற்கும் தரத்துக்கும் தொடர்பே இல்லை. 'மே மாத இறுதியில் அணு உலை செயல்படத் தொடங்கும் என்பது உறுதி. அணு உலை கட்டுப்பாட்டு வரியம் அதன் செயல்பாடுகளை நேர்த்தியாக கண்காணித்து வருகிறது. மின் உற்பத்தி துவங்கப்படவேண்டும் என்பது முக்கியம். போராடும் மக்கள் யார் சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். போராடுபவர்களுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் விஞ்ஞானிகள் குழு அறித்த அறிக்கைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களின் போராட்டம் இல்லையென்றால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பேயே மின் உற்பத்தி தொடங்கி இருக்கும். அரசுக்கு இதனால் 1,464 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.’’ என்றார்.

அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையில் ’’கூடங்குளத்தில் இரண்டு அணுஉலைகளின் பல்வேறு பகுதிகலில் ஷியோ போடால்ஸ்க்  நிறுவனத்தின் பாகங்கள், குறிப்பாக அணுஉலை கொதிகலன் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றால் தற்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பது போன்று தோன்றலாம். ஆனால், அணுஉலை இயங்கத் தொடங்கும் போது தான், அந்த தரமற்ற பாகங்கள் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டும். மக்களின் பாதுகாப்பிற்கு அவைகள் உறுதியாக பெரிய கேடு விளைவிக்கும்.’’ என்கிறார்.

’’அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர். எஸ். சுந்தர் திடீரென்று இப்போது ரஷ்யாவில் இருந்து பாகங்கள் பெறப்பட்டாலும், அதை நாங்களேதான் நிர்மாணித்தோம் என்று அணு உலைக்கு சான்றிதழ் அளிக்கிறார். கோபாலகிருஷ்ணன் வெளிப்படையாக தரமற்ற பாகங்கள் குறித்து கட்டுரை எழுதிய பிறகு அவசரம் அவசரமாக இப்படிச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? யாரையோ காப்பாற்ற எண்ணுகிறதா அரசுத் தரப்பு? ஆதாரங்களுடன் குற்றம்சாட்டும்போது, தரத்தை மீண்டும் சோதித்துப் பார்ப்பதில் என்ன பிரச்சனை? மடியில் கனமில்லாவிட்டால் எதற்கு வழியில் பயம்?’’ என்கிறார் சுப.உதய்குமார்.

அண்மையில் rediff.com தளத்துக்காக அதன் பத்திரிகையாளர் வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தரை சந்திக்க அணு மின் நிலைய வாயில் வரை வந்தபின்னும், அவரை உள்ளே அனுமதிக்காமல் அங்கிருந்து வேறிடத்துக்கு அழைத்துச் சென்று பேட்டி தந்திருக்கிறார். அந்த நேர்க்காணலில் ‘’ஏன் என்னை அனுமதிக்கவில்லை?’’ என்கிற கேள்விக்கு ‘’நாங்கள் பத்திரிகையாளர்களை அனுமதிப்பதில்லை ஆனால் பொதுமக்களை அனுமதிக்கிறோம். உங்களைவிட அவர்கள் இன்னும் கடினமான கேள்விகளைக் கேட்கிறார்கள்’’ என்று பதில அளித்திருக்கிறார். 

‘’ஏன் ஊடகங்களை உள்ளே விடுவதில்லை? எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. செயல்படாத அணு உலையை செயல்பட்டதாகக் காட்ட அரசு அவசரம் அவசரமாக ஏதோ செய்கிறது. ஒருநாளாவது நாங்கள் அணு உலையை செயல்படுத்தினோம் என்று யாருக்கோ நிறுவ நினைக்கிறார்கள். அதன்மூலம் ஊழலை மூடி மறைக்கிறதோ என்றும் எங்களுக்கு சந்தேகம் உண்டு. முதல் அணு உலை செயல்படுவதில்லை. இரண்டாவது அணு உலையை தொடங்கப்போவதாக அரசு சொல்கிற்து. தொடங்கும் நாளன்று பத்திரிகையாளர்கள், சுதந்திரமான விஞ்ஞானிகள் என்று எல்லொரையும் உள்ளே அனுமதித்து எல்லோரையும் சாட்சியாக வைத்துத் தொடங்கட்டுமே பார்க்கலாம்’’ என்கிறார் சுப. உதயகுமார்.

ஒரு நிபுணர் குழு இதன் தரத்தை ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ளவேண்டும். அநதக் குழுவில் அணுசக்தித் துறை, இந்திய அணுசக்திக் கழகம், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குறைவாகவும், நாட்டின் மற்ற நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகள் அதிகமாகவும் இடம்பெற்றிருக்கவேண்டும். அக்குழுவின் அறிக்கை வெளிவரும்வரை அணு உலை செயல்படக்கூடாது’’ என்று கோபாலகிருஷ்ணன் கூறியிருப்பதை புறந்தள்ள முடியாது. இதுவே போராடும் மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. மின் உற்பத்தியை விட இந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதே அரசின் முன் உள்ள முதல் கடமை.

கவின்மலரின் முகநூல் வழியாக பெறப்பட்டது... நன்றி
...மேலும்

Followers