தலித் பெண்ணியம்: எல்லோருக்கும் "ஒன்று" என்பது சுத்த அபத்தம்! - ரூத் மனோரமா

நேர்காணல் - என்.சரவணன்

சர்வதேச மனித உரிமைகள் சாசனம் 50 வருடங்களாக உலக மனித உரிமைகளைப் பேணி வருகிறதாம். இந்தியா அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று 50 வருடங்களையும் அடைந்து விட்டதாம். ஒவ்வொரு மணித்தியாலமும் இரண்டு தலித்துகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தினமும் 3 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தினந்தோறும் 2 தலித்துகள் கொல்லப்படுகின்றனர். ஒவ்வொரு தினமும் இரண்டு தலித் வீடுகள் அழிக்கப்படுகின்றன.

தலித்தியப் போராட்டமானது இன்றைய சூழலில் தவிர்க்க இயலாததும், காட்டமானதுமாக பரிணமித்துவிட்டிருக்கிற நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் செயற்பட்டுவரும் பல்வேறு தலித் இயக்கங்களும் ஒன்று சேர்ந்து 1998 10-11 ஆகிய தினங்களில் கூடி தலித் மக்களின் மனித உரிமைகளுக்கான தேசிய செயற்திட்டம் ஒன்றை வரைந்தன. அதனை சென்ற வருடம் (ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் 50வது வருட பூர்த்தி தினமான) டிசம்பர் 10 அன்று தொடக்கம் (அம்பேத்கார் பிறந்த தினமான) 14 ஏப்ரல் 1999 வரையான காலத்திற்குள் உலக அளவில் தலித் மக்களின் பிரச்சினைகளின் பால் கவனத்தை ஈர்ப்பதற்கும், தலித் மக்களின் அவலங்களையும் உரிமைகளையும் பற்றி பிரசாரப்படுத்தும் காலமாகப் பிரகடனப்படுத்தி செயற்பட்டனர். தலித் விஞ்ஞாபனம், தலித்களின் உரிமைகளும் மனித உரிமைகளே எனக்கூறும் தலித் மனித உரிமைகள் சாசனம், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், கையெழுத்து சேகாpப்பு, இந்திய அரச தரப்பினருக்கு விதந்துரைக்கவென கோரிக்கைகள் என பல்வேறு ஆவனங்களை உள்ளடக்கிய ஒரு கோவையையும் விநியோகித்து வருகின்றனர். ஐநாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையில் ”மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களாகக் கருதி” தலித் மக்களின் பிரச்சினைகளை ஐ.நாவில் பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படியும், இப்பிரச்சினைகளுக்கென விசேட ஐ.நா அறிக்கையாளர் (Special Rapporteur ) ஒருவரை நியமிக்கும்படியும் கோரியுள்ளனர். இப்பிரச்சாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வந்து ஒரு கூட்டத்தையும் ஒழுங்கு செய்திருந்தனர். இலங்கையில் இனத்துவ கற்கைக்கான சர்வதேச நிலையத்தினர் இதனை ஒழுங்கு செய்திருந்த போதும் இது ஒரு சில ”புத்திசீவிகள்” மட்டுமே கலந்து கொண்ட நிகழ்ச்சியாக குறுகிப்போனது வேறுவிடயம்.

தலித் மக்களின் பிரச்சினைகளையும் அப்போராட்டங்களை ஒன்றிணைக்கும் பணியாகவும், மேற்கொள்ளப்படுகின்ற இந்த முயற்சியில் சகலரையும் இணைக்கும் வகையில் வெப் தளம் ஒன்றும் இவ்வமைப்பினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் தலித் மக்கள் பற்றிய பல்வேறு விபரங்கள், ஆய்வுகள், விவாதங்கள், செய்திகள், கட்டுரைகள் என்பன உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், இதிலிருந்து இன்னும் பல தலித், மற்றும் மனித உரிமைகள் பற்றிய வெப் தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை வந்திருந்த இவ்வியக்கத்தின் கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் தலித் அமைப்பைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளரான திருமதி. ரூத் மனோரமாவுடனான நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது. இந்திய தேசிய அளவில் முதன் நிலை தலித் செயற்பாட்டாளராக அறியப்பட்டவர் இவர். வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும், மாற்று நோபல் விருது உட்பட பல விருதுகள் இவரது தலித்திய செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.

தலித் பெண்ணிய செயற்பாட்டாளரான இவர் பெண்கள் மீதான அனைத்து ஓரங்கட்டல்களையும் கண்காணிப்பதற்கான இரண்டாவது தென்னாசிய பெண்கள் மாநாடு கடந்த மே மாதம் இலங்கையில் நடந்தபோது அவர் தலைமை வகிக்கும் ”பெண்களின் குரல்” (Women's veice) இயக்கத்தின் சார்பில் அதில் கலந்துகொண்டிருந்தார். அப்போது பெறப்பட்டது இந்த நேர்காணல். இது சரிநிகரில் வெளிவந்தது.


தலித் அரசியலின் சமகால வடிவத்தைப் பற்றி கூறுங்களேன்.

முன்னர் போலல்லாது இன்று பல்வேறு அரசியல் தலைமைகள் தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து செயலளவில் இல்லையென்றாலும் பேசத் தள்ளப்பட் டுள்ளனர். ஏலவே இருக்கின்ற கூலி விவசாயிகளின் இயக்கங்கள், தொழிற்சங்க இயக்கங்கள் ஏன் சில இடங்களில் மாக்சிய இயக்கங்களையும் விட பலமாக வந்து கொண்டிருக்கிறது தலித் இயக்கம். இதற்கான காரணம் தலித் அரசியலானது வெறுமனே சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான இயக்கமாக செயற்படவில்லை. விதிவிலக்கானவற்றைத் தவிர பெருமளவில் சகல அடக்குமுறைகளையும் எதிர்த்துத்தான் தலித் அரசியல் நிறுவப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தலித் பெண்ணியம் பற்றி பேச நிர்ப்பந்தித்த காரணிகள் என்ன?

தலித்துகளில் அலைவாசிப்பேரான பெண்களின் பிரச்சினைகள் குறித்த விசேட கவனம் கொள்ளப்பட்டு வருவது கடந்த பத்தாண்டு காலமாகத் தான். இதற்கு காரணம் சமூகத்தில் விளிம்பில் இருக்கும், இறுதியாக ஓரங்கட்டப்பட்டவர்கள் என கருதப்படும் தலித்துகளிலும் ஆண் தலித் துகளால் பெண் தலித்துகளை ஒடுக்கப் படுவதை விசேடமாக கருத்திற் கொண்டே தலித் பெண்ணியம் குறித்த கருத்தாக்கம் வளரத் தொடங்கியது. சகல அதிகாரத்துவ நிலைகளின் மீதும் போர் தொடுக்கின்ற தருணத்தில் ஆண் அதிகாரம் மட்டும் தப்பி, தமது அதிகாரத்தின் மீதான கவனத்தை திசை திருப்பி விடுகிறது என்றே சொல்வேன்.

பெண்கள் மீதான ஆணாதிக்க அதிகாரம் என்பது வர்க்க, சாதிய, இனத்துவ அரசியல்களைக் கடந்தது. ஒரு புறம் வர்க்க, சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து போராடுகிற ஆண்கள் சக தலித் பெண்ணின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். தலித் பெண்களைப் பொறுத்தளவில் ஆணாதிக்கம், சாதியம் பொருளாதார, கலாசாரம் என சகல வழிகளிலும் ஒடுக்கப்படுகின்றனர்.

தலித் பெண்கள், ஒரே நேரத்தில் அம்பேத்கார் பொது எதிரியாக சுட்டிக் காட்டிய பார்ப்பனியம் மற்றும் முதலாளித் துவம் என்பவற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பெண்ணியப் போராட்டம் சாதிய ஒடுக்குமுறையை மறுதலித்து வந்திருக்கிறது என்று கருதுகிறீர்களா?

ஒரு புறம் பெண்கள் என்பதற்காகவே பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவரும் அதே நேரம் இன்னொரு புறம் தலித் பெண்ணாக இருப்பதால் விசேடமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அப்பிரச்சி னைகளை எதிர்த்துப் பேச முடிவதில்லை. மிஞ்சிப் பேசினால் என்னோடு படுத்தவள் தானே என்று பேச்சை அடக்கும் நிலை உள்ளது. இன்று படுத்தால் தான் நாளை வேலை என்கின்ற நிலை பல கிராமங்களில் இன்று நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில் உயிரியல் ரீதியில் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்றும் பெண்கள் எல்லோரும் பெண்கள் தான் என்றும் பேசுவதெல்லாம் சுத்த அபத்தம். பெண்கள் அமைப்புகளில் கூட நிலவுகின்ற சாதிய ஓரங்கட்டல்களை இங்கு காணலாம்.

தலித் விடுதலைக்கு தலித் பெண்ணின் விடுதலை இன்றியமையாதது என்றா கூறுகிறீர்கள்?

ஆம், எப்படி இன்று இந்திய உபகண்டத்தில் தலித் விடுதலையில்லாமல் புரட்சிகர சமூக மாற்றம் சாத்தியமில்லையோ அதுபோல பெண் விடுதலை பெறாத தலித் விடுதலையும் சாத்தியமில்லை. இந்த வகையில்தான் தலித் விடுதலைக்கு பெண்களின் விடுதலை முன்நிபந்தனை யாகின்றது. அது போல தலித் விடுதலையை உள்ளடக்காத பெண் விடுதலையும் சாத்தியமில்லை எனும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். தலித் அரசியல் பற்றிப் பேசுகின்ற சில நட்பு சக்திகள் கூட தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இணைவினை முக்கி யப்படுத்தி செயற்படுகின்ற சந்தர்ப்பங்களில் பெண்களையோ, தலித் பெண்களையோ ஒரு சக்தியாக கருதி அதில் இணைக்காமல் இருப்பது துரதிருஸ்டவசமானது.

தலித் பெண்கள் தனியாக நிறுவனமயப்படுதல் அவசியம் என்கிறீர்களா?

இன்றைய நிலையில் தலித் பெண்களை தலைமையாகக் கொண்ட ஒரு அமைப்பு உருவாவது அவசியம். இன்றைய ஆதிக்க அமைப்புமுறையினால் ஓரங்கட்டப்பட் டவர்களும் இவர்கள் என்பதால் இவர்க ளால் தான் இதனை மாற்றவும் முடியும். எனவே அப்படிப்பட்ட தலைமை தாங்கு தலுக்கு தலித் பெண்களை தயார்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். அது சுலபமான விடயமல்ல. அதற்கு சில விலைகளைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இதற்கு எந்த வித சமரசங்களும் செய்துகொள்ளத் தேவையில்லை.

உயர் சாதியினர், உயர் வர்க்கத்தினர் என்போர் எப்படிப்பட்ட ஆணாதிக்க அடக்குமுறையை பிரயோகித்து வருகி ன்றனரோ அதுபோலவே தலித் பெண்கள் மீது தலித் ஆண்கள் பிரயோகித்து வரும் அடக்குமுறை கிஞ்சித்தும் குறைவில்லாத வகையில் நடைமுறையிலிருந்து வருகி ன்றன. எனவே தான் தலித் பெண்கள் தனி யாக அணி திரள வேண்டிய, தனியாக தலைமை வகிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். பெண்களின் பேரம் பேசும் அற்றலைப் பலப்படுத்தவும் இது தான் வழி. அப்படி இருக்கும்பட்சத்தில் தான் பெண்களின் கோரிக்கைகளை வென்றெ டுக்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்தே நாங்கள் தலித் மக்கள் பற்றிய விபரங்களை சேகரிக்கத் தொடங்கினோம். அது ஏறத்தாழ 1987 ஆக இருக்கும். அதிலிருந்து 1995 ஆகும் போது நாங்கள் தலித் மக்களின் தேசிய சம்மேளனம் (National Federation of Dalits) என்ற அமைப்பை ஆரம்பித்து அதன் கீழ் இந்தியா தழுவிய தலித் இயக்கங்களை மையப்படுத்தி வருகிறோம்.

கடந்த ஆறு மாதங்களாக தேசிய அளவில் பல பாசறைகளை நடத்தி இருக்கிறோம். அதன் மூலம் தேசிய செயற் திட்டம் ஒன்றையும் வரைந்துள்ளோம். தலித் பெண்களின் விஞ்ஞாபனம் ஒன்றையும் வரைந்துள்ளோம். முதலில் 5 வருடத் திட்டம் ஒன்றைத் தொடக்கியுள்ளோம். இயக்கத்தில் பெண்களை தலைமைத் துவப்படுத்துவது. ஏனைய இயக்கங் களுடன் ஒன்று சேர்ந்து வேலை செய்வது எந்த அடிப்படையில் என்பன போன்ற வற்றில் அக்கறை செலுத்தி வருகிறோம்.

இன்று தலித் மக்களின் பிரச்சினைகளில் கர்நாடகம் தமிழ்நாடு போன்ற மாநிலங் களிலும் நிலப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பஞ்சமி நில மீட்பு விடயத்தை தலித் இயக் கங்கள் முன்னெடுத்து வருகின்றன. இதில் முகம் கொடுக்கின்ற முக்கிய பிரச்சினை என்னவென்றால் பல தலித் இயக்கங்கள் சாதிவாரியாக பிரிந்து செயற்படுகின்ற போக்கும் இல்லாமல் இல்லை. பறையர், பள்ளர், சக்கிலியர் என சாதிவாரியாக பிரிந்து காணப்படுகின்றனர்.

பெண்களின் பிரச்சினைகளை தலித் பிரச்சினையோடு சேர்த்து விசேட கவனத்துக்குள்ளாக்கியது போல தலித் பிரச்சினையுடன் வர்க்கப் பிரச்சினையை எவ்வாறு ஒன்றிணைத்து செயற்பட்டுகிறீர்கள்?

இன்னமும் பல இடதுசாரி அணிகள் தொழிற்சங்கங்கள் என்பன பெண்கள் பிரச் சினையைக் கூட தனித்த ஒரு பிரச்சினையாக அடையாளம் காணாத சூழ்நிலையில் தலித் மக்களின் பிரச்சினை பற்றிய விடயத்திலும் அது போன்ற நிலை காணப்படுகிறது தான். இன்றும் வர்க்கப் பிரச்சினையின் கீழ் மாக்சீய இயக்கங்களில் அணிதிரண்டிருக்கின்ற அடிமட்ட அங்கத்தவர்களில் பெரும்பான் மையோர் தலித்துகள் தானே. தலித்துகள் அனைவரும் வர்க்கச் சுரண்டலுக்கு அதிகமாக இலக்காபவர்கள் தானே. நாங்கள் கூறுவது அந்த சுரண்டலை விட விசேட மான சுரண்டல்களுக்கு தலித்துகள் பலியாக்கப்படுகிறார்கள் என்பதும், தலித்துகளிலும் தலித் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுவருகிறார்கள் என்பதையும் தான். பெண்கள் பிரச்சினையையும் பொருளாதாரப் பிரச்சினையாக இனங் கண்டு வந்ததைப்போல தலித் பிரச்சினையும் வர்க்கப் பிரச்சினையோடு மட்டும் குறுக்கிப் பார்க்கும் போக்கிலிருந்து இன்னமும் பல சக்திகள் விடுபடவில்லை. தற்போது சில மாற்றங்கள் தென்பட்டு வருகின்றன. என்றாலும் தலித் பெண்கள் தங்களின் பிரச்சினையை தனித்து அடையாளம் காண்பதைப்போல தலித் ஆண்கள் தலித் பெண்களின் பிரச்சினைகளை உணர்ந் ததில்லை. அப்படி எதிர்பார்க்கவும் முடியா திருக்கிறது. அங்கு தான் தலித் பெண்ணி யத்தின் தனித்துவம் தங்கியிருக்கிறது.

தலித் பெண்கள் எவ்வாறு தங்களின் முன்னெடுப்புகளை விரிவுபடுத்தி வருகின்றனர்?

தலித் மக்களின் போராட்டமும் இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வெறுமனே தீண்டாமைக்கு எதிராக மட்டும் நிற்கவில்லை. அது போல அம்பேத்கார் சிலையை உடைத்து விட்டார்கள் என்ப தற்காக மட்டும் போராடப் புறப்படு வதில்லை. இன்று தலித் மக்கள் தலித் அரசி யலின் கீழ் நிறுவனமயப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதைத்தான் இன்றைய ஆரோக்கியமான விளைவாகக் காண வேண்டும். இனி நம்பிக்கையுடன் முன்செல்லலாம்.

தலித்துகள் அடிமட்டத்தில் உள்ள, வர்க்கச் சுரண்டலுக்கு அதிகமாக இரையாகின்றவர்கள். பெருமளவான தலித்துகள் விசாயிகள். கூலி விவசாயிகள். முன்னர் நிலம் இருந்தது இப்போது நிலம் இல்லை. நிலம் இருப்பவர்களுக்கோ பயிர்ச்செய்கைக்கு மூலதனம் இல்லை. இவர்கள் வங்கிக் கடனும் பெற முடியாத நிலை. தலித்துகள் தங்களின் நிலங்களை மீளப் பெறுவதற்கான போராட்டங்கள் எழுந்து வருகின்றன. காலனித்துவ காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் - இதனை விற்பது என தீர்மானிக்கும் பட்சத்தில் அது இன்னொரு தலித்துக்கு தான் விற்கப்பட வேண்டு மென்பது சட்டம். ஆனால் நிலச்சுவாந் தர்கள் பலர் இவர்களிடமிருந்து கபடத் தனமாக அந்நிலங்களைப் பறித்து பினாமி பெயர்களில் வைத்துக் கொண்டிருக் கின்றனர். தற்போது அந்த பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்.

இன்று நாடு முழுவதும் தலித் மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். இன்று அவர்களின் செயலில், சிந்திப்பில் மாற்றம் காணத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் அண்மையில் மரத்வாடா பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்காரின் பெயரை வைக்குமாறு அங்குள்ள தலித்துகள் கோரினார்கள். போராடினார்கள். அதன் போது மக்களை அடித்து துன்புறுத்தி, சொத்துக்களை நாசமாக்கி, துப்பாக்கிச் சூடு பிரயோகித்து அடக்கினார்கள். ஆனால் அதற்காக அது போன்ற போராட்டங்கள் நின்று விடவில்லை. நின்றுவிடப்போவ துமில்லை. ஒரு புறம் தீணடாமைக் கொடுமை, இன்னொருபுறம் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி, சுகாதாரப் பிரச்சினைகள், அரசின் எந்தவித நிர்வாகமும் இவர்களைச் சேராத நிலை இப்படிப்பட்ட நிலையில் தலித் மக்கள் சூனியத்துக்குள் வாழ்ந்து வருகிறார்கள். பீகாரில் சமீபத்தில் 22 தலித்துகளை ஒரே ராத்திரியில் வெட்டிக்கொன்றனர். இன்று பீகாரில் தலித் மக்களின் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத் துள்ளது. பிகாரின் நிலைமை தவிர்க்க முடியாத ஆயுதப் போராட்டத்துக்கு தலித்துக் களைத் தள்ளிவிட்டுள்ளது. தலித் பெண்கள் பலர் இரகசிய தலித் அரசியல் இயக்கங்களில் இணைந்து துப்பாக்கிகளை கையிலெடுத்துள்ளனர்.

அரசியல் சக்திகளை நிர்ப்பந்தப்படுத்துகின்ற பலத்தைக் கொண்டிருக்கிறீர்களா? பேரம் பேசும் ஆற்றலை பொருட்படுத்தும் நிலை எப்படி இருக்கிறது?

இன்றைய தலித் விஞ்ஞாபனம் இனி வரும் தேர்தல்களில் தேசிய அளவில் கட்சிகளிடம் முன்வைக்கப்படப்போகும் கோரிக்கையாக அமையப்போகிறது. தலித் மக்களை நிறுவனமயப்படுத்தி வருகின்ற இந்த நிலையில் இப்படிப்பட்ட அழுத்தங்கள் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் இவற்றின் விளைவுகளை உடனடியாக எதிர்பாhக்க முடியாது.

தலித் பெண்களின் கோரிக்கைகள் இப்படிப்பட்ட பாராளுமன்ற அரசியலில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன?

முன்னர் குறிப்பிட்ட தலித் தேசிய விஞ்ஞாபனத்தில் தலித் பெண்கள் குறித்த கோரிக்கைகளும் அடங்குகின்றன. இனி பேச்சுவார்த்தைகளுக்கு களம் அமைக்க வேண்டியேற்படப் போகிறது. தேர்தல் அரசியலில் 25 கோடி தலித் மக்களின் வாக்குகளானது அவர்களின் கோரிக் கைகளை கருத்திற் கொள்ளச் செய்யப் போகிறது. ஆனால் இதனை பெரிதாக எதிர்பார்க்கத் தேவையில்லை. எமது இலக்கில் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைக்கிறோம் அவ்வளவு தான்.

...மேலும்

குட்டி ரேவதி தமிழ்நதிக்கு வழங்கிய பேட்டி





சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின்; ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

“உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெளி அறையின் தனிமைதான்”

தமிழ்நதி: இப்போதிருக்கும் இதே வீச்சுடன் பெண்கள் எழுதிக்கொண்டிருந்தால் அடுத்தடுத்த தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

குட்டி ரேவதி:கண்டிப்பாக நம்புகிறேன். இப்போது நாம் எழுதிக்கொண்டிருக்கும் இந்த உடல் அரசியல் என்பதனோடு மட்டும் இந்த வீச்சு தேங்கிப்போய் நின்றுவிடாது. அதற்கான மாற்றத்தை இப்போது உணரமுடிகிறது. முன்னரே நான் குறிப்பிட்டதுபோல முன்பு சிவசங்கரி,வாஸந்தி போன்ற மேட்டிமைசாதியினர்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள். இப்போது பார்த்தால் விளிம்புநிலையில் இருக்கிறவர்களும் அதிகமாக எழுதுகிறார்கள். வேறு வேறு பின்னணிகளில் இருந்து எழுத வருகிறவர்கள் தாம் சார்ந்த பின்னணி சார்ந்த அரசியல் விடயங்களையும் எழுதக்கூடிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இது இப்போதிருப்பதிலிருந்து வேறொரு கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

இன்னுமொரு விடயம் என்னை மிகவும் பாதித்தது. அதாவது, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை. எப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் நான் இந்தப் பிரச்சனையை முன்வைத்துப் பேசப் பின்னின்றதில்லை. அதைப் பற்றி நான் பேச நினைக்கிறபோதெல்லாம் அப்படியொரு விஷயம் இருக்கிறதா என்ன என்று கேட்பார்கள். உதாரணமாக இப்போது நொய்டாவில் நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்த பிறகு ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். நான் இதைக் குறித்து சில களஆய்வுகள் செய்திருக்கிறேன். ஐந்து ஆறு வயதுடைய பெண்குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியபின் கொலை செய்வதென்பது சாதாரணமாக நடந்திருக்கிறது. கருப்பை சீரழிந்த நிலையிலெல்லாம் நான் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய பாலியல் அடையாளத்தைக் கூடப் புரிந்துகொள்ளவியலாத குழந்தையை உபயோகித்துக்கொள்வது பல வீடுகளில் நடந்துகொண்டுதானிருக்கிறது. குழந்தையானது அதை உடல்ரீதியாக அசௌகரியமாக உணருமேயன்றி என்ன நடந்ததென்று சொல்லக்கூடத் தெரியாமலிருக்கும். தவிர, தந்தை போன்ற தமது நெருக்கமானவர்கள் இவ்விதம் நடந்துகொள்ளும்போது அதை மறுத்து ஒன்றும் சொல்ல முடிவதுமில்லை. இதுகூட ஆணாதிக்கத்தினுடைய ஒரு வடிவம்தான். பெண்ணியத்தினுடைய நீட்சி எவ்விதம் அமையவேண்டுமெனில், குழந்தைகள் மீதான இந்தப் பாலியல் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய அளவிற்கு வளரவேண்டும். ஆண் தனது பாலியல் ரீதியான அதிகாரத்தைப் பிரயோகிக்கக்கூடிய ஒரு உயிராகப் பெண் எப்போதும் இருப்பது என்பது விசனத்திற்குரியது.

என்னை ஒரு கூட்டத்திலே ஒரு ஆண் கேட்கிறார்: “இந்தியாவில் எத்தனையோ வகையான பிரச்சனைகள் இருக்கின்றன. அணுவாயுதப் பிரச்சனை இருக்கிறது. பயங்கரவாதம்,முதலாளித்துவம்,ஏகாதிபத்தியம் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் விடவா பெண்ணியம் உங்களுக்குப் பெரிதாகப் போய்விட்டது…?”என்று. அதற்கு நான் சொன்னேன் “நீங்கள் சொன்னவையெல்லாம் பிரச்சனைகள்தான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால், பெண்ணியம் என்பது பிரச்சனை கிடையாது. அதுவொரு கோட்பாடு,பயிற்சி முறை. ஆணும் பெண்ணும் இணக்கமாக வாழ்வதற்கான ஒரு பாதையை உருவாக்குவது. அது எப்படிப் பிரச்சனையாகும்…?”என்று கேட்டேன். முதலாளித்துவத்தைச் செயற்படுத்துவதில் பெண் எங்கு வருகிறாள் என்பது எனக்குப் புரியவேயில்லை. அதற்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம்…? எங்கோ ஓரிடத்தில் ஒரு மேசையைச் சுற்றியமர்ந்து நான்கு ஆண்கள் திட்டமிடுவதில் நமக்கென்ன பங்கு..?

இன்னொரு விடயம், நான் இந்தியாவிற்கான பெண்ணியம் என்று சொல்வது வந்து தலித் பெண்ணியம். தலித் பெண்ணியம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான பெண்ணியம் என்று பொருளல்ல. ‘சாதீயமற்ற பெண்ணியம்’என்பதைத்தான் சொல்ல வருகிறேன். எல்லா மட்டங்களிலும் சாதியினால் அறையப்பட்டிருக்கும் பெண்களை விடுதலை செய்வதுதான் ‘தலித் பெண்ணியம்’என்பதன் பொருள். இந்தியாவில் பெண்ணியம் என்று உருவானால் அது எல்லா அடுக்குகளிலும் இருக்கும் பெண்களை விடுவிப்பதாக அமையவேண்டும். ஒரு பெண் விடுதலை அடையும்போது பிரமையிலே கட்டுண்டிருக்கும் ஒரு ஆணும் விடுதலை அடைவதாகவே நான் கருதுகிறேன்.

“நீங்கள் தலித் பெண்களுக்காகப் பரிந்து பேசுகிறீர்கள். மேல்சாதிப் பெண்களுக்கு ஒடுக்குமுறை கிடையாதா….?” என்று மேல்சாதியைச் சார்ந்த பெண் படைப்பாளிகள் ஒருதடவை பாமா என்ற எழுத்தாளரைக் கேட்டபோது அவர் சொல்லுகிறார்: “மேல்சாதிப் பெண்களுக்கு ஒரு பக்கத்திலிருந்து அதாவது மேல்சாதி ஆண்களிடமிருந்து மட்டும்தான் ஒடுக்குமுறை வருகிறது. ஆனால், தலித் பெண்கள் மீது மூன்று விதமான ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. ஒன்று, மேல்சாதி ஆண்கள் கீழ்சாதிப் பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை. இரண்டாவது,மேல்சாதி பெண்கள் கீழ்சாதிப் பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை. மூன்றாவது, கீழ்ச்சாதி ஆண்கள் தங்களது பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை.”இந்த அடிநிலை ஒடுக்குமுறையிலிருந்து முதலில் விடுபட்டால்தான் எல்லா அடுக்குகளிலிருக்கும் பெண்களுக்கும் விடுதலை என்பது சாத்தியமாகும் என்பது எனது கருத்தாகும். அதற்கு சாதியம் என்ற தளையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். ஒரு பிரச்சனையைப் பார்க்கும்போது, முதலில் சாதிய ரீதியான பிரச்சனையாகவும் அதற்குப் பிறகு பாலியல் ரீதியான பிரச்சனையாகவும் அதனையடுத்து வர்க்கரீதியான பிரச்சனையாகவும் அதை அணுகுவதே சிறப்பு. ஆனால், எல்லாம் தலைகீழாகப் பார்க்கப்படுவதனால்தான் இங்கே தமிழ்நாட்டிலே எந்தவொரு முழுமையான மாற்றமும் நடக்கமாட்டேனென்கிறது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் அதற்கெல்லாம் தாங்கள்தான் காரணமென திராவிட இயக்கங்கள் பேசிக்கொள்கின்றன. பெரியார் கூட கடவுள் வழிபாட்டை மறுப்பதனூடாகத்தான் பகுத்தறிவைப் பார்த்திருக்கிறார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடயங்களை முன்வைக்கவில்லை என்று இன்று தலித் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்.

தமிழ்நதி:பெண்கள் குறித்த விழிப்புணர்வை அவர் பரப்பவில்லையா…?

குட்டி ரேவதி:ஆமாம் சொன்னார்… ‘பெண்கள் தங்களுடைய கருப்பையை அறுத்தெறிந்து விட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்’என்று சொன்னார். ஆனால், என்ன மாற்றம் வந்தது…? குஷ்புவை விளக்குமாற்றைக் காட்டி விரட்டினார்கள். திராவிட இயக்கங்கள் மேடையில் பேசும்போதெல்லாம் நன்றாகத்தான் பேசுவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் - ஒரு தனிப்பட்ட பெண்ணின் மனத்தில் மாறுதல் வந்துவிடக்கூடாதென்பதில் அவர்களும் கவனமாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், தாங்களெல்லாம் நல்லதொரு வாழ்க்கை வாழ்வதாகத்தான் அவர்களுடைய மனைவிமாரெல்லாம் நம்பிக்கொண்டிருப்பார்கள். அந்த நம்பிக்கையைத் தளர்த்தும் எந்தவொரு விடயத்தையும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

தமிழ்நதி:உங்களுடைய ஒரு கவிதைத் தொகுப்பிற்கு ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’எனத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ‘பூனையைப் போல் அலையும் வெளிச்சம்’தொகுப்பிலும் நான் வாசித்தவரையில் ‘தனிமை’, ‘உள் தனிமை’ என்ற இரண்டு கவிதைகள் இருக்கக் கண்டேன். பெண்களின் தனிமை என்பது உங்களை மிகவும் உறுத்துவதாக அமைந்திருந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

குட்டி ரேவதி:நீங்கள் ஒருவர்தான் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். எனக்கு என்றில்லை, நீங்களே கூட கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னீர்கள்… ‘நான் மிகவும் தனிமையில இருந்தேன்’ என்று. பொதுவாக ஆண்களால் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரே வெளி தனிமைதான். வீட்டின் ஏதாவது அறைகளிலொன்றில் குறிப்பாக சமையலறையில் பெண்களாகிய நாம் இருப்போம். அதுதான் வழமை. எல்லாப் பெண்களும் அளவில்லாத ஒரு தனிமையில் இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. இது என்னுடைய ஒரு கண்டுபிடிப்பு என்றுகூடச் சொல்லலாம். ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’என்பது என்னுடைய ஒற்றைக்குரல் அல்ல. நான் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருக்கும் பெண்களுடைய வெளி தனிமையால் மூழ்கடிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட எல்லைகளைக் கடந்து போய்விடக்கூடாதென்பதற்காக ஆண்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்தச் சமையலறை என்ற வெளி. ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’என்று அம்பைகூட ஒரு தொகுப்பு வெளியிட்டிருந்தார்கள். ஆணாதிக்கக் கட்டமைப்பின் இறுக்கத்தினால் உங்களுக்குக் கிடைக்கிற ஒரு தனிமை. ‘உடலே இல்லாத வெளியில் நாங்கள் மிதந்துகொண்டிருந்தோம்’என்று அம்பை ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அதாவது, உடலை விரிப்பதற்கான ஒரு வெளிகூட உங்களுக்குக் கிடையாது.எத்தனை பெண்கள் தங்களுடைய உடலைத் தாங்களே பார்த்திருப்பார்கள்…? மார்பகப் புற்றுநோயிலிருந்து தப்புவதற்கு அல்லது அதன் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதற்கு பெண்கள் தங்கள் மார்பகங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால்,அவ்வாறு செய்வதுகூட ஒரு தகாத செயல் என்பதான எண்ணம் எப்படியோ எங்கள் மனங்களிலே படிந்திருக்கிறது. எங்களை நாங்கள் பார்க்கக் கூச்சப்படுகிறோம் என்று சில மாணவிகள் என்னோடு பேசியபோது சொன்னார்கள். ஏனென்றால், நம்முடைய உடலில் நமக்கு உரிமையில்லை… அது வேறொருவருக்கு உடமையானது என்ற எண்ணம் விதைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் நாளின் இருபத்துநான்கு மணித்தியாலமும் நாம் உடலைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும் - அதாவது, இந்த உடலை வேற்று ஆட்கள் யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று என்று பொத்திப் பொத்தி வைத்துக்கொண்டிருக்க வேண்டும். பாலியல் விகற்பத்திற்கு ஆட்பட்டுவிடாமல் உடலைப் பாதுகாத்துக்கொள் என்று அடித்துச் சொல்லப்படுகிறது.இதெல்லாம் இயல்பாகவே ஒரு தனிமைக்கு இட்டுச்செல்கிறது. உங்களைச் சுற்றி எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெளி அறையின் தனிமைதான். அந்தத் தனிமையைக் கட்டியமைப்பதற்கான விடயங்கள்தான் குடும்பம்,சாதி,மதம் போன்றவை. இவற்றினடிப்படையில்தான் நான் தனிமையை முக்கியமான பேசுபொருளாகப் பார்க்கிறேன்.

தமிழ்நதி:உங்களுடைய அடுத்த கவிதைத் தொகுப்பைப் பற்றிச் சொல்லுங்களேன்.

குட்டி ரேவதி: ‘உடலின் கதவு’என்பது அதன் தலைப்பு. அந்தப் பெயரைப் பார்த்ததும் உறுப்பைச் சார்ந்தது அப்படியென்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், அது ஒரு சொல்லாக, ஒரு முத்தமாக, ஒரு அனுபவமாக, நல்ல கலந்துரையாடலாக இருக்கலாம். அது உங்கள் உடலைத் திறந்துகொடுக்கலாம். அந்தத் தலைப்பிலே உண்மையில் ஒரு கவிதைகூட இருக்காது. அந்தத் தலைப்பின் சாயலை பல கவிதைகள் கொண்டிருக்கும். இப்போது நான் செய்துகொண்டிருக்கும் வேலைக்கு, பயணத்துக்கு அந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்குமென்று தோன்றியது. துயரமான ஒரு தருணத்தில் வருகிற தோழியின் தொலைபேசி அழைப்பும் விசாரிப்பும் ஒரு கண்ணீர்த்துளியாக கன்னத்தில் உருள்கிறபோது அந்த ஒரு விசாரிப்பு உடலின் கதவாக அமைகிறது அல்லவா? அந்த முக்கியமான தருணங்களின் நெகிழ்வைக் கருதித்தான் அந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன்.

தமிழ்நதி:பொதுவாக உங்களுடைய கவிதைகளிலே ஒரு காட்சிப்படுத்தலைக் காணமுடிகிறது. கவிதை மொழியில் இது எப்படிச் சாத்தியமாகிறது?

குட்டி ரேவதி:உண்மையில் ‘காட்சிப்படுத்தல்’என்ற இந்தப் படிமத்தைத் தமிழில் தொடக்கிவைத்தவர் பிரமிள்தான். படிமம் என்றால் ஒன்றின்மீது ஒன்று படிந்து வார்த்தையை அர்த்தப்படுத்துவது என்று பொருள். கவிஞன் வார்த்தை அடுக்குகளை மூடி மூடி ஒரு காட்சியிலிருந்து அல்லது ஒரு படைப்பிலிருந்து வெளியே வருகிறான். கவிஞனால் மூடப்பட்ட அடுக்குகளைக் கலைத்துக் கலைத்துப் போட்டு அந்தக் காட்சியைக் கண்டுபிடிப்பவனாக வாசகன் இருக்கிறான். நவீன கவிதையில் காட்சியைப் பிரதானப்படுத்தி அதற்கான சொல்வீச்சைத் தேர்ந்தெடுக்கும்போது பொருளற்ற சொற்களையல்லாமல் கூர்மையான சொற்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். இல்லையென்றால் படிமத்தின் நோக்கம் அடிபட்டுப்போகிறது. இந்தக் காட்சிப்படுத்தலுக்கு தமிழில் நீண்ட மரபு இருக்கிறது. தமிழர்கள் மிகுந்த அழகியல்வாதிகளாக இருந்திருக்கிறார்கள். திராவிட இயக்கங்கள் வந்த பிறகு இந்த அழகியல் என்பது அற்றுப்போய்விட்டது என்று சொல்லலாம். அழகியல் என்பது ஆழத்திலிருந்து மலர்வது, அதை ஒரு ஒப்பனை என்பதாகப் பார்க்கப் பழகியிருக்கிறார்கள். நீங்கள் தீவிரமாக ஒரு விடயத்தில் ஈடுபடும்போது அதன் இறுதி விளைவாகக் கிடைப்பதுதான் அழகியல் என்றும் சொல்லலாம். படிமம், காட்சிப்படுத்தல், அதற்கான சொல் தேடுதல் என்பதன் வழியாக அழகியலைச் சாத்தியப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ்நதி:உங்கள் மனதில் இருக்கிற கவிதையை உங்களால் வார்த்தைகளில் முழுமையாக வெளிக்கொணர முடிகிறதா?

குட்டி ரேவதி: அது மிகவும் கடினம். எல்லா இலக்கியவாதிகளும் சொல்வார்கள் நாங்கள் நினைத்த கவிதையை எழுதவேயில்லை என்று. அது அப்படியே அழிந்துபோய்விடுவதுமில்லை. அதனுடைய சாரம் காத்திருந்து வேறொரு கவிதையில் வேறொரு வடிவத்தில் வெளிப்படும். அதற்கு நாங்கள் கவிதையின் பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் ஆழத்திலிருக்கும் அந்தக் கவிதையின் கவித்துவத்தை நாங்கள் வெளியில் கொண்டுவர முடியும்.சில கவிதை வரிகள் சட்டென்று வந்து விழுந்துவிடும். சில நேரங்களில் திருத்தங்கள் செய்யவேண்டியேற்படும். நிறைய திருத்தங்களை வேண்டி நிற்கும் கவிதையை நான் விட்டுவிடுவேன். கவிதையை எழுதுபவர்தான் முதல் விமர்சகராக இருக்க முடியும். தமிழில் சுய விமர்சன மரபு என்ற ஒன்று இல்லாமற் போனதுதான் பொதுவாக எல்லா இலக்கியங்களுமே நலிந்து போவதற்கான காரணமாக இருந்திருக்கிறது.

நிறைவு

மழையின் இரவுகளில் புத்தகங்கள் திறக்கப்படுகின்றன

மழையின் இரவுகளில்தாம் புத்தகங்கள் திறக்கப்படுகின்றன
பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த நாவல்களிலுள்ள
கதைமாந்தர்களான முதிய கிழவனும் அகதிப் பெண்ணும்
ஆட்டுக்குட்டியும் போலீஸ்காரனும்
தங்கள் கதைகளிலிருந்து வெளியேறி
நகரை உலா வருகின்றனர்
வாசகர்களோ சாலை நடைபாதைகளின் தாழ்வாரங்களில்
ஒதுங்கி நிற்கின்றனர் மழையின் கூச்சல் ஓயட்டுமென
அந்த அகதிப்பெண் தனது உடலின் ரசம்
புத்தகச்சுவரெல்லாம் வழியக் கீறி வெளியேறி
மழை பெருகிய வழிகளை நீந்திக் கடக்கிறாள்
காமத்தின் சாரல் முகத்தைக் கிழிக்கத்
தனியே கதைகளுக்குள் உறங்கும் கன்னிப்பெண்களும் ஏராளம்
மழைக்கு ஒதுங்கிய புறாவும்
இப்படித்தான் படைப்பாளியின் கதைக்குள் நுழைந்தது
புத்தகங்கள் நனையாமலிருக்க ஜன்னல் கதவுகளை மூடும்
அத்தோல் நரைத்த கைகள்
தனது அடுத்த புனைவை நெய்யத் துடிக்கின்றன

‘முலைகள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.

தமிழ்நதியின் பக்கங்களில் இருந்து 
...மேலும்

தடைகளை வென்ற போராளி - டேனிஸ் வின்சென்ட் புருட்டஸ்

தமிழில்: ஆனந்த செல்வி

பிறப்புக்கு காரணம் இருவேறு பாலினரின் சங்கமம் மட்டுமே என்று சொல்லி நிறுத்திக் கொள்ளலாம் ஆனால் ஒரு கவிஞனின் பிறப்புக்கு சுற்றுச் சூழலும் சமூக அமைப்பும் மிகப் பெரிய காரணமாக அமைவதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதிலும் வாழ்க்கையை போராட்டமாக்கிக் கொண்டு வாழும் கவிஞர்களின் பிறப்பு நீண்ட இடைவெளிகளில் மட்டுமே சாத்தியம்.

கவிதைகளின் பிறப்பு நிகழ்வது ஒரு சாதாரண களத்தில்தான். கவிதைகளை உணர்ந்தவர்கள், கவிதைகளை பெற்றெடுக்கிறார்கள். எழுதுகோல் பிடிக்காத, எழுத்தின் வளைவுகளைத் தெரியாத எத்தனையோ மகாக் கவிஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கவிதை போல் வாழ்க்கைக்கு தவமிருப்போர் மத்தியில் கவிதையாகவே, கவிதைக்காகவே வாழ்ந்தவர்களும் உண்டு. கவிதை என்பது ஒரு விண்மீனை செதுக்கி விண்ணில் செலுத்துவது போன்றதாகும். ஆனால் இதனை வியர்வையை வழித்து வீசும் ஒரு சிறு பொழுதில் செய்துவிடும் வித்தக கவிஞர்களின் வீர்யத்தை என்னவென்று வியப்பது.

கண்ணைக் கட்டி காட்டில் விட்டால் கூட ஒருவர் வலமாக இடமாக கால்போன திசையில் மனக்கண்ணால் போய் விடலாம். ஆனால் இருகைகளின் கட்டை விரல்களை வெட்டி விட்டால் என்ன செய்ய முடியும்? இவ்வாறு அரசின் அடக்குமுறையால் ஊனப் படுத்தப்பட்ட நிலையிலும் தடைகள் என்னும் கனங்களால் அமுக்கி வைக்கப்பட்ட நிலையிலும் முழங்கிக் கொண்டிருந்த கவிஞன் தான் டேனிஸ் வின்சென்ட் புருட்டஸ்.

டேனிஸ் வின்சென்ட் புருட்டஸ் நவம்பர் மாதம் 28ம் தேதி 1924ம் ஆண்டு தற்போது ஹராரே என்று அழைக்கப்படும் பகுதியில் பிறந்தார். புருட்டஸ் தென் ஆப்ரிக்காவில் தனது கல்வி பயணத்தை துவங்கி போர்ட் ஹாரே பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டத்தை பெற்றார். இவர் பள்ளிகளில் ஆப்ரிக்கன் மற்றும் ஆங்கில மொழியைப் பயிற்றுவித்தார்.

புருட்டஸ் தீவிர போராளியாக விளங்கினார். 195060களில் இவர் சவுத் ஆப்ரிக்கா நான்ரேசியல் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்தார். இவருடைய வெளிப்படையான பேச்சு மற்றும் இன விடுதலைக்கான குரலின் காரணமாக சர்வதேசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து தென் ஆப்ரிக்கா விலக்கப்பட்டது. இவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வது தடை செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டார்.

ஜாமீன் பெற்று தப்பிக்க முனைகையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். மீண்டுமொரு முறை தப்பிக்க முனைகையில் இவர் பின்புறமாக சுடப்பட்டு பிடிக்கப்பட்டார். புருட்டஸ் சுமார் பதினெட்டு மாதங்கள் கடுமையான வேலைகளுடனாக தண்டனையை ரோபன் தீவு சிறையில் அனுபவித்தார். இந்தக் காலக்கட்டத்தில் நெல்சன் மண்டேலா, வால்டர் சிஸ்லு மற்றும் கோவன் எம்பெக்கி ஆகியோரும் இவருடன் சிறையிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் கடுமையான வேலையாலும் அவ்வப்போதான உடல் சித்திரவதைகளாலும் சிதைந்து வெளிவந்த புருட்டஸை பள்ளியில் கற்பிக்க, எழுத, படைப்புகளை வெளியிட, அரசியல் மற்றும் சமூக பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள மற்றும் விட்வாட்டர் ஸ்டிராண்ட் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த சட்டப்படிப்பையும் தொடர என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டார்.

புருட்டஸ் 1966ல் தென் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறினார். இங்கிலாந்தில் சிறிது காலம் இருந்து விட்டு அமெரிக்கா சென்றார், அங்கு டென்வெர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். 1971ல் ஆப்ரிக்க இலக்கியப் பேராசிரியராக வடமேற்கு பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். தற்போது அவர் பிட்ஸ்பர்க் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக் கழகங்களில் சிறப்பு பேராசிரியராக இருக்கிறார்.

எத்தனை தான் அடக்குமுறைகளும் தடைகளும் வந்த போதிலும் அவர் தனது குரலை தாழ்த்திக் கொண்டதில்லை. தனது கவிதைகளுடன், கவிதைகள் தாமாகவே தேர்ந்து கொண்ட வார்த்தைகளுடன் சமரசம் செய்து கொண்டதே இல்லை. இவரது கவிதைகளில் கெஞ்சல்களும், புலம்பல்களும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

மரபுக் கவிதை நடையும் நவீனக் கவிதைகளின் உத்திகளையும் இவர் கடை பிடித்திருப்பது கவிதைகளை வாசிக்கையில் தெரிகிறது. வடிவங்களையும் படிமங்களையும் வலியத் திணிக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டதேயில்லை. கவிதைகளைக் கூட பிதுக்கி எடுத்ததில்லை. நெருப்பிலிட்ட உலோகம் பழுத்து சிவப்பதைப் போல் பிரச்சனைகளில் உழன்ற இவருக்கு கவிதை என்பது ஊற்றுக் கசிவுதான்.

1962ல் இவர் சிறையிலிருக்கையில் முதல் கவிதைத் தொகுதி வெளியானது. இந்தப் புத்தகத்திற்கு எம்பெரி கவிதை பரிசு அறிவிக்கப்பட்டத. ஆனால் கருப்பர்களின் கவிதை என்ற பாராபட்சத்துடன் இப்பரிசு அறிவிக்கப்பட்டதை அறிந்ததும் பரிசை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இவரது கவிதைகள் எதார்த்தங்களையும், மக்கள் சார் பிரச்சனைகளையும் வெளிப்படுத்தின. கவிதைத் தொகுதிகள் உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

இவரது கவிதைகள் தென் ஆப்ரிக்காவில் தடை விதிக்கப்ட்டிருந்த காரணத்தால் அனைத்து சிறப்பு தகுதிகள் இருந்த போதிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரி பாடங்களில் வைக்கப்படவில்லை. 1990களில் இவர்மீதான தடைகள் தளர்க்கப்பட்ட நிலையில் தென் ஆப்ரிக்கா வந்தார். பலரும் அறியாத, கொண்டாடப்படாத ஒரு பெரும் கவிஞர் மிகச் சாதரணமாக தன் தாய்நாடு திரும்பினார். அங்கீகாரம் பெறவில்லை என்றாலும் தென் ஆப்ரிக்காவின் பெருங்கவிகளில் டேனிஸ் புருட்டஸ் முக்கிய இடம் வகிக்கிறார்.

தற்போது இவர் ஆப்ரிக்க இலக்கியம், ஆப்ரிக்க அரசியல், உலக அமைப்புகளில் ஆப்ரிக்காவுக்கான இடம், கவிதை மற்றும் எழுத்து என அனைத்தையும் உலக அரங்கில் வெளிச்சமிட்டு காட்டும் பணியில் தீவிரமாய் உள்ளார். உலக அரங்கில் தன் இன மக்களுக்கான அங்கீகாரம் பெற தீவிரமாக போராடி வருகிறார்.

நான் பேசியாக வேண்டும்

நான் பேசியாக வேண்டும்
(இதுவே என் ஆசை)
உங்கள் காது அறைகளில்
உங்கள் அமைதி கணங்களில்
உங்கள் இதயம் பதிலளிக்க
வார்த்தை தேடுகையில்
உங்கள் மனக்குகைகளில்
தடையின்றி எதிரொலிக்க வேண்டும்

நான் பேசியாக வேண்டும்
பெருஞ் சத்தத்துடன்
(இதுவே என் ஆசை)
உங்கள் காது அறைகளில்
உங்கள் அமைதி கணங்களில்
வார்த்தைகள் எதிரொலிக்க வேண்டும்

அல்லது உங்கள் இதயம் பதிலளிக்க
உதிரத்தில் உண்மைகள் விவாதிக்க
நம்பிக்கையோ நடவடிக்கையோ
வார்த்தைகள் வேண்டும்
அதனால்
உங்கள் மனக்குகைகளில்
தடையில்லாமல்
எதிரொலிக்கட்டும்
என் ஒலிகள்

புலம் பெயர்ந்தவன்

நாடுகடத்தப்பட்டவன்
தேசாந்திரி
நாடோடிப் பாடகன்
(எப்படியும் அழைக்கட்டும்)

மென்மையானவன் நான்
அமைதியானவன் நான்
மென்நடை பொடுபவன்
திட்டங்களில் லயித்து
இழிவுகளை இன்புற்றேற்பவன்

இதய அறைகளையும்
மூளையும் நிறைக்கும் நம்பிக்கை
ஆனால்
அமைதியான கண்களுக்குப் பின்
ஓங்கி ஒலிக்கும்
கூக்குரல்களும் சைரன்களும்

சிறப்பு சிறை

அங்கொரு நிழல் இருந்தது
மங்கி இருண்ட சிறையில்
கூடுதலாய் ஒரு நிழல்
அந்த நிழல்கள், எப்படியோ
எங்கும் கலையாது
என்னையே வட்டமிட்டன
அந்த கிழட்டு மனிதனின்
பரபரப்பான உடலை மீறி
குளிர்பார்வை பார்த்தது
எப்பொழுதும் விடா முயற்சியை
பெரு நம்பிக்கையை, உழைப்பை
வலியுறுத்தியபடி

நன்றி: அணி
...மேலும்

மூன்று நாட்களில் 9 இலங்கைப் பணிப்பெண்கள் மரணம் - சுதா


பெப்ரவரி முதல்வாரத்தின் முதல் மூன்று நாட்களில் 9 இலங்கைப் பணிப்பெண்கள் மத்தியகிழக்கில் இறந்துள்ளனர் என இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இவர்கள் வெவ்வேறு விபத்துகளில் கொல்லப்பட்டுள்ளனர்.


2009 ஆம் ஆண்டில் மாத்திரம் 330 இலங்கைப் பெண்கள் இலங்கைக்கு சடலங்களாக திரும்பியமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களில் பெரும்பாலானோர் சித்திரவதைகளாலும், தற்கொலைகளாலும், விபத்துக்களாலும் இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒரு லட்சம் பணிப்பெண்கள் வருடாந்தம் மத்திய கிழக்குக்கு மாத்திரம் செல்கின்றனர். குவைத், சவுதி அரேபியா, கட்டார், டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 800,000 (எட்டு லட்சம்) பணிப்பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.இதை விட இத்தாலி, சைப்பிரஸ் இன்னும் சில ஆசிய நாடுகள் உட்பட பார்த்தால் சுமாராக ஒரு மில்லியன் இலங்கைப் பெண்கள், பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர். இது இலங்கையின் சனத்தொகையில் 5 வீதமாகும். மொத்த இலங்கைப் பெண்களின் சனத்தொகையில் 10 வீதமாகும். மத்திய கிழக்கில் பணிபுரியும் ஆண்களின் எண்ணிக்கை சராசரியாக 50,000 மட்டுமே என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தேசிய வருவாயில் வெளிநாட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களின் வருவாய் முக்கியமான பங்கு வகிக்கிறது. திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக 1977இற்குப் பின் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் எனும் தொழிற்பிரிவினர் உருவானார்கள். வருடாந்தம் ஏறத்தாழ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வருவாயை ஏற்படுத்துகின்றனர் மத்திய கிழக்குக்குச் செல்லும் பணிப்பெண்கள்.

இந்தப் பணிப்பெண்களின் பாதுகாப்பு, மற்றும் காப்புறுதி, ஒப்பந்த மீறல்கள் என்பன குறித்து இலங்கை அரசாங்கம் சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு இலங்கை பெண்கள் இயக்கங்களால் தொடர்ச்சியாக சுமத்தப்பட்டு வருகிறது.

அவ்வாறு இலங்கை தகுந்த நடவடிக்கைகளில் ஈடுபடும்பட்சத்தில் மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு சந்தையை இலங்கை இழந்துவிடும் என்கிற அச்சமே இதற்கு காரணமாக கருதப்படுகிறது. பெண்களுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் இன்னல்கள் குறைவதற்குப் பதிலாக நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பல பெண் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இவை தொடர்பான மேலதிக கட்டுரைகள்


...மேலும்

இல்லாததை விரும்பும் கனவு- தில்லை


உடலுடன் தொங்கும் உணர்வுகளின் பெருவலி
அரவணைக்க விருப்பமின்றி
தனித்த வார்த்தைகளால் மோதவிடுகிறேன்


வெற்றிகளை அலங்கரித்த போராளிகள்
துடைத்தெறிய முடியாத மரணங்கள்
கசிந்துருகும் கண்ணீர் என
எழுந்தெழுந்து விழும் கடந்த காலம்


போர் நேற்றுவரை பெருமைகொள்ளப்பட்டது
சந்தோசமாகத்தானிருந்தது
ஆளாளுக்கு ஆயிரமாயிரம் கோரிக்கைகள்
எல்லாக் கோரிக்கைகளும்
தனித்த வார்த்தைகளாய்


மீண்டும் தேர்தல்…..
பெருமை கொள்வதற்கு என்ன இருக்கிறது?
நேற்றுவரை திகிலூட்டிய
அதே மனிதர்கள்.....

24012010
...மேலும்

நளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்

கடந்த வாரம் பொள்ளாச்சி சென்றிருந்தேன். சுழி மாற்று இலக்கிய களத்தின் 18-ம் அமர்வு சுழி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய அமர்விற்கான பேச்சாளர் நளினி ஜமீலா. நளினியிடம் தனியே உரையாடிக் கொண்டிருக்கும் போது என்னால் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான நளினியின் பதில்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

உங்கள் பெயர் உண்மையானதா இல்லை புனைப் பெயரா ?

(புன்னகைத்தவாறே என்னுடன் கலந்துரையாட உங்களைப் போன்ற இளைஞர்கள் வருவது சந்தோஷத்திற்குரியது என்றார்).

இது என்னுடைய உண்மையான பெயர்தான். நான் இந்துவாக இருந்து பின்பு முஸ்லீம் மதத்திற்கு மாறியவள். எழுத வேண்டும் என ஆர்வம் வந்ததும், புனைப் பெயர் வைக்கவேண்டும் என நண்பர்கள் கூறினர். வேறு பெயர்கள் வைத்து என்னை மறைத்துக்கொள்ள விரும்பாததால், என்னுடைய இரண்டு பெயர்களையும் இணைத்து, நளினி ஜமீலா என வைத்துக்கொண்டேன்.

முதல்முறை பாலியல் தொழிலுக்குச் செல்லும்போது உங்கள் மனநிலை?

நான் முதன்முதலில் பாலியல் தொழிலுக்குச் சென்றது என்னுடைய 23வது வயதில். அப்போது ஆண்கள் பாலியல் தேவைகளைத் தீர்ப்பதற்குக் காசு தருவார்கள் என எனக்கு தெரியாது. என் தோழி மூலம் அறிந்துகொண்ட பின், அதிர்ச்சி மற்றும் அந்த Thrill எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நான் அப்போது ஒரு கிராமத்துப் பெண். கிராமத்துப் பெண்ணுக்கே உள்ள மனநிலையில்தான் என் முதல் வாடிக்கையாளரை அணுகினேன்.

முதல் முறையாக எந்த இடத்தில் உங்கள் வாடிக்கையாளரை சந்தித்தீர்கள்?

திருச்சூர் முனிசிபாலிட்டி ஆபீஸ்க்கு எதிரில் தான் என்னுடைய 23வது வயதில் முதல்முறை பாலியல் தொழிலாளியாக, என் முதல் வாடிக்கையாளரைப் பெற்றது.

முதல்முறை ஒரு ஆணின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ததும் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

மனநிலைகளைப் பற்றி சிந்திக்கும் அளவு, அடுத்த நாள் காலை அத்தனை சுவாரஸ்யமாக இருக்கவில்லை. இரவு முழுதும் நானும் என் முதல் வாடிக்கையாளரும் சரி சமமாக உட்கார்ந்து மது அருந்தினோம். அவர் எனக்கு நீண்ட கதைகள் சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரால் அதற்கு மேல் மது அருந்த முடியவில்லை. ஆனால் நான் நீண்ட நேரம் மது அருந்திவிட்டுதான் கலவிக்குத் தயாரானேன். கலவிக்கு பின்பு கூட அவரும் நானும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதும் எனக்கு நிறைய கதைகள் சொல்லிக்கொண்டே இருந்தார். அதிகாலை ஒரு 4.30 அல்லது 5 மணி இருக்கும் என நினைக்கிறேன். அதே ஆள் தன்னுடைய சுய முகத்தைக் காட்டினார். என்னைப் போலீஸில் பிடித்துக்கொடுத்தார். அந்த நேரத்தில் அத்தனை கொடுமையாக இருந்தது அவர் முகம். பின்பு தன்னை ஒரு போலீஸ் உயரதிகாரியெனக் காட்டிக்கொண்டார். என்னை பற்றித் தன் சக போலீஸிடம் சொல்லும் போது,“இவ எனக்கு சரி சமமாய் உட்கார்ந்து குடிக்கிறாள், நல்லா அடிங்க இவளை”, என்று சொல்லிவிட்டுச் சென்றார். என்னை மிகுந்த துன்பத்திற்கும் மன அதிர்விற்கும் உண்டாக்கின விஷயம் அது.

முதல் முறை பாலியல் தொழிலாளியாகப் போகும் போது, எந்த இரண்டு விஷயங்கள் உங்களுக்குப் பிரதானமாகப் பட்டது?

பணம், Thrill.

இந்த காலத்தில் இளைஞர்களிடம் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு எப்படி இருக்கிறது? நீங்கள் ஏதும் அறிவுரை சொன்னதுண்டா?

(சிரித்துக்கொண்டே)

பொதுவாக 25 வயதுக்குக் கீழிருக்கும் ஆண்களின் பாலியல் தேவைகளை நான் பூர்த்தி செய்வதில்லை. ஆனால் ஒருமுறை அனைத்தும் முடிந்ததும், ஒருவன் தனக்கு என்ன வயது இருக்கும் எனக் கேட்டான். நான் இருபத்தி எட்டு இருக்கும் என யூகத்தில் கூறினேன். அவனுக்கு இருபத்தி மூன்று என பல் இளித்தான். இளைஞர் என்று கேட்டதும் எனக்கு இது நியாபகம் வந்து விட்டது இளைஞர்களிடம் விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் முறையான பாலியல் பற்றிய விழிப்புணர்வும், பெண்மையின் மனநிலை பற்றிய புரிந்துகொள்ளுதலும் இன்னும் அதிகம் தேவை என்றே நினைக்கிறேன்.

உங்களை இந்த சமுகத்தில் எந்த நிலை மனிதராக நினைக்கிறீர்கள்?

இந்த சமூகத்தைத் துப்புறவாக்கும் தொழிலாளியாக. துப்பறவு தொழிலாளி இல்லாத பட்சத்தில் இந்த ஊர் முழுக்க நாறி நாற்றமெடுக்கும் என உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்.

ஆண் பெண் பாலியல் சார்ந்த குணம் எப்படி?

ஆண்: பெண்ணை வெல்ல அல்லது தண்டிக்கப் பாலியல் தான் ஏற்றது என நினைக்கிறான்.

பெண்: தனக்குப்பிடித்த ஆண் தன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கும் போது, அவள் எடுக்கும் கடைசி அஸ்திரம் அவள் உடம்பு.

இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

H.I.V பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

பிச்சைக்காரன் முதல் கோடீஸ்வரன் வரை அவர்களின் பாலியல் தேவையை நாங்கள் பூர்த்திசெய்கிறோம். முறையற்ற பாலியல் அறியாநிலையில் HIV யை பலர் வாங்கிக்கொள்கின்றனர். இது சொந்த தவறு என ஏற்றுக்கொண்டாலும், தன்னை அறியாமல் மற்றவரிடம் இருந்து பெறுதல். இதுதான் கொடுமையின் உச்சம். இவர்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும். HIVயால் பாதிக்கப்பட்டவருக்கு மற்றவர்கள் மானசீகமாய் உதவ வேண்டும். அவர்களுக்குத் தேவையானது அன்பும் அரவணைப்பும்தான். இதனைத் தவிர்க்க பாதுகாப்பான உடலுறவு சிறந்தது.

முறை தவறிய உறவை ஆதறிக்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை.

குடும்பப் பெண்ணை விட ஒரு பாலியல் தொழிலாளிக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது என்பது என் பார்வை. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஆமாம், நானும் இதை ஏற்கிறேன். முன்பு முச்சந்தியில் நின்று நானும் சாராயம் குடித்திருக்கிறேன். அந்த நேரத்தில் நான்கு ஆண்கள் சாராயம் வாங்கிக்கொண்டு குடிக்க மறைவான இடம் நோக்கி செல்லும் போது ஒரு பெண்ணாகிய நான் ஒரு ஸ்டைலாய் சாரயத்தை கடை முன்னாடியே வாங்கி கடை முன்னாடியே பிரித்து அங்கேயே குடித்ததெல்லாம் நடந்திருக்கிறது. ஆண்களுக்கு சரி சமாமாக நடந்து கொண்டதாய் என்னால் இதை கூற முடியும். ஆனால் சுதந்திரம் என்று இதை மட்டும் குறிப்பிடவில்லை. குடும்பப் பெண்களை விட சுதந்திரமாக இருந்ததற்கு இது ஒரு உதாரணம்.

கேரளாவில் உங்கள் நண்பர்கள், சுற்றத்தாரின் பார்வையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

அவர்கள் ஒரு தவிப்பு நிலையிலேயே என்னை அணுகுகின்றனர். எங்கே அவர்களைப் பற்றியும் நான் எழுதி விடுவேனோ என்று ஒரு பயம் அவர்களிடம் இருப்பதை நான் உணருகிறேன்.

எந்த வித அறிமுகமும் இல்லாத ஆணுடன் முதல் சந்திப்பிலேயே ஒரு கட்டம் தாண்டி, அடுத்த கட்டமான உடல் இனைவு என்பது ஒரு பெண்ணுக்கு மிகக் கடினமான விஷயமாக இருக்கும் போது, இதை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்ட உங்களுக்கு எதைக் கண்டால் பயம், அல்லது தயக்கம்?

எனக்கு ஸ்கூட்டரில் பின்னாடி அமர்ந்து போவது என்றால் பயமோ பயம். எப்படி இவர்கள் வாகனத்தை குறுக்கும் நெடுக்குமாய் ஓட்டுகிறார்கள் என்று நினைக்கும் போது பிரம்பிப்பே மிஞ்சுகிறது. (நான் சிரிப்பதைக் கண்டுகொண்டு நீங்களும் வேகமாக வாகனம் ஓட்டுவீர்களா என கேட்டார்)

அப்புறம் மரம் ஏறுவது என்றாலும் அதே அளவு பயம். ஒருவேளை வயது கொஞ்சம் குறைவாக இருந்தால் இரண்டாவது பயம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

சமீபத்திய மன வேதனை நிகழ்வு?

என் மூத்த மகள் சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறாள். இரண்டாவது மகளின் வாழ்க்கை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. என்னுடைய தொழிலில் வரும் பணத்தை நோக்கியே இந்த அலைகழிப்புகள் என் மகள் வாழ்க்கையில்.

ஒரு பாலியல் தொழிலாளிக்கு உங்கள் அறிவுரை?

பாலியல் தொழிலாளி ஒரு Home Nurse மனநிலையில் இருந்து சேவை செய்ய வேண்டும். தன்னிடம் வரும் ஆணிடம் மானசீகமாய் உங்களின் அன்பையும் ஆதரவையும் புரிய வைக்க வேண்டும். (பாலியல் தேவை பூர்த்தி செய்ய வருபவர்களை Client அல்லது Customer என்று தான் அழைக்கிறார்). பாலியல் தேவை தேடி வரும் Client-க்கு அரவணைப்பு மிக முக்கியமானதும் அவசியமானதும். அவர்கள் பேசி முடியும் வரை பொறுமை காத்திருங்கள், அவர்களுக்கு நிறைய இருக்கிறது நம்மிடம் சொல்ல.

பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய வரும் ஆண், பாலியல் தொழிலாளியின் மனம் கஷ்டப்படும் படி நடந்து கொண்டால் என்ன செய்ய வேண்டும்.?

நமக்கான மரியாதையை கண்டிப்பாக விட்டுத்தரக்கூடாது. பாலியல் தொழிலாளிகளை பெட்டி,தாட்டு, போக்கு என அழைப்பவர்களைக் கண்டால் எனக்கு அளவிற்கு மீறிய கோபம்தான் வரும். ஒன்றுக்கு இருமுறை சொல்ல வேண்டும். சொல்லியும் கேட்கவில்லை என்றால் தட்டி வைக்க வேண்டும்(புன்னகை). கடைசி வரை என்ன தட்டி வைக்க வேண்டும் என நானும் கேட்கவில்லை எப்படி தட்டி வைக்கவேண்டும் என அவர்களும் சொல்லவில்லை.

(தயங்கியபடியே நான் இருக்க, என்னைக் கண்டுகொண்டவராக, ”தயங்காம கேளுங்க”, என்றபிறகு கேட்ட கேள்வி இது)

இப்போதும் இந்தத் தொழிலில் இருக்கிறீர்களா?

இதிலென்ன இவ்வளவு தயக்கம். ஆமாம் இன்னும் இந்தத் தொழிலில் இருக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களிடம் மட்டும்.

தமிழகத்தில் உங்களை ஆதரித்தவர்கள் யார்?

அந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். யார் யார் என்று சொல்லி அதையும் விவாதப்பொருளாக்க நான் விரும்பவில்லை.

உங்களுடைய குறுப்படம் பற்றி?

அது பலரின் பேட்டிகளை ஒருங்கே தொகுக்கப்பட்ட ஒரு குறுப்படம். அவற்றை பற்றி நிறைய பேச வேண்டும். நேரம் இருக்கும் போது பேசலாம்.

வேறு எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

சொல்ல நிறைய இருக்கிறது, நேரமில்லாத காரணத்தால் மீண்டும் ஒரு வணக்கத்துடன் நிறைவு செய்கிறேன்.


நன்றி - அடலேறு
...மேலும்

தமிழகப் பெண்ணிய இயக்கங்கள்- குட்டிரேவதி

தமிழகத்தில் பெண்ணிய இயக்கங்களே இல்லை என்று சொல்வதினும் அவை வேறு வேறு பரிமாணங்களை அடைந்து விட்டன என்று சொல்வது மிகப் பொருந்தும். கட்டிடத் தொழிலாளர்களுக்காக உழைக்கும் பெண்ணியப் போராளி கீதாவைப் போன்றவர்கள் முழுமையும் அவர்களின் உரிமைகளுக்காகவும் பிரச்சனைகளுக்காகவும் உழைப்பவர். அர்ப்பணிப்பு மிக்கவர். அவ்வாறு ஒரு குறிப்பிட்ட இனத்தை அல்லது சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருக்கும் ஒருங்கிணைக்கப்படாத பெண்களுக்காகத் தொடர்ந்து உழைக்கும் போது தான் அவர்களின் உள்ளார்ந்த புரையோடியிருக்கும் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டு அதற்காகப் போராட முடியும்.

இவ்வாறு மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்களையும், சமூகத்தில் அடிப்படை உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர்களையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தனியார் தொண்டு நிறுவனங்கள் தனித்த, காலத்திற்கேற்றவாறான, உலக அளவில் பெரும்பான்மையான மக்களால் விவாதிக்கப்படுகின்ற பெண்ணுரிமைப் பிரச்சனைகளை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்கின்றன. தமிழக அளவில் அவற்றைத் தீர்த்து வைப்பதான திட்டங்களுடனும் நிதி ஒதுக்கீடுகளுடனும் தொடங்குகின்றன. ஆனால் அத்திட்டங்கள் மிகவும் குறுகிய பார்வையுடன் வரையறுக்கப் படுவதாலும், ஒதுக்கிய நிதி முடிந்து போகும்போது திட்டங்கள் முடிவுக்கு வந்து விடுவதாலும் அவர்களின் பெண்ணியச் செயல்பாடுகள் நிறைவை எட்டாத பணிகளாகவே இருக்கின்றன.

இன்று தனிப்பட்ட அளவிலோ பொது வெளியிலோ பாதிக்கப்படும் பெண்களின் பிரச்சனைகளை விவாதிக்க, போராட என்று சமூக இயக்கங்கள் எதுவும் இல்லை. மீனவர் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற ஒட்டுமொத்தமாகத் தமது ஆற்றலை எல்லாம் திரட்டிப் போராடினாலும் அவர்களை ஒடுக்கவும் கட்டுப்படுத்தவும் அல்லது சமரசப்படுத்தவும் அரசியல் இயக்கங்கள் அல்லது கட்சிகள் இருக்கின்றன. இஸ்லாமிய மதப் பெண்களுக்காகப் போராடிவரும் புதுக்கோட்டையிலிருந்து இயங்கிவரும் ஷெரீஃபா தன்னால் இயன்ற வரை அப்பெண்களின் மீதான ஒடுக்குமுறையைத் தளர்த்துகிறார். அவர் மட்டுமே போதாது. அவரைப் போல நிறைய பெண்கள் மத ஒடுக்குமுறைக்கான இயக்கத்தைச் சமைக்க வேண்டியிருக்கிறது.

தாழ்த்தப்பட்ட பெண்களுக்காவே போராடும் இயக்கங்களும் தேவைப்படுகிறது. அவர்களின் உண்மையான சமூக நிலையையும் எந்தெந்த உரிமைகள் அவர்களை இந்தக் கட்டுகளிலிருந்து விடுவிக்கும் என்று அறிந்த பெண்ணிய இயக்கமும் தேவைப்படுகிறது. அன்றாடம் ஊடகங்களில் வெளியாகும் பெண்களைப் பற்றிய தவறான கோணமும் மொழிதலும் உடைய செய்திகளை எதிர்த்துப் போராடவே இயக்கமொன்று தேவைப்படுகிறது.

எல்லா அரசியல் கட்சிகளும் பெண்களை வெறுமனே தம் கொள்கை அதிகாரத்தின் கீழே செயல்படும் மந்தைகளாகவே நடத்துகிறது. ஈழத்தில் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த சமயத்தில் தமிழகத்தில் நடந்த கூட்டங்களும் போராட்டங்களும் பேரணிகளும் ஆணாதிக்கச் சிந்தனையைத் தழுவியதாகத்தானிருந்தன.படுகொலையின்போது பெண்களின் மீது இராணுவத்தாலும் அரசு இயந்திரங்களாலும் நிகழ்த்தப்பட்ட பாலிய வன்முறையின் அரசியல் சூழ்ச்சித்திறனை, இயக்கத்தன்மையை ஒரு பேச்சாக்குவது கூட இங்கு சாத்தியம் இல்லாமல் இருந்தது. இவ்வாறு வேறுவேறு தளங்களில் நின்றும் அந்தந்த தளங்களுக்கான கருத்தியலை நுட்பமாக்கியும் அதைச் செயல்படுத்துவதான இயக்கங்கள் தாம் நமக்கு தேவையாக இருக்கிறது. நிறைய பெண்ணியப் போராளிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் நான் சிவகாமியையும் வ. கீதாவையையும் குறிப்பிட்டதும் அவர்கள் மீதான என் ஈர்ப்பும் பெண்ணியச் சிந்தனைத் தளத்தில் தான். எனக்கு அவர்கள் கருத்தியலுடன் வேறுபாடுகள் இருந்த போதும் அவர்கள் தொடர்ந்து ஊக்கமுடன் இயங்குவதும் உழைப்பதும் பிடித்தமானதாக இருக்கிறது. இயக்கமாய் பணியாற்றிக் கொண்டிருப்பதுடன் இயக்கத்திற்கான கருத்தியல் தத்துவத்தை வகுப்பவராகவும் சிவகாமி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைய சூழலில் பெண்கள் எல்லோரும் ஒரே குடையின் கீழ் வந்து நின்று போராடமுடியாது. அது தேவையுமில்லை. வேறுவேறு மதம், சாதி, வர்க்கம் சார்ந்தவர்களாக இருக்கிறோம். உலகெங்கும் வேறுவேறு நிலங்களில் வசிப்பவர்களாகவும் அங்கங்கு நிலவும் அரசியல் சிந்தனைகளின் தாக்கம் நிறைந்தவராகவும் இருக்கிறோம். வேறுவேறு துறை சார்ந்த அறிவையும் அவற்றிற்கான அறிவுப்பெருக்கத்தில் ஈடுபடுவதிலும் முனைப்பாய் இருக்கிறோம். இந்நிலையில் அந்தந்த வட்டத்திற்கான பெண்ணுரிமைகளைப் பேசுவதில் தொடங்கிப் பின் விரிவான பிரச்சனைகளைப் பேச பொதுக்களத்திற்கு வரலாம்.

இயக்கங்கள் அடிப்படையான சிறிய உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கினால் தான் சமூக அளவில் ஏற்றத் தாழ்வற்ற பெண்ணுரிமைகளைச் சாத்தியமாக்க முடியும். அதாவது தங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் தன்னளவில் வெற்றி பெற்ற பெண்கள் அவர்கள் தமது சமூக மரியாதைகளுடன் மேன்மேலும் முன்னேறிக் கொண்டிருப்பதை வைத்து சமூகத்தில் எல்லா தரப்பு பெண்களும் முன்னேறிவிட்டனர் என்று கூறுவது அபத்தம். வறுமையினாலும் சமூக ஒடுக்கு முறைகளாலும் இன்னும்இன்னும் சமூகத்தின் கீழ்நிலையை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் இருக்கும் வரை அந்த வெற்றி பெற்ற பெண்களின் வெற்றி முழுமையானதென்று அர்த்தமாகாது.

குட்டிரேவதி
...மேலும்

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்

இந்தியா என்றொரு நாடும், ஒரிசா என்றொரு மாநிலமும் தோன்றுவதற்கு பன்னெடுங்காலம் முன்பிருந்தே, தற்போதைய தென் ஒரிசாவிலிருக்கும் அந்த தாழ்ந்த, தட்டையான மலைத்தொடர், டோங்ரியா கோண்டு இன மக்களின் தாயகமாக விளங்கி வருகின்றது. மலைகள் கோண்டு இன மக்களைக் கவனித்துக் கொண்டன. அம்மக்கள் மலைகளைக் கவனித்துக் கொண்டனர். அவற்றை வாழும் தெய்வங்களாய் வழிபட்டனர். இம்மலைகள் அதில் புதைந்திருக்கும் பாக்சைட் கனிம வளத்திற்காக தற்போது விற்கப்பட்டுவிட்டன. கோண்டு மக்களைப் பொறுத்தவரையில், இச்செயல் கடவுளை விற்பதற்குச் சமமானது. கடவுள் ராமனாகவோ, அல்லாவாகவோ அல்லது ஏசு கிருஸ்துவாகவோ இருந்தால் ”அந்தக் கடவுள் என்ன விலைக்குப் போயிருப்பார்? ” என்று கேட்கின்றார்கள் அம்மக்கள்.

ஒருவேளை, அந்த கோண்டு மக்கள் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டுமோ! ஏனென்றால், அவர்களது பிரபஞ்ச நியதியின் கடவுளாகிய நியம் ராஜாவின் உறைவிடமான நியம்கிரி மலை, வேதாந்தா (அறிவின் எல்லையை உபதேசிக்கும் இந்துத் தத்துவயியலின் ஒரு கிளை) என்ற பெயர் தாங்கிய கம்பெனியிடம் அல்லவோ விற்கப்பட்டிருக்கிறது! வேதாந்தா- உலகத்தின் மிகப்பெரும் சுரங்கத் தொழில் நிறுவனங்களில் ஒன்று. லண்டனில், முன்னர் ஈரான் மன்னருக்குச் சொந்தமாயிருந்த மாளிகையில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியக் கோடீஸ்வரரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமானது அந்நிறுவனம். இன்று ஒரிசாவைச் சுற்றி வளைத்து வருகின்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேதாந்தாவும் ஒன்று.

தட்டையான உச்சிகளைக் கொண்ட இம்மலைகள் அழிக்கப்பட்டால், அவற்றைப் போர்த்தியிருக்கும் பசுமையான காடுகளும் சேர்த்து அழிக்கப்படும். அவற்றிலிருந்து ஊற்றெடுத்து வழிந்து, சமவெளிகளை வளப்படுத்தும் சுனைகளும், ஆறுகளும் அழியும். டோங்ரியா கோண்டு இன மக்களும் அழிந்துபடுவார்கள். இதே வகையான தாக்குதலுக்குள்ளாகியிருக்கும், இந்தியாவின் காடுகளடர்ந்த இதயப் பகுதியில், அதனைத் தாயகமாய் கொண்டு வாழும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களும் அழிக்கப்படுவார்கள்.

நெரிசலும், புகைநாற்றமும் மண்டிய நமது நகரங்களில் வாழும் சிலர் இப்படிப் பேசுகிறார்கள், “அதனால் என்ன? முன்னேற்றத்துக்கான விலையை யாராவது கொடுத்துத்தானே ஆகவேண்டும்.” சிலர் இப்படிக்கூடப் பேசுகிறார்கள், “இதையெல்லாம் நாம் சந்திக்கத்தான் வேண்டும். இந்த சனங்களுடைய காலம் முடிந்து விட்டது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என எந்த வளர்ந்த நாட்டை வேண்டுமானாலும் பாருங்கள். எல்லோருக்கும் இப்படி ஒரு ‘கடந்த காலம்’ இருக்கத்தான் செய்கிறது.” என்கிறார்கள். உண்மைதான், அவர்களுக்கெல்லாம் அப்படி ஒரு கடந்த காலம் இருக்கத்தான் செய்கிறது. “அப்படியானால், அத்தகையதொரு கடந்த காலம் ஏன் ‘நமக்கு’ மட்டும் இருக்கக் கூடாது? ” என்பது அவர்களின் கேள்வி.

இத்தகைய சிந்தனைப் போக்கின் அடிப்படையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதுதான் காட்டு வேட்டை (Operation Green Hunt) எனும் போர்; மத்திய இந்தியாவின் காடுகளைத் தமது தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ‘மாவோயிஸ்ட்‘ கிளர்ச்சியாளர்களுக்கு எதிரானது என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் போர். மாவோயிஸ்டுகள் மட்டும்தான் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களா என்ன? நிலமற்றவர்கள், தலித் மக்கள், வீடற்றவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள், நெசவாளர்கள் என நாடு முழுவதும் ஒரு பெரும் போராட்டக் களமே விரிந்து கிடக்கிறது.

மக்களுடைய நிலங்களையும், இயற்கை வளங்களையும் மொத்தமாக முதலாளிகள் வாரிச் சுருட்டிக் கொள்வதற்கு வழிவகை செய்யும் கொள்கைகள் உள்ளிட்ட எல்லா அநீதிகளின் உருத்திரண்ட வடிவமாக, தங்களை நசுக்குவதற்கு உருண்டு வந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டமான அநீதித் தேரின் சக்கரங்களைத் தடுத்து நிறுத்த அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், மிகப்பெரிய அபாயமென்று மாவோயிஸ்டுகளை மட்டுமே குறி வைத்திருக்கிறது அரசாங்கம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நிலைமைகள் இன்றைய அளவுக்கு மோசமானதாக இல்லாதிருந்த ஒரு சூழலில், ‘தனிப்பெரும் உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்‘ என்று மாவோயிஸ்டுகளைப் பற்றிக் குறிப்பிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். அவர் பேசியவற்றிலேயே இந்தக் கருத்துதான் மிகப் பிரபலமானதாகவும், மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதாகவும் இருக்கக்கூடும். ஜனவரி 6, 2009 அன்று நடைபெற்ற மாநில முதல்வர்கள் சந்திப்பின்போது, மாவோயிஸ்டுகள் ஒன்றும் அத்தனை பலம் பொருந்தியவர்களல்ல என்று அவர் தெரிவித்த கருத்துக்கு, முந்தைய கூற்றிக்குக் கிடைத்த அளவிலான முரட்டுக் கவர்ச்சி என்ன காரணத்தினாலோ கிடைக்கவில்லை. ஜூன் 18, 2009 அன்று நாடாளுமன்றத்தில் பேசியபோது, அவர் தனது அரசின் உண்மையான கவலையை வெளியிட்டார்; “இயற்கை தாதுவளம் மிக்க பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமேயானால், நிச்சயமாக முதலீடுகளுக்கான சூழ்நிலை அதனால் பாதிக்கப்படும்”.

மாவோயிஸ்டுகள் என்பவர்கள் யார்? அவர்கள் தடைசெய்யப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்டு) இன் உறுப்பினர்கள்; 1967-இல் நக்சல்பாரி எழுச்சியை வழிநடத்தி, பின்னர் இந்திய அரசால் அழித்தொழிக்கப்பட்ட இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) இன் வழி வந்த பல்வேறு பிரிவினரில், ஒரு பிரிவினர். இந்திய சமூகத்தின் உள்ளார்ந்த, கட்டமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வை ஒழிக்கவேண்டுமானால், அது இந்திய அரசை வன்முறையாகத் தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே சாத்தியம் என்று அவர்கள் நம்புகின்றார்கள். முன்னர் பீகார் மற்றும் ஜார்கண்டில் மாவோயிச கம்யூனிச மையமாகவும்1, ஆந்திராவில் மக்கள் யுத்தக் குழுவாகவும் அவர்கள் இயங்கியபோது, மாவோயிஸ்டுகள் மக்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்றிருந்தார்கள். (2004-இல் தற்காலிகமாக அவர்கள் மீதான தடை நீக்கப்பட்ட போது, வாரங்கல்லில் நடைபெற்ற அவர்களது பேரணியில் 15 இலட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள்).

எனினும் ஆந்திரத்தில் அவர்களது செயல்பாடு பின்னர் மோசமான முறையில் முடிவுக்கு வந்தது. தங்களது உறுதியான ஆதரவாளர்களில் சிலரையே கடுமையான விமரிசகர்களாக மாற்றும் அளவிற்கு ஒரு வன்முறைப் பாரம்பரியத்தை அவர்கள் விட்டுச்சென்றார்கள். ஆந்திர போலிசும் மாவோயிஸ்டுகளும் நடத்திய கட்டுப்படுத்த முடியாத கொலைகள் மற்றும் போட்டிக் கொலைகளுக்குப் பின்னர் மக்கள் யுத்தக் குழு நிர்மூலமாக்கப்பட்டது. உயிர் பிழைத்தவர்கள் ஆந்திராவிலிருந்து சத்தீஸ்கருக்கு தப்பியோடினார்கள். அடர்ந்த காடுகளின் இதயப் பகுதியில், ஏற்கெனவே பல பத்தாண்டுகளாக அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த தங்களது தோழர்களோடு இணைந்து கொண்டார்கள்.

காடுகளில் உள்ள மாவோயிஸ்டு இயக்கத்தின் உண்மையான இயல்பு குறித்த நேரடி அனுபவம் “வெளியாட்கள்” பலருக்கும் கிடையாது. சமீபத்தில், ‘ஓபன் மேகசின்’ எனும் பத்திரிகையில், மாவோயிஸ்டு உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான தோழர் கணபதியுடனான நேர்காணல் ஒன்று வெளிவந்தது. ‘மாவோயிஸ்டு கட்சி என்பது எவ்வகை வேறுபாட்டையும் அனுமதிக்க மறுக்கின்ற, அதிகாரத்துவப் போக்குடைய, மன்னிக்கும் சுபாவமே இல்லாத கட்சி’ என்று கருதுபவர்களின் மனதை மாற்றும் வகையில் அந்தப் பேட்டி அமைந்திருக்கவில்லை. ஒரு வேளை, மாவோயிஸ்டுகள் அதிகாரத்திற்கு வருவார்களேயானால், இந்தியச் சமூக அமைப்பில் சாதிப்பிளவுகள் தோற்றுவித்திருக்கும் கிறுக்குத்தனமான பன்முகத்தன்மையைக் கையாளும் வல்லமை அவர்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தும் விதத்திலான எதையும் தோழர் கணபதி அப்பேட்டியில் கூறவில்லை.

இலங்கையின் விடுதலைப்புலிகள் அமைப்பை போகிறபோக்கில் அங்கீகரித்து அவர் பேசிய முறையானது, மாவோயிஸ்டுகள் மீது பெரிதும் அனுதாபம் கொண்டிருந்தவர்களின் முதுகெலும்பைக் கூடச் சில்லிடச் செய்வதாக இருந்தது. தாங்கள் தொடுத்த போரில் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த கொடூரமான வழிமுறைகள் மட்டுமல்ல இதற்குக் காரணம்; தான் எந்த இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக புலிகள் இயக்கம் கூறிக் கொண்டதோ, எந்த மக்கள் விசயத்தில் அது கொஞ்சமாவது பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமோ, அந்த தமிழ் மக்கள் மீது இறங்கிய பேரழிவின் துயரமிருக்கிறதே, அதுவும்தான் தோழர் கணபதியின் பேச்சு தோற்றுவித்த நடுக்கத்துக்குக் காரணம்.

தற்போது, மத்திய இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகளின் கொரில்லாப் படை என்பது அநேகமாக, பரம ஏழைகளும் பட்டினியின் கோரப் பிடியில் தவித்துக் கொண்டிருப்பவர்களுமான பழங்குடி மக்களால் ஆன படையாகும். பஞ்சம் பட்டினி என்றவுடனேயே நமது மனக்கண் முன் தோன்றுகின்ற, சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகளின் பட்டினி நிலையுடன் ஒப்பிடத்தக்க நிலை அது.

சொல்லிக் கொள்ளப்படும் இந்தச் சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத்து அறுபதாண்டுகளுக்குப் பின்னரும், கல்வி, மருத்துவம் அல்லது சட்டப்படியான நிவாரணங்கள் என எதுவுமே கிடைக்கப்பெறாத மக்கள் அவர்கள். பல்லாண்டுகளாக அவர்கள் ஈவிரக்கமின்றி சுரண்டப்பட்டவர்கள்; கந்து வட்டிக்காரர்களாலும், சிறு வியாபாரிகளாலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டவர்கள்; போலிசும், வனத்துறை அதிகாரிகளும் தமது உரிமை போல் கருதி பழங்குடிப் பெண்களை வல்லுறவு கொண்டனர். அப்பழங்குடி மக்கள் தம் கண்ணியத்தை சிறிதளவேனும் மீளப்பெற்றார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களுடன் பல்லாண்டுகளாக வாழ்ந்து, அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடிய மாவோயிஸ்டு கட்சியின் அணிகள்தான்.

இதுவரை அம் மக்களுக்கு புறக்கணிப்பையும், வன்முறையையும் தவிர வெறெதையும் வழங்காத அரசாங்கம், இப்போது அவர்களிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அவர்களது பூமியையும் பிடுங்க விரும்புகின்றது. பழங்குடி மக்கள் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இதுதான்.

உங்கள் பகுதிகளை ‘வளர்க்க‘த்தான் நாங்கள் விரும்புகிறோம் என்று அரசாங்கம் சொல்வதை நம்புவதற்கு அவர்கள் திட்டவட்டமாக மறுக்கிறார்கள். தாண்டேவாடாவின்2 காடுகளுக்குக் குறுக்கே தேசியக் கனிம வளர்ச்சிக் கழகத்தால் அமைக்கப்பட்டுவருகின்ற, விமான ஓடுபாதைக்கு நிகரான மழமழப்பான அகலமான நெடுஞ்சாலைகள், தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு நடத்திச் செல்வதற்காகத்தான் அமைக்கப்படுகின்றன என்று அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். தங்கள் நிலங்களுக்காகப் போராடத் தவறினால், தாம் முற்றாக அழித்தொழிக்கப்படுவோம் என்று அவர்கள் நம்புகின்றார்கள். அதனால்தான், அவர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்திருக்கின்றார்கள்.

மாவோயிஸ்டு இயக்கத்தின் சித்தாந்தவாதிகள் இந்திய அரசைத் தூக்கி எறிவது என்ற தங்களது அறுதி இலக்குக்காகத்தான் போராடுகிறார்கள் என்றபோதிலும், தற்போதைய நிலையில் கந்தல் அணிந்த, அரைப் பட்டினி நிலையில் உள்ள தமது படையும், ஒரு ரயிலையோ பேருந்தையோ ஒரு சிறு நகரத்தையோ கண்ணால் கூடப் பார்த்திராத அதன் கணிசமான சிப்பாய்களும், தாங்கள் உயிர் வாழ்வதற்காகத் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மாவோயிஸ்டுகளும் அறிந்தே இருக்கிறார்கள்.

2008 ஆம் ஆண்டில், இந்திய திட்டக் கமிசனால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவொன்று “தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னேற்றப் பணிகளுக்கான சவால்கள்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. “நக்சல்பாரி (மாவோயிஸ்டு) இயக்கம் என்பது நிலமற்ற, ஏழை விவசாயிகள், பழங்குடியினர் மத்தியில், உறுதியான அடித்தளத்தைக் கொண்ட ஒரு அரசியல் இயக்கம் என அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் தோற்றமும் வளர்ச்சியும், அதன் அங்கமாய் உள்ள மக்களின் சமூக வாழ்நிலை மற்றும் அனுபவங்களின் பின்புலத்தில் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும். அரசின் கொள்கைக்கும், நடைமுறைக்கும் இடையிலான பாரிய இடைவெளி என்பது மேற்கூறிய நிலைமைக்கான காரணக் கூறுகளில் ஒன்றாக இருக்கின்றது. ‘வன்முறை மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது’ என்பது இவ்வியக்கத்தின் அறிவிக்கப்பட்ட நீண்டகாலக் கொள்கையாக இருந்த போதிலும், அதன் அன்றாட நடைமுறைகளின் வெளிப்பாடுகளில், இது சமூக நீதி, சமத்துவம், பாதுகாப்பு மற்றும் தல மட்ட முன்னேற்றத்திற்கான போராட்டம் என்பதாகவே பார்க்கப்பட வேண்டும்.” என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. ’தனிப்பெரும் உள்நாட்டு பாதுகாப்பு அபாயம்’ எனும் கூற்றிலிருந்து இந்த அறிக்கை வெகு தொலைவில் அல்லவா இருக்கிறது!

இது மாவோயிஸ்டு கிளர்ச்சியையே கவர்ச்சிச் செய்தியாகக் எடுத்துக் கொண்டிருக்கும் ’மாவோயிஸ்டு வாரம்’! எனவே, ‘பல்லாண்டுகளாய் இழைக்கப்பட்ட அநீதிகளின் திரட்சியே இப்பிரச்சினையின் ஆணிவேராக இருக்கிறது’ என்ற கருத்தை ஒப்புக்கொள்வதற்கு, கொழுத்த கோடீசுவரக் கோமான் முதல் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் விற்றுத் தீரும் நாளிதழின் குரூர மனம் படைத்த ஆசிரியர் வரை, அனைவருமே தயாராக இருப்பது போலத் தோன்றுகின்றனர். ஆனால், பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்குப் பதிலாக – அதுதான் அவர்களது நோக்கம் எனும் பட்சத்தில் இந்த 21-ஆம் நூற்றாண்டின் தங்க வேட்டையை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டிவரும் – விவாதத்தை முற்றிலும் வேறு திசையை நோக்கித் திருப்பும் முயற்சிக்கிறார்கள்; புனிதமான ஆவேசம் பீறிட மாவோயிஸ்டு ‘பயங்கரவாதத்துக்கு‘ எதிராகக் குமுறி வெடிக்கிறார்கள். ஆனால், இவையெல்லாமே அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் விவகாரமாகத்தான் அமைந்திருக்கிறது.

ஆயுதமே தீர்வு என்று துணிந்து களத்தில் நிற்பவர்கள், நாள் முழுதும் செய்தித்தாள் படித்துக் கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ அமர்ந்திருக்கவில்லை; அல்லது தொலைக்காட்சி காமெராக்களுக்காக அவர்கள் ’நடிக்கவும்’ இல்லை. அல்லது “வன்முறை நல்லதா, கெட்டதா? என்ற அன்றைய அறவியல் கேள்விக்கான பதிலை எஸ்.எம்.எஸ் செய்யச்சொல்லி கருத்துக் கணிப்பும் நடத்திக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமது வீடுகளையும் நிலங்களையும் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உண்டு என்று அவர்கள் நம்புகிறார்கள். தாங்கள் நீதி பெறும் தகுதி படைத்தவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இத்தகைய அபாயகரமான கூட்டத்திடமிருந்து, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெற்ற தனது மேன்மையான குடிமக்களைக் காப்பாற்றும் பொருட்டுத்தான், அரசு அவர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்திருக்கின்றது. இப்போரில் வெல்வதற்கு மூன்றிலிருந்து ஐந்தாண்டுகள் பிடிக்கலாம் என ஆரூடமும் சொல்கின்றது. கொஞ்சம் விசித்திரமாகத் தெரியவில்லை? 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராகவே இருந்தது… சீனத்துடன் பேசுவதற்கும் தயாராய் இருக்கின்றது. ஆனால், ஏழைகளுக்கு எதிரான யுத்தம் என்று வரும்போது மட்டும் அதன் அணுகுமுறை மூர்க்கத்தனமானதாக மாறி விடுகின்றது.

வேட்டை நாய்கள், கருநாகங்கள், தேள்கள் என இன மரபுச் சின்னங்களைத் தம் பெயர்களாக சூட்டிக் கொண்ட சிறப்புக் காவல் படைகள், கொலை செய்யும் உரிமத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஏற்கெனவே அக்காடுகளைச் சுரண்டி எடுத்துக் கொண்டிருக்கின்றன; அது போதாதாம். சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப் படைகளும், கொடூரத்துக்குப் பெயர் போன நாகா பட்டாலியனும் தொலை தூர வனாந்தர கிராமங்களில் மனச்சாட்சியற்ற மிருகத்தனமான கொடூரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன; அதுவும் போதாதாம். தாண்டேவாடாவின் காடுகள் நெடுக கொலை, பாலியல் வன்முறை, குடியிருப்புகளைத் தீயிடுதல் எனத் தனது அட்டூழியங்களால் மூன்று இலட்சம் மக்களை வீடற்றவர்களாக்கி ஓடச் செய்திருக்கும் சல்வா ஜுடூம்3 என்ற ‘மக்கள் சேனை’க்கு ஆயுதத்தையும் ஆதரவையும் அரசாங்கமே வழங்கி வருகிறது; அதுவும் போதாதாம். தற்போது, இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையையும், ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையினரையும் களத்திலிறக்க முடிவு செய்திருக்கிறது அரசு. பிலாஸ்பூரில் (9 கிராமங்களை அப்புறப்படுத்தி) படைத் தலைமையகத்தையும், ராஜ்நந்த்காவுனில் (7 கிராமங்களை அப்புறப்படுத்தி) விமானத் தளத்தையும் நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இம்முடிவுகளெல்லாம் முன்னமே எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகவே தெரிகின்றது. சர்வேக்கள் நடத்தி முடிக்கப் பட்டிருக்கின்றன; குறிப்பான இடங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் போர், இப்போதல்ல, கொஞ்ச காலமாகவே நெருங்கி, நெருங்கி வந்துகொண்டே இருந்திருக்கிறது. சுவாரசியமாக இல்லை? இப்போது இந்திய விமானப்படையின் இராணுவ ஹெலிகாப்டர்களுக்கு ’தற்காப்பின் பொருட்டு சுடுவதற்கான உரிமையை’- எந்த உரிமையைப் பரம ஏழைகளான தனது குடிமக்களுக்கு வழங்குவதற்கு அரசு மறுக்கிறதோ அந்த உரிமையை – அரசு வழங்கி விட்டது.

அவர்கள் யாரை நோக்கிச் சுடப் போகிறார்கள்? காட்டிற்குள் தலைதெறிக்கப் பயந்தோடும் ஒரு சாதாரண மனிதனிடமிருந்து ஒரு மாவோயிஸ்டை பாதுகாப்புப் படை எங்ஙனம் இனம் பிரித்துக் கண்டுபிடிக்கும்? பல நூற்றாண்டுகளாய் வில்லும் அம்பும் ஏந்தி வாழும் பழங்குடி மக்கள், இப்போதும் அவற்றை ஏந்தி நடப்பார்களாயின் அவர்களும் மாவோயிஸ்டுகளாகக் கணக்கில் கொள்ளப்படுவார்களா? ஆயுதம் ஏந்திப் போரிடாத மாவோயிஸ்டு அனுதாபிகளும் கூட சுட்டுத்தள்ளப்பட வேண்டிய இலக்குகளில் அடங்குவார்களா? நான் தாண்டேவாடா சென்றிருந்தபோது, தனது ‘பசங்களால்’ கொல்லப்பட்ட 19 மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களைக் காவல்துறை கண்காணிப்பாளர் என்னிடம் காட்டினார். “இவர்கள் மாவோயிஸ்டுகள்தான் என்று நான் மற்றவர்களுக்கு எப்படிச் சொல்ல முடியும்” என்று கேட்டேன். “பாருங்க மேடம், இவுங்க கிட்ட மலேரியா மாத்திரை, டெட்டால் பாட்டில் எல்லாம் இருந்துச்சு… இதெல்லாம் வெளியில இருந்து வந்த விசயங்களில்லையா?” என்றார்.

என்ன வகைப்பட்ட போராய் நடக்கப்போகிறது இந்தக் காட்டு வேட்டை? அது எப்பொழுதேனும் நமக்குத் தெரிய வருமா? காட்டுக்குள்ளிருந்து செய்திகளெதுவும் வெளிவருவதில்லை. மேற்கு வங்கத்தின் லால்கர் ஏற்கெனவே சுற்றிவளைத்துத் துண்டிக்கப்பட்டு விட்டது. யாரேனும் உள்ளே செல்ல முயன்றால், அடித்து உதைத்துக் கைது செய்யப்படுகின்றார்கள். அப்புறம் வழக்கம்போல மாவோயிஸ்டுகள் எனப் பட்டம் சூட்டப்படுகிறார்கள். தாண்டேவாடாவில் ஹிமான்ஷு குமார் என்பவரால் நடத்தப்படும் வன்வாசி சேத்னா ஆஸ்ரம் எனும் காந்திய ஆசிரமம், சில மணி நேரங்களில் புல்டோசர்களைக் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அந்த ஆசிரமம்தான் போர்க்களப் பகுதி துவங்குமிடத்துக்கு முன்னால் அமைந்திருந்த ஒரே ஒரு நடுநிலைப் புகலிடம். இப்பகுதிக்கு வேலை செய்ய வரும் பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயல் வீரர்கள், ஆய்வாளர்கள், உண்மை அறியும் குழுவினர் ஆகியோர் தங்கிச் செல்வதற்கு எஞ்சியிருந்த ஒரே இடம்.

இதனிடையே, இந்தியாவின் ஆளும் நிறுவனம், தனது சர்வ வல்லமை பொருந்திய ஆயுதத்தைக் களமிறக்கியிருக்கின்றது. ஆளும் நிறுவனங்களின் உடன்படுக்கை ஊடகங்கள், இதுகாறும் தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருந்த இசுலாமிய பயங்கரவாதம் குறித்த புனையப்பட்டதும், ஆதாரமற்றதும், வெறியைக் கிளப்பும் தன்மையதுமான கதைகளை ஒரே இரவில் மாற்றி, அதே ரகத்தைச் சார்ந்த ‘சிவப்பு பயங்கரவாதம்’ குறித்த கதைகளை வழங்கத் தொடங்கின. சகிக்கவொண்ணாத இந்தக் கூச்சல்களுக்கிடையே, சிறு ஓசையும்கூடத் தப்பிக் கசிந்துவிடாத வகையில், போர்க்களப் பகுதி, அமைதியின் வலையால் சுற்றி வளைத்து இறுக்கப்படுகின்றது. ‘இலங்கை வழித் தீர்வு’ தான் அவர்களது திட்டம் போலும்! புலிகளுக்கு எதிரான போரில், “இலங்கை அரசு இழைத்திருக்கும் போர்க்குற்றங்களைப் பற்றிய ஒரு சர்வதேச விசாரணை வேண்டும்” என்ற கோரிக்கையை ஐரோப்பிய அரசுகள் ஐ.நாவில் முன் வைத்தபோது, அதற்கு இந்திய அரசு முட்டுக்கட்டை போட்டதே, அது நிச்சயமாகக் காரணமின்றி செய்யப்பட்டதல்ல.

இந்தத் திசையில் செய்யப்படும் முதல் காய்நகர்த்தலாக “நீ எங்களோடு இல்லை என்றால் மாவோயிஸ்டுகளுடன் இருக்கிறாய்” என, ஜார்ஜ் புஷ்ஷின் எளிய இருமைக் கோட்பாட்டின் அடிப்படையிலான தீவிரமானதொரு பிரச்சாரம் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் நாடெங்கும் நடைபெறும் எண்ணற்ற வடிவங்களிலான எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்தும் ‘மாவோயிஸ்டு பிரச்சினை’ என்று வேண்டுமென்றே குறுக்கப் படுகின்றன. இவ்வாறு வேண்டுமென்றே அதீதமாய்க் காட்டப்படும் மாவோயிஸ்டு அபாயம் தனது இராணுவமயமாக்கலை நியாயப்படுத்திக் கொள்ள அரசுக்கு உதவுகிறது. (இப்பிரச்சாரம் நிச்சயமாய் மாவோயிஸ்டுகளுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்கவில்லை. தன் மீது இத்தகைய தனிப்பட்ட கவனம் குவிக்கப்படுவது குறித்து எந்தக் கட்சிதான் அதிருப்தி கொள்ளும்?) பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனும் இந்தப் பொய்மையைத் திரைகிழிப்பதில் நமது சக்தியனைத்தும் உறிஞ்சப்படுகையில், அரசு இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது இராணுவ நடவடிக்கையின் வீச்சிற்குள் நூற்றுக்கணக்கான பிற எதிர்ப்பு இயக்கங்களையும் வளைத்து இழுத்து, அவர்கள் மீதும் ‘மாவோயிஸ்டு அனுதாபிகள்’ என முத்திரை குத்தி துடைத்தெறியும்.

எதிர்காலம் என்று குறிப்பிட்டு நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிப்போக்கு ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டது. நந்திகிராமிலும், சிங்கூரிலும் மேற்கு வங்க அரசு இதைத்தான் செய்ய முயன்றது, ஆனால் தோற்றுவிட்டது. தற்போது லால்கரில், போலீசு அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் கமிட்டி என்ற அமைப்பினர், மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டிருந்த போதிலும், தனித்தவொரு மக்கள் இயக்கமாகவே செயல்படுகின்றனர். எனினும், இவ்வமைப்பு மாவோயிஸ்டு அமைப்பினரின் வெளிப்படையான பிரிவு என்றே அழைக்கப்படுகின்றது. தற்போது கைது செய்யப்பட்டு, பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பின் தலைவர் சத்ரதார் மகாத்தோ, மாவோயிஸ்டு தலைவர் என்று வேண்டுமென்றே அழைக்கப்படுகிறார். மாவோயிஸ்டுகளுக்கு கூரியர் வேலை பார்த்தார் என அற்பமான சோடிக்கப்பட்ட காரணத்துக்காக இரண்டு ஆண்டுகளை சிறையில் கழித்த மருத்துவரும், மனித உரிமைப் போராளியுமான பினாயக் சென்னின் கதையை நாம் அறிவோம். வெளிச்சம் முழுவதும் காட்டு வேட்டையின் மீது பாய்ச்சப்பட்டு, கவனம் இங்கே குவிக்கப்பட்டிருக்கும் சூழலில், போர் நடைபெறும் இந்தக் களத்துக்கு வெளியே, வெகு தொலைவில், நாட்டின் ஏனைய பகுதிகளில், ஏழைகள், தொழிலாளர்கள், நிலமற்றவர்கள் ஆகியோர் மீதான தாக்குதலும், யாருடைய நிலங்களையெல்லாம் ‘பொதுத் தேவைக்காக’ அபகரிக்க அரசு விரும்புகிறதோ, அவர்கள் மீதான தாக்குதலும் தீவிரமடையும். அவர்களுடைய துன்பம் அதிகரிப்பது மட்டுமல்ல, அவர்களுடைய கதறல்களும் முறையீடுகளும் எந்தச் செவியிலும் நுழைய முடியாமல் கேட்பாரின்றி அவிந்தே போகும். .

போர் தொடங்கி விட்டால், மற்றெல்லாப் போர்களையும் போலவே, தனக்குப் பொருத்தமானதொரு இயக்கத்தையும், நியாயங்களையும், தனக்கே உரித்தானதொரு பொருளியலையும் கூட அது வளர்த்துக் கொள்ளும். போகப்போக, இந்தப் போர் என்பது மீண்டு வரவே முடியாத ஒரு வாழ்க்கை முறையாகவும் மாறும். ஈவிரக்கமற்ற கொலைக்கருவியான ராணுவத்தைப் போலவே போலீசும் நடந்துகொள்ளவேண்டுமென இந்தப் போர் எதிர்பார்க்கும். ஊழல் மலிந்த, ஊதிப் பருத்த நிர்வாக எந்திரமான போலிசைப்போலவே துணை ராணுவப் படைகளும் மாறிவிடும் என்பதும் எதிர்பார்க்கப்படவேண்டும். நாகலாந்திலும், மணிப்பூரிலும், காஷ்மீரிலும் இப்படித்தான் நடந்ததென்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.

ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்தியாவின் ‘இதயப் பகுதியில்‘ போரிடவிருக்கும் பாதுகாப்புப்படையினருக்கு, தாங்கள் யாரை எதிர்த்துப் போர் நடத்துகிறார்களோ, அந்த மக்களின் பரிதாபத்திற்குரிய நிலைமையிலிருந்து தங்களது நிலைமை பெரிதும் வேறுபட்டதல்ல என்ற உண்மை வெகு விரைவிலேயே புரிந்து விடும். காலப்போக்கில் மக்களையும், அவர்களின் மீது சட்டத்தை நிலைநாட்டும் படையினரையும் பிரித்துக் காட்டுகின்ற தடுப்புச்சுவர் முழுவதிலும் ஓட்டைகள் விழுந்து விடும். துப்பாக்கிகளும், வெடி மருந்துகளும் வாங்கப்படும், விற்கப்படும். சொல்லப்போனால் இது ஏற்கெனவே நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்தப் போரில் கொல்லப்படுபவர்கள் யாராக இருப்பினும் – பாதுகாப்புப் படையினராயினும், மாவோயிஸ்டுகளாயினும், சண்டையில் ஈடுபடாத குடிமக்களாக இருப்பினும் – பணக்காரர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போரில் மடிபவர்கள் அனைவரும் ஏழைகளாகவே இருப்பர். அதே நேரத்தில், இந்தப் போர் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை என்று யாரேனும் எண்ணிக் கொண்டிருப்பார்களாயின், அவர்கள் தம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளட்டும். இந்தப் போரின் கோரப்பசி விழுங்கப்போகும் தீனி, நாட்டின் பொருளாதாரத்தையே உறிஞ்சி ஊனமாக்கப் போவது நிச்சயம்.

இந்த அலையைத் தடுக்கவும், போரை நிறுத்தவும், என்ன செய்ய முடியும் என்பது குறித்து விவாதிக்க, நாடெங்கிலும் உள்ள பல்வேறு மனித உரிமைக் குழுக்கள், சென்ற வாரம் தில்லியில் தொடர்ச்சியான பல கூட்டங்களை நடத்தின. அனைவரும் அறிந்த ஆந்திர மாநில மனித உரிமை செயல் வீரரான முனைவர் பாலகோபால் அங்கே இல்லாமல் போனதால் ஏற்பட்ட வலியை நாம் அனைவருமே உணரமுடிந்தது. நமது சமகால அரசியல் சிந்தனையாளர்களிடையே துணிவும் அறிவுக்கூர்மையும் படைத்தவர்களில் ஒருவரான அவரது தேவை நமக்கு மிகவும் அவசியமாய் இருக்கும் இந்தத் தருணத்தில், அவர் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்.4. இரண்டு வாரங்களுக்கு முன் அவர் காலமாகிவிட்டார்.

இருந்த போதிலும், இந்தியாவின் குடிமை உரிமைச் சமூகத்தைச் சார்ந்த மனித உரிமை செயல் வீரர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்கள் அங்கே ஆற்றிய உரைகளில் வெளிப்பட்ட தொலைநோக்கையும், ஆழத்தையும், அனுபவத்தையும், சான்றாண்மையையும், அரசியல் கூர்மையையும், அனைத்துக்கும் மேலாக அவர்களிடம் வெளிப்பட்ட உண்மையான மனிதநேயத்தையும் கேட்டிருந்தால், நிச்சயமாக பாலகோபால் நிம்மதி கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். இவர்களெல்லோரும் தலைநகரில் கூடிய இந்த நிகழ்வு, நமது தொலைக்காட்சி நிலையங்களில் ஒளியுமிழ் விளக்குகளுக்கு அப்பால், செய்தி ஊடகங்களின் கொட்டுச்சத்தம் கிளப்பும் பரபரப்பிற்கு அப்பால், இந்தியாவின் நடுத்தர வர்க்கங்களுக்குள்ளேயும் ஒரு மனித இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருப்பதை அடையாளம் காட்டின. “பயங்கரவாதத்திற்கு உகந்ததான ஒரு அறிவுத்துறைச் சூழலை உருவாக்குகிறார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் இவர்கள் மீது குற்றம் சாட்டியிருந்ததில் வியப்பதற்கு ஏதுமில்லை. அக்குற்றச்சாட்டு அச்சுறுத்தும் நோக்கில் உரைக்கப்பட்டதாயிருப்பின், அதன் விளைவென்னவோ நேர் எதிரானதாகவே இருந்தது.

அங்கு உரையாற்றியோர் தாராளவாத ஜனநாயகச் சிந்தனை முதல் தீவிர இடதுசாரி சிந்தனை வரையிலான பல்வேறு பட்ட கருத்துக்களையும் பிரதிபலித்தனர். அங்கே பேசியவர்களில் யாரும் தம்மை மாவோயிஸ்டு என்று அழைத்துக் கொள்ளவில்லையெனினும், “அரசு வன்முறைக்கு எதிராகத் தம்மைக் தற்காத்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு” என்பதைக் கொள்கையளவில் யாரும் எதிர்க்கவில்லை. மாவோயிஸ்டு வன்முறை, அவர்களது ’மக்கள் நீதிமன்றங்கள்’ வழங்கும் அதிரடித் தீர்ப்புகள், ஆயுதப் போராட்டத்தில் தவிர்க்கவியலாமல் ஊடுருவும் அதிகாரத்துவத்தால் ஆயுதமற்றோர் ஒடுக்கப்படுதல் என்பனவற்றில் பலருக்கும் உடன்பாடில்லை. தமது உடன்பாடின்மையை வெளிப்படுத்திய அதே நேரத்தில், சாமானிய மக்களுக்கு இந்திய நீதிமன்றங்கள் எட்டாக்கனியாக இருக்கின்ற காரணத்தினால்தான் மக்கள் நீதிமன்றங்கள் நீடிக்க முடிகின்றன என்பதையும், இன்று இந்தியாவின் இதயத்தில் வெடித்திருக்கும் இந்த ஆயுதப் போராட்டம் என்பது அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்டு, பற்றிக்கொள்ள ஏதுமின்றித் தவிக்கும் மக்களின் இறுதித் தெரிவே அன்றி, முதல் தெரிவு அல்ல என்பதையும் அவர்கள் அறிந்தே இருந்தனர்.

எனவே நிலவுகின்ற சூழ்நிலைகள் ஒரு போருக்கு நிகரானவையாக ஏற்கெனவே காட்சியளித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு சில தனித்த மோசமான வன்முறை நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு நியாய விசாரம் செய்து, அவற்றிலிருந்து எளிய அறம் சார்ந்த முடிவுகளுக்கு வருவதில் உள்ள அபாயங்களைப் பேச்சாளர்கள் அனைவரும் உணர்ந்தே இருந்தனர். அரசமைப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறையையும், அதை எதிர்த்த ஆயுத வன்முறையையும் சமநிலையில் வைத்துப் பார்க்கும் கண்ணோட்டத்திலிருந்து நீண்ட காலம் முன்பே எல்லோரும் விடுபட்டு விட்டனர். சொல்லப்போனால், ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி. சாவந்த், இந்தச் சமூக அமைப்பில் புரையோடிப்போயிருக்கும் அநீதியின் பால் கவனம் செலுத்துமாறு இந்த நாட்டின் ஆளும் நிறுவனங்களுக்கு நிர்ப்பந்தம் கொடுத்ததற்காக மாவோயிஸ்டுகளுக்கு நன்றி சொல்லும் அளவுக்குச் சென்றார்.

ஆந்திர மாநிலத்தில், மாவோயிஸ்டுகளின் குறுகிய செயல்பாட்டு காலகட்டத்தில், ஒரு மனித உரிமைச் செயல்வீரராக தான் பணியாற்றிய அனுபவங்களை ஹரகோபால் பகிர்ந்து கொண்டார். ஆந்திரத்தின் இரத்தக்களறியான காலங்களில் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விடவும், குஜராத்தில் பஜ்ரங் தள் மற்றும் விசுவ இந்து பரிசத் தலைமையிலான இந்து மதவெறிக் கும்பல் 2002-ஆம் ஆண்டின் ஒரு சில நாட்களில் கொன்றொழித்தோரின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்ற உண்மையை, அவர் தமது பேச்சினூடாகக் கூறிச் சென்றார்.

லால்கர், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா போன்ற போர்ப் பகுதிகளிலிருந்து வந்திருந்தோர், போலிசு அடக்குமுறைகள், கைதுகள், சித்திரவதைகள், கொலைகள் ஊழல்கள் பற்றி விவரித்ததுடன், சில சமயங்களில் போலிசார், நேரடியாக சுரங்க நிறுவன அதிகாரிகளிடமிருந்தே ஆணைகளைப் பெற்று செயல்படுத்துவதாகவும் கூறினர். நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து (Aid agencies) காசுவாங்கிக் கொண்டு, கார்ப்பரேட் முதலாளிகளின் முன்னேற்றத்திற்காகவே தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள சில அரசு சாரா நிறுவனங்கள் ஆற்றுகின்ற சந்தேகத்திற்கிடமான, கேடான பாத்திரத்தை சிலர் விவரித்தனர்.

செயல் வீரர்களோ சாமானிய மக்களோ, எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, ஜார்கண்டிலும், சத்தீஸ்கரிலும் அவர்கள் அனைவரும் மாவோயிஸ்டு என முத்திரை குத்தப்பட்டு சிறை வைக்கப்படுகிறார்கள் என்பது பற்றித்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் பேசினார்கள். வேறு எதனை விடவும் இதுதான் மக்களை ஆயுதம் ஏந்துமாறும், மாவோயிஸ்டுகளுடன் இணைந்து கொள்ளுமாறும் பிடித்துத் தள்ளிவிடுகிறது என்று கூறினார்கள்.. ‘வளர்ச்சித் திட்டங்கள்‘ என்ற பெயரில் அப்புறப்படுத்தப்பட்ட ஐந்து கோடி மக்களில், ஒரு சிறு பகுதியளவு மக்களை வேறு இடங்களில் மீள் குடியமர்த்துவதற்குக் கூடத் தன்னால் முடியவில்லை என்று கைவிரித்த இந்த அரசாங்கத்தால், 300-க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக (பணக்காரர்களின் உள்நாட்டு வரியில்லா சொர்க்கங்கள்) மட்டும், 1,40,000 ஹெக்டேர்கள் வளமான நிலத்தை எப்படி திடீரென்று இனங்கண்டு தொழிலதிபர்களுக்கு வழங்க முடிந்ததென அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

“தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்காகத்தான், ‘பொதுத் தேவைக்கு’ என்ற பெயரில், அரசாங்கம் மக்களிடமிருந்து பலவந்தமாக நிலங்களை அபகரிக்கின்றது என்பது நன்கு தெரிந்திருந்தும், ‘நிலக் கையகப்படுத்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ‘பொதுத் தேவை‘ என்ற சொல்லை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம், என்ன வகை நீதியைக் கடைப்பிடிக்கிறது?” என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினர். ‘அரசின் அதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும்‘ 5 என்று அரசாங்கம் கூறும்போது, அதன் பொருள் காவல் நிலையங்கள் முறையாகக் கட்டியமைக்கப்பட வேண்டும் என்பதாக மட்டுமே ஏன் இருக்கிறது என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள்.

பள்ளிகளல்ல, மருத்துவமனைகளல்ல, வீட்டு வசதியல்ல, சுத்தமான குடிநீர் அல்ல, வனம்சார் விளை பொருளுக்கு நியாய விலை அல்ல, குறைந்தபட்சம் போலிசு பயமின்றி நிம்மதியாய் வாழ விடுவதும் அல்ல, மக்களுடைய சிரமங்களைக் குறைத்து வாழ்க்கையைச் சற்றே எளிதாக்க உதவும் எதுவும் அல்ல… ‘அரசின் அதிகாரம்‘ என்பதற்கு ‘நீதி’ என்று ஒருபோதும் பொருள் கொள்ள முடிவதில்லையே அது ஏன், என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஒரு காலம் இருந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் என்று சொல்லலாம்.
புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் இந்த ‘வளர்ச்சி‘யின் மாதிரி (model) குறித்து இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்வோர் அப்போதெல்லாம் விவாதம் நடத்திக் கொண்டிருந்தார்கள். இன்றோ அந்த வளர்ச்சி ‘மாதிரி’ முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதில் மறு பேச்சுக்கே இடமில்லை. காந்தியவாதிகள் முதல் மாவோயிஸ்டுகள் வரை அனைவருமே இதில் உடன்படுகின்றார்கள். இதனைத் தகர்த்தெறியும் திறன் வாய்ந்த வழி எது என்பது மட்டுமே தற்போதைய கேள்வி.

எனது நண்பருடைய பழைய கல்லூரி நண்பரொருவர், கார்ப்பரேட் உலகத்தின் ஒரு பெரும்புள்ளி, தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு உலகத்தை அறிந்துகொள்ளும் தேவையில்லாத ஆர்வத்தில், இத்தகையதொரு கூட்டத்திற்கு வந்திருந்தார். ஃபேப் இந்தியா 6 குர்தாவுக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருந்தாலும், அவர் விலைமதிப்பு மிக்கவர் என்பதை அவரது தோற்றமும் வாசமும் காட்டிக் கொடுக்கவே செய்தன. சற்று நேரத்தில் அவர் இருப்புக் கொள்ளாமல் என் பக்கம் சாய்ந்து கிசுகிசுத்தார்: “கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று யாராவது இவர்களிடம் சொல்ல வேண்டும். இவர்களால் இந்த ஆட்டத்தில் ஜெயிக்கவே முடியாது. எதை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே இவர்களுக்குப் புரியவில்லை. எவ்வளவு பணம் இதில் இறக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? இதில் பணம் போட்டிருக்கும் கம்பெனிகளால் அமைச்சர்கள், ஊடக முதலாளிகள், கொள்கை வகுப்பாளர்கள்.. என்று யாரையும் விலைக்கு வாங்க முடியும். தங்களுக்கான சொந்த அரசு சாரா நிறுவனங்களையும், கூலிப் படைகளையும் பராமரிக்க முடியும். அவர்களால் மொத்த அரசாங்கங்களையே விலைக்கு வாங்க முடியும். அவ்வளவு ஏன், அவர்கள் மாவோயிஸ்டுகளையே கூட விலை பேசக்கூடியவர்கள். இவர்களையெல்லாம் பார்த்தால் நல்ல மனிதர்களாகத் தெரிகிறார்கள். இப்படி ஆகாத காரியத்துக்கு மூச்சைக் கொடுப்பதற்கு பதிலாக, இவர்கள் வேறு ஏதாவது உருப்படியான காரியத்தைக் கவனிக்கலாம் ” என்றார்.

மக்கள் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கப்படும் போது, அதை எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் வேறு என்ன ‘உருப்படியான‘ வேலையை அவர்கள் தெரிவு செய்ய முடியும்? அவ்வாறு தெரிவு செய்வதற்குத்தான் மக்களுக்கு வேறு என்ன வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன, தற்கொலை செய்து கொள்வதைத் தவிர? கடன் சுழலில் சிக்கிய பல விவசாயிகள் அதைத்தானே தெரிவு செய்தார்கள்?

(நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படும் ஏழை மக்கள், எதிர்த்துப் போராடவேண்டும் என்று சிந்திப்பதற்குப் பதிலாக, தற்கொலை செய்து மடிந்து விடுவார்களேயானால் அதுதான், இந்தியாவின் ஆளும் நிறுவனங்களுக்கும், ஊடகங்களில் உள்ள அதன் பிரதிநிதிகளுக்கும் பிடித்தமானதாக இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மட்டும்தானா அப்படித் தோன்றுகிறது?)

சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மக்கள் – அவர்களில் சிலர் மாவோயிஸ்டுகள், பலர் மாவோயிஸ்டுகள் அல்ல – அரும்பாடுபட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் ஆக்கிரமிப்பைக் கடந்த சில ஆண்டுகளாய் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த ’காட்டு வேட்டை’ நடவடிக்கை அவர்களது போராட்டத்தின் தன்மையை எப்படி மாற்றப் போகிறது என்பதுதான் தற்போதைய கேள்வி. எதிர்த்துப் போராடும் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் சக்தி எது என்பதுதான் கேள்வி.

வரலாற்று ரீதியாகப் பார்த்தோமானால், உள்ளூர் மக்களுடனான மோதல்கள் பலவற்றிலும் சுரங்கத்தொழில் நிறுவனங்களே வெற்றி பெற்றிருக்கின்றன என்பது ஒரு உண்மை. போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை விட்டுத்தள்ளுங்கள், அநேகமாக எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களின் கடந்தகாலமும் ஈவிரக்கமற்றதுதான். கார்ப்பரேட் முதலாளிகள் குரூரமானவர்கள், களம் பல கண்டு இறுகி உரமேறியவர்கள். “உயிரைக் கூடத் தருவோம், ஒருபோதும் எமது நிலத்தைத் தர மாட்டோம்” என்று மக்கள் எழுப்பும் முழக்கம், குண்டு வீச்சைத் தாங்கும் கூடாரத்தின் மீது விழும் மழைத் தூறல் போல, அவர்கள் மீது பட்டுத் தெறிக்கிறது. இந்த முழக்கங்களையெல்லாம் பல காலமாக அவர்கள் கேட்டிருக்கிறார்கள் – ஆயிரக்கணக்கான மொழிகளில், நூற்றுக்கணக்கான நாடுகளில்.

தற்போது இந்தியாவில் வந்திறங்கிய நாள் முதல் விமான நிலையங்களின் முதல் வகுப்பு ஓய்வறைகளில்தான் அவர்களில் பல பேர் இன்னமும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். மதுவகைகளுக்கு ஆர்டர் கொடுக்கிறார்கள். சோம்பல் மிகுந்த மிருகங்களைப் போல மெதுவாகக் கண்களை இமைக்கிறார்கள். தாங்கள் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)- அவற்றில் சில 2005 ஆம் ஆண்டிலேயே போடப்பட்டவை – உண்மையான பணமாக உருமாறும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். விமான நிலைய ஓய்வறையிலேயே நான்காண்டுகளைத் தள்ளுவது என்பது, மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மனிதனைக்கூட சோதிக்கின்ற அளவுக்கான தாமதம் அல்லவா? ஜனநாயக நடைமுறை கோருகின்ற விரிவான ஆனால் பொருளற்ற சடங்குகள்: மக்கள் கருத்தறிதல்(சில நேரங்களில் இது மோசடியாக நடத்தப்படுவது), சுற்றுச்சூழல் விளைவுகள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கைகள் (சில நேரங்களில் இவை போலியானவை), பல்வேறு அமைச்சகங்களிடம் பெற வேண்டிய ஒப்புதல்கள் (பெரும்பாலும் இவை விலைக்கு வாங்கப்படுபவை), நீண்ட காலமாய் இழுத்துக் கொண்டு கிடக்கும் நீதிமன்ற வழக்குகள். போலி ஜனநாயகம்தான், இருந்தாலும் கூட காலத்தைத் தின்று விடுகிறதே. காலம் என்றால் வெறும் காலமல்ல, அதுதானே பணம்.

நாம் பேசிக் கொண்டிருக்கும் பணத்தின் அளவு என்ன தெரியுமா? விரைவில் வெளிவர இருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தங்களது நூலில்(Out of This Earth: East India Adivasis and the Aluminium Cartel) சமரேந்திர தாஸ் மற்றும் பெலிக்ஸ் பெடல் ஆகியோர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்.

ஒரிசாவில் மட்டும் உள்ள பாக்சைட் இருப்பின் மதிப்பு 2.27 டிரில்லியன் டாலர்கள் (இந்தியாவுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பைப் போல இது இரண்டு மடங்குக்கும் அதிகம்) எனக் குறிப்பிட்டுள்ளனர். அது 2004 ஆண்டின் விலை நிலவரம். பாக்சைட்டின் இன்றைய விலையில் இதன் மதிப்பு சுமார் 4 டிரில்லியன் டாலர்கள் (சுமார் 200 இலட்சம் கோடி ரூபாய்) இதிலிருந்து அதிகாரப்பூர்வமாக, 7% க்கும் குறைவான தொகையைத்தான் ராயல்டியாக அரசாங்கம் பெறவிருக்கிறது. ஒரு சுரங்கத் தொழில் நிறுவனம் நன்கு அறிமுகமானதாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கும் பட்சத்தில், தாதுப் பொருள் வெட்டியெடுக்கப்படாமல் மலைக்குள் இருக்கும்போதே, அநேகமாக அது முன்பேரச் சந்தையில் விலைபேசப் பட்டிருக்கும். அதாவது, பழங்குடி மக்களைப் பொருத்தவரை வாழும் தெய்வமாகவும், அவர்களது வாழ்க்கைக்கும் நம்பிக்கைக்குமான ஊற்றுமூலமாகவும், இந்தப் பிராந்தியத்தினுடைய சூழலின் ஆரோக்கியத்துக்கு ஆணிவேராகவும் திகழும் இம்மலைகள், கார்ப்பரேட் முதலாளிகளைப் பொருத்தவரை மிகவும் மலிவான தாதுப்பொருள் கிடங்குகள் – அவ்வளவுதான். கிடங்கு என்றால் அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் விரும்பியவுடன் எளிதாக எடுக்கத் தக்கதாய் இருக்க வேண்டும், அல்லவா? கார்ப்பரேட் முதலாளிகளுடைய கண்ணோட்டத்தில் பார்ப்போமானால், மலைக்குள்ளிருந்து பாக்சைட் வெளியில் வந்தே தீரவேண்டும். சுதந்திரச் சந்தையின் அவசரத் தேவைகளும், நிர்ப்பந்தங்களும் அப்படிப்பட்டவை ஆயிற்றே!

இது ஒரிசாவிலுள்ள பாக்சைட் கனிமத்தின் கதை மட்டும்தான். இந்த நான்கு டிரில்லியன் டாலர்களோடு, சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் பல கோடி டன் உயர்தர இரும்புத்தாதுவின் மதிப்பையும், யுரேனியம், சுண்ணாம்புக்கல், டாலமைட், நிலக்கரி, வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வார்ட்ஸைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்டரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் போன்ற 28 வகை அரிய கனிமப் பொருட்களின் பல மில்லியன் டாலர் மதிப்பையும் கூட்டிக் கொள்ளுங்கள். அவற்றோடு, கையெழுத்திடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் (ஜார்க்கண்டில் மட்டும் 90 ஒப்பந்தங்கள்) அங்கமாக அம்மாநிலங்களில் கட்டப்படவிருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள், அணைகள், நெடுஞ்சாலைகள், இரும்பு எஃகு மற்றும் சிமெண்டுத் தொழிற்சாலைகள், அலுமினிய உருக்காலைகள் மற்றும் பிற உள் கட்டுமானத் திட்டங்களின் பண மதிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இவ்வேட்டையின் பிரம்மாண்டத்தையும், முதல் போட்டிருப்பவர்களின் அவசரத்தையும் புரிந்து கொள்ள உதவும் ஒரு கோட்டுச் சித்திரத்தை வழங்கும்.

ஒருகாலத்தில் தண்ட காரண்யா என அழைக்கப்பட்ட இக்காடு, மேற்கு வங்கத்தில் தொடங்கி ஜார்க்கண்ட், ஒரிசா, சத்தீஸ்கர், மற்றும் ஆந்திர – மகாராட்டிர மாநிலங்களின் சில பகுதிகள் எனப் படர்ந்து விரிகின்றது. இது காலங்காலமாய் இந்தியாவின் கோடிக்கணக்கான பழங்குடி மக்களுக்குத் தாயகம். இப்போதெல்லாம் இந்தப் பகுதியை ’சிவப்புத் தாழ்வாரம்’ அல்லது ’மாவோயிஸ்டுத் தாழ்வாரம்’ (Maoist corridor)என செய்தி ஊடகங்கள் அழைக்கத் துவங்கியுள்ளன. இதனை ‘எம்.ஒ.யு.-யிஸ்ட் தாழ்வாரம்’ (MoUist corridor -புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பிரதேசம்) என்று அழைப்பதே சாலப் பொருந்தும். ஏனென்றால் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 5-வது பிரிவு பழங்குடி மக்களுக்கு வழங்கியிருக்கும் பாதுகாப்போ, நிலங்களிலிருந்து அவர்களை வெளியேற்றக் கூடாது என்ற வாக்குறுதியோ ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை. அரசியல் சட்டம் பார்க்க அழகாக இருக்க வேண்டுமென்பதற்காக, ஒரு திரைச்சீலையாக, ஒரு அவசர முகப்பூச்சாகத்தான் அப்பிரிவு இடம் பெற்றிருக்கின்றது எனத் தோன்றுகிறது.

நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஊர் பேர் தெரியாத நிறுவனங்கள் முதல், உலகின் மாபெரும் சுரங்க மற்றும் இரும்பு நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா வரை அனைவரும் பழங்குடி மக்களின் தாயகத்தை அபகரித்துக் கொள்வதற்குப் போட்டி போட்டுக் கொண்டு பாய்கின்றனர்.

ஒவ்வொரு மலையின் மீதும், ஒவ்வொரு நதியின் மீதும், காட்டின் பசும்புற்திட்டுகள் மீதும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கின்றது. கற்பனைக்கு எட்டாத அளவிலான ஒரு சமூக மற்றும் சூழலியல் மாறாட்டத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆயினும், இவற்றில் பெரும்பாலானவை இரகசியங்கள். இவை குறித்த விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியாது.

உலகின் ஆகப் பரிசுத்தமானதொரு காட்டையும், அதனைச் சார்ந்த சூழலமைப்பையும், அதில் வாழும் மக்களையும் சேர்த்து அழிப்பதற்குத் தீட்டப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் குறித்து, கோபன் ஹேகனில் நடைபெறவிருக்கும் தட்ப வெப்ப மாற்றம் குறித்த மாநாட்டில் விவாதிக்கக் கூடும் என்று நான் ஒருக்காலும் நினைக்கவில்லை. நமது 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள், மாவோயிஸ்டு வன்முறை குறித்த மயிர்க்கூச்செரியும் கதைகளுக்காக அலைந்து திரிகின்றனர். உண்மையான கதை கிடைக்காவிடில் ஒரு கட்டுக்கதையைத் தயாரிக்கின்றனர். ஆனால், கதையின் இந்தப் பக்கம் குறித்து அவர்களுக்கு சிறிதும் நாட்டம் இருப்பதாய் தெரியவில்லை. ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

அவர்களை பக்திப் பரவசத்துக்கு ஆளாக்கியிருக்கும் ‘வளர்ச்சியாளர் குழுவினர்’ (development lobby), சுரங்கத் தொழிலின் வளர்ச்சியானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியை கற்பனைக்கெட்டாத வேகத்தில் முடுக்கி விடுமென்றும், வெளியேற்றப்படும் மக்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பை வாரி வழங்குமென்றும் கூறி வருகிறார்களே, அதன் தாக்கமாகவும் இருக்கலாம். ஆனால் சுற்றுச்சூழல் நாசம் தோற்றுவிக்க இருக்கும் படுபயங்கரமான பேரழிவின் ‘விலை மதிப்பை’ இவர்கள் தங்கள் கணக்கில் சேர்ப்பதில்லை. அவர்கள் முன்வைக்கும் குறுகிய வரம்புகளுக்கு உட்பட்டே பார்த்தாலும் கூட இந்தக் கூற்று ஒரு அப்பட்டமான பொய்யாகும்.

கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதி சுரங்கக் கம்பெனிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் போய் விடும். அரசாங்க கஜானாவுக்கு வருவதோ 10% க்கும் குறைவான தொகை தான். வெள்ளமென வெளியேற்றப்படும் மக்கள் கூட்டத்தில், ஒரு சிறு துளிக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும். அவர்களும் அடிமைக் கூலியை ஈட்டுவதற்காக, கவுரவமற்ற முதுகெலும்பை முறிக்கும் வேலைகளையே செய்ய வேண்டியிருக்கும். வெறி கொண்டு பொங்கும் இந்தப் பேராசைக்கு வளைந்து கொடுத்ததன் மூலம், நமது சுற்றுச்சூழலை பலி கொடுத்து, பிற நாடுகளின் பொருளாதாரங்களுக்குத்தான் நாம் வலிமை சேர்க்கின்றோம்.

புரளும் பணத்தின் அளவு இத்தனை பிரம்மாண்டமாக இருக்கும்போது, இதில் ஆதாயம் பெறும் பங்குதாரர்களை அடையாளம் காண்பது அத்தனை எளிதல்லவே. சொந்த ஜெட் விமானத்தில் மிதக்கும் சுரங்கக் கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரியில் தொடங்கி, மாதம் இரண்டாயிரம் ரூபாய் காசு வாங்கிக்கொண்டு, தம் சொந்த மக்களையே வல்லுறவுக்கு ஆளாக்கி, கொலை செய்து, கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தி சுரங்க வேலை தொடங்குவதற்கு இடத்தை காலி செய்து கொடுக்கின்ற, மக்கள் படையின் (சல்வா ஜுடும்) பழங்குடி இன சிறப்பு காவல் அதிகாரிகள் வரை – முதல் நிலை, இடை நிலை, கடை நிலை எனப் பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப் பங்குதாரர்களின் உலகம்.

இவர்கள் ஒவ்வொருவரும் தமது நலனையும், தாம் பெறும் ஆதாயங்களையும் பிரகடனம் செய்யத்தேவையில்லை. பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்டு, தமது நலன்களை மேம்படுத்திக் கொள்ள இவர்கள் அனைவரும் தாராளமாக அனுமதிக்கப்படுகின்றார்கள். எந்த அரசியல் கட்சி, எந்தெந்த அமைச்சர்கள், எம்.பிக்கள், அரசியல்வாதிகள், எந்தெந்த நீதிபதிகள், எந்தெந்த அரசு சாரா நிறுவனங்கள், எந்தெந்த சிறப்பு ஆலோசகர்கள், எந்தெந்த போலிசு அதிகாரிகள் ஆகியோருக்கு இந்தக் கொள்ளையில் நேரடிப் பங்கு இருக்கிறது, அல்லது மறைமுகப் பங்கு இருக்கிறது என்பதை நாம் எப்படி, எந்தக் காலத்தில் தெரிந்து கொள்ள முடியும்? மாவோயிஸ்டுகளின் சமீபத்திய ‘அட்டூழியம்‘ குறித்த சூடான செய்தியை வெளியிடும் எந்தெந்த பத்திரிகைகள், ‘களத்திலிருந்து நேரடியாகச் செய்தி வழங்குகின்ற‘ – அல்லது தெளிவாகச் சொன்னால், களத்திலிருந்து செய்தி வழங்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்ற, இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், களத்திலிருந்து அப்பட்டமாகப் புளுகுகின்ற – எந்தெந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தக் கொள்ளையின் பங்குதாரர்கள் என்பதை நாம் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் பன்மடங்கு அதிகமான தொகையை, பல்லாயிரம் கோடி டாலர்களை இரகசியமாக ஸ்விஸ் வங்கியில் பதுக்கியிருக்கின்றார்களே இந்தியக் குடிமகன்கள்… அந்தப் பணத்தின் ரிஷிமூலம் எது? எங்கிருந்து வந்தது? சென்ற பொதுத்தேர்தலில் செலவிடப்பட்ட 2 பில்லியன் டாலர் பணம் எங்கிருந்து வந்தது? அல்லது தேர்தலுக்கு முந&